சனி, 1 ஆகஸ்ட், 2009

விநாயகரும் விழாக்களும்

இரண்டு மூன்று நாட்களாக எல்லா தொலைகாட்சிகளிலும் விநாயகர் வண்ணமயமாகக் காட்சி கொடுக்கிறார்.
செய்தித் தொகுப்புகளைப் பார்க்கும்போது தோன்றியவை:
 
செய்திகள் எல்லாமே விநாயகர் சிலை செய்பவரை மட்டுமே சுற்றி வருவது போலிருக்கிறது.  உண்மையில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும் காரணங்கள் முறைகள் பற்றிப் பேசுவதை விட மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், சிலைகளின் உயரத்துக்கான உச்ச வரம்பு, ஊர்வல வழி குறித்த போலீஸ் கட்டுப் பாடுகள் இவை பற்றியே அதிகம் பேசுகின்றன.
 
விவசாயம் மட்டுமே முதன்மையாக இருந்த காலத்தில் கொண்டாடப் பட ஆரம்பித்த விநாயக சதுர்த்தி விழாவின் காரணங்கள் என நமக்குத் தோன்றுவது:
 
அடுத்த சாகுபடி காலத்துக்கு முன் வயல்களின் வரப்புகளைத் திருத்தி அமைக்க வேண்டும்.  கிராமத்தில் இருக்கும் எல்லோரும் அவரவர் வீட்டுக்கு கொஞ்சம் கொண்டு போனால் சென்ற முறை பாசன நீருடன் வந்த களிமண்ணை எடுத்து வரப்புகளை சீர் படுத்திய பின்னும் கொஞ்சம் பாக்கி இருக்குமே அதை எப்படி அங்கிருந்து வெளியேற்றுவது என்பதில் ஆரம்பித்து, வயலில் மண்டிக் கிடக்கும் எருக்கு போன்ற களைகளை அப்புறப்படுத்தலில் தொடர்ந்து, சிறார்களின் கவனத்தைத் திருப்ப வித விதமான உணவு வகைகளை உள்ளடக்கி, பின் கிராமத்தில் இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட [அதே சமயம் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளவும்!] ஒரு சந்தர்ப்பம், பின் ஊரே ஒன்று கூடி நீர்நிலைகளில் சிலைகளைக் கரைத்தல் என்பதுடன், 
 
எருக்க வேரில் செய்யப்பட்ட பிள்ளையாரின் மகிமைகள் ஒரு பக்கம், எருக்கம் பூவில் தொடுக்கப் பட்ட மாலைகள் விநாயகரின் பிறந்த நாள் ஆபரணங்களில் முதன்மை இப்படி இன்னும் நமக்குத் தெரியாத எத்தனையோ!
 
மராட்டிய மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொண்டாட்ட முறைகள் சற்று அதிகமாகக் கடை பிடிக்கப்பட ஆரம்பித்த பின்னர்தான் வர்ணம் பூசிய சிலைகள், பெரிய அளவிலான ஊர் வலங்கள், கூடவே கட்டுப்பாடுகள் ஆகியவை வந்து விட்ட மாதிரி இருக்கிறது.
 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
 

13 கருத்துகள்:

  1. நம்மூரில் அதிகம் பேசப் படும் நாயகர் விநாயகர்தான். முக்குக்கு முக்கு பிள்ளையார் கோவில் இருந்தால் அலுத்துப் போகுமா? அல்லது புகழ் கூடுமா?

    பதிலளிநீக்கு
  2. விநாயகர் என்றாலே ஞாபகம் வருவது கொழுக் கட்டைதான்... அதில்தான் எதனை வகை? ஆனால் கொழுக் கட்டை செய்வதில் விற்பன்னர்கள் கிடைப்பதுதான் துர்லபம். அது பற்றி தனிக் கட்டுரை வருமா?

    பதிலளிநீக்கு
  3. திருவிழாக்கள் எல்லாமே மக்களுக்கு ஒரு மாறுதலுக்காகவும் ஏழைகள் பிழைப்பு காப்பாற்றப் படவும்தானே... அந்தக் காலத்தில் எல்லாமே ஒரு காரணத்துக்காக ஏற்படுத்தி வைத்தார்கள்... இப்போது அவற்றைக் குருட்டுத் தனமாக பின்பற்றும்போது அர்த்தங்கள் புரிவதில்லை....பூனையைக் கட்டிப் போட்டு பாடம் நடத்தும் குரு போல.....

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் சிற்றில் ஆகிவிடுவதுடன் அதிகம்
    இடர்பாடின்றி குறைந்த நடை தூரத்திலேயே
    விநாயகரைப் பார்த்து விட முடிவதால்
    நீங்களும் கூடிய விரைவில் அவருடன் போட்டி
    போடும் அளவுக்குப் பெரிய தொப்பையுடன்!

    என்னதான் முயன்றாலும் சாண்டில்யன் போல
    நீளமாய் வாக்கிய அமைப்பு வர மாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் கொஞ்ச நாள் போனால் நம் ப்ளாக்கிலும்
    சமையல் பகுதி தொடங்கி , கொழுக்கட்டை நிபுணர்கள்
    தம் கை வரிசையைக் காட்ட தயார்.

    பதிலளிநீக்கு
  6. சாண்டில்யன் போல " நீல"மாய் எழுதாமல் இருந்தால் சரிதான்!
    T-I-C

    பதிலளிநீக்கு
  7. வீதி தோறும் விநாயகர் என்று ஒரு கவிதை எழுதவும் தயார்.

    பதிலளிநீக்கு
  8. கொழுக் கட்டை - ரொம்ப ஈஸிங்க!
    சாப்பிடுவது - சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  9. எருக்க வேரில் பிள்ளையார் மிகவும் விசேஷம் என்றவுடன் கண்ணில் பட்ட எருக்கன் செடியை எல்லாம் கெல்லி எடுத்து வேரை செதுக்கி பிள்ளையார் பண்ணி தாமும் பயன் படுத்தி, தானமும் செய்வோர், பெரிய பிள்ளையாருக்கு பெரிய மாலை என்று கண்ணில் பட்ட எருக்கம் பூவை எல்லாம் திரட்டுபவர், பின் தை மாதத்தில் வரும் ரத சப்தமி அன்று எருக்க இலைகளைப் பறித்து வந்து விடுபவர்கள் இவர்களை எல்லோரையும் தாண்டி எருக்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவதில் விநாயகர் பெரும் பங்கு வகிக்கிறார். முன்னோர்கள் மூடர்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. //விற்பன்னர்கள் கிடைப்பதுதான் துர்லபம். அது பற்றி தனிக் கட்டுரை வருமா?//
    செய்யலாமே, சுதாராணி ரகுபதி கூடத்தான் பரத நாட்டியம் பற்றி கட்டுரைகள் எழுதுகிறார்!

    பதிலளிநீக்கு
  11. படிப்பவர்கள் எல்லோரும் பாரதம் எப்படி ஆடுவதில்லையோ அப்படியே கொழுக்கட்டை செய்வதும் ஏட்டுச்சுரைக்காய் தான் என்கிறீர்களா? பொறுத்திருந்து பாருங்கள் இப்போதுதானே பதினெட்டுப் படி [ப்பாளிகள் ] வரை வந்திருக்கிறீர்கள்? கூட்டம் சேர்ந்த பின் தான் கூத்தாடியால் வித்தை காட்ட முடியும்.

    பதிலளிநீக்கு
  12. களி மண்ணை வரப்புகளிலிருந்து அகற்றினாலும் இரு காதுகளுக்கிடையே இருந்து அகற்றினாலும் உங்கள் வாழ்வு வளம் பெறும்.
    களை எடுத்தல் எல்லார் பொறுப்பும் - காமராஜுக்கு மட்டும் சொந்தமல்ல என்று புரிய வைக்கும் விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
  13. நம் பாரம்பரியத்தில் காணப்படும் ஒரு வழக்கமான விஷயம் "பெரியவர்கள் அந்தக் காலத்தில் செய்ததற்கு அறிவு பூர்வமாக இதுதான் காரணமாக இருக்க வேண்டும் " என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றுக்கும் அறிவு பூர்வ காரணங்களை கண்டு பிடித்துக் கொண்டிருப்பது. உதாரணமாக, பிராமணர்கள் சாப்பிடும் போது இலையை சுற்றி நீர் தெளித்து சில மந்திரங்களை சொல்வார்கள். இதற்கு எறும்பு போன்ற பூச்சிகள் சாப்பிடும் உணவை வந்தடையாமல் காப்பதுதான் காரணம் என்று ரொம்ப கஷ்டப்பட்டு கண்டு பிடித்துச் சொல்வார்கள். இது உண்மையாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இப்படி சொல்லப் பட்டிருக்கக் கூடாதல்லவா?

    விநாயகர் வழிபாடு நாளில் மண் பொம்மை செய்வதற்கு சொல்லப் படும் காரணமும் இது போன்ற அதீத கற்பனையாகத்தான் எனக்குப் படுகிறது. இதே ரீதியில் ராம நவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி போன்றவற்றுக்கும் காரணங்கள் கண்டு பிடிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

    வழிபாடு என்ற பெயரில் இப்போது அடிக்கப் படும் கூத்துக்கள் அடுத்தவன் நிம்மதியைக் கெடுத்து நம் நம்பிக்கையை தமுக்கடித்துத் தெரியப் படுத்திக் கொள்வதுடன் சந்தடியில் கொஞ்சம் சில்லரையும் பார்ப்பதுதான் என எனக்குப் படுகிறது.

    என்னைப் பொறுத்தவரையில், எனக்குப் படுகிறது என்று முன்னுரையிட்டு என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். என்னைப பொறுத்தவரை xyz க்கு மிஞ்சிய தலைவர் / நடிகர் / புத்திசாலி உலகில் இல்லை என்பது மாதிரி..

    எனவே, இது என்னுடைய அபிப்பிராயம். உங்களது என்னவோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!