வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

டாப் ட்வெண்டி ++

    
முழுப் பெயர்களும் பெரும்பாலும் எங்கள் ப்ளாக் இடப் பக்க வரிசையில் கருத்துரைத்தவர்கள் பகுதியில் உள்ளன. 

முதலில் எல்லா கட்டங்களையும் நிரப்புபவர் யார் என்று பார்ப்போம்.
     
இடமிருந்து வலம்:


C1 - C2, A1-A4, B1-B4 : நாங்களும் கொத்திப் போட்டுட்டோம். மன்னிக்கவும்.

C4-C10 : பாடுவாரோ இல்லையோ தெரியவில்லை. பதிவுகள் சுவையாக இருக்கும். முதல் அஞ்செழுத்துக்கள் கொண்டு தமிழ்ப் படங்கள் நிறைய வந்துள்ளன.

D2-D5: அமெரிக்க சாமியே சரணம்.

D9-D10: இப்போ 'எல்'லாம் இவருக்'கே' அடிக்கடி வடை.

E1-E3: இவரு இதுவரை எங்கள் ப்ளாகில் கமெண்ட் போட்டதில்லை. D2-D5 ஜொள்ளருக்காக இங்கே வந்திருக்காரு போலிருக்கு!

E4-E5: பதிவுகளிலும் கமெண்டுகளிலும் கவிதை எழுதும் குழந்தை நிலா

G8-G10: லேட்டாக வந்து சேர்ந்துகொண்டவராயினும் நிறைய கருதுரைப்பவர்.

H1-H5: கவிஞர், மென்பொருள் ஆளர். புதுமை விரும்பி.

 

மேலிருந்து கீழ்:

A5-E5 : மோர்ஸ் கோட் மற்றும் பேப்பர் அளவு பற்றிய புதிருக்கு பதில் கூறி அதிக பாயிண்டுகள் பெற்றவர்.

A6-E6: ஊர் பெயரைக் காணோமே! ! இங்கே குறும்பு ஏதும் செய்யவில்லையே?
                  

A7 - I7 சுவையானப் பதிவுகள் போடுபவர்; இட்லிக்குப் பெயர் போனவர்.

D1-G1: எ பி,  இ ந ஏ, முகநூல், ட்விட்டர் - எல்லாவற்றிலும் எங்களைப்

பின் தொடர்பவர். அந்தக் காலத்தில் இது நம்ம ஏரியா வில் நிறைய படங்கள் போட்டவர். 
                  
E2-H2: எங்கள் பதிவில் எஸ் பி எஸ் பட்டம் பெற்றவர்களில் ஒருவர். எங்கள் ப்ளாக் பதிவுகளில் இவர் கருத்து இல்லாத பதிவு மிகவும் குறைவு.
             
E5-H5 : இந்த மன்னை மைந்தர்களில் ஒருவர், தன வலைப்பூ பெயர், தன் ப்ரோஃபைல்  பெயர் ஆகியவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்.
        
F3-J3: அப்பாD - இதை முதலிலேயே இங்கே போட மறந்துவிட்டோம் - மூன்று முறைகள் தலையில் குட்டிக் கொள்கிறோம்!
    
F6-I6 : இயற்பெயர் மூன்றெழுத்து, , இந்த வலை ஆசிரியர் பெயர் ஏழு எழுத்து, ஆனால் அவருடைய பெயரை அவர் எப்பொழுதும் இந்த நான்கெழுத்தால் குறிப்பிடுவார்; ஐந்து வலைகள் இவர் ஆளுகையில் !
     
H2-J2: சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதோ இல்லையோ - இவர் கருத்துகள் எங்கள் ப்ளாகில் உங்கள் கண்களில் அதிகம் படும்.
    
F4-J4: ஏழு எழுத்து வலைப்பூ, எழுதும் ஐந்தெழுத்து ஆசிரியர். கட்டுரை, கவிதை காமிரா போட்டிகள் இவர் பங்கேற்றால், நமக்குப் பரிசு கிடையாது. , எல்லாப் பரிசுகளும் இவருக்கே!

கீழிருந்து மேல்:
  
G9-E9: இவர் பெயரில் ஒரு முன்னணி தமிழ் நடிகர் உண்டு. செடி, கொடி, மரம் பற்றி நிறைய விவரங்கள் தெரிந்தவர்.

 

எல் ஷேப்:

A9-C9.C10 : இவங்களைப் பற்றி நாங்க சொல்லமாட்டோம். நீங்கதான் சொல்லணும்.

F9, F8-D8: நகைச்சுவையையும், , நல்ல சுவையான தகவல்களையும் , இதய பூர்வமாகப் பதிவே(பே)த்துபவர்.

I6, J6-J10: 'இது நம்ம ஏரியா' பதிவில் நிறைய படங்கள் போட்டுக் கலக்குபவர். சமீபத்திய எங்கள் ப்ளாக் பதிவில், இவர் பதிந்த கருத்து ஒன்றுக்கு, ஆசிரியர் குழு 'ஆஹா' சொன்னது!

 

பிட்டு பிட்டாக:

H8-H10, I8-I10, J10: நம் தாய் மொழி தோன்றிவிட்டது! !
      
F4,G4,A10,J1,I2,I1: மெல்லிசை மன்னர்களில் ஒருவர். பெயர். ஆனால் இசை உலகை விட இணைய உலகில் அதிகம் பெயர் பெற்று வருகிறார். முதல் இரண்டெழுத்துகள் இங்கே இல்லை. அதனால் 'கோபி' க்க மாட்டார் என்று நம்புகிறோம். .
     
C3, A8,B8, B10,E10,F10 = வண்ணப் பெட்டிகள் : உங்கள் பெயர் ஆறு எழுத்துகளுக்குள் இருந்தால், எங்கள் வாசகராக இருந்தால், அதிகம் கருத்துரைத்தவர் என்றால், உங்கள் பெயரை இங்கே நிரப்பி எங்களுக்கும் சொல்லுங்கள். ஆறு எழுத்துகளுக்கு மேலே என்றால், மற்ற கட்டங்களிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.  
                               

புதன், 23 பிப்ரவரி, 2011

ஆனந்த அதிர்ச்சி 02

                         
அந்த தாயத்து அணிந்த நாள் முதல் அனந்தராமனுக்கு நினைத்ததெல்லாம் நடக்கா விட்டாலும், வழக்கமாக அவர் செல்லும் கடை கண்ணிகள், கோவில் குளம், ஜோதிடர் இப்படி எங்கென்றாலும் - அரசாங்க அலுவலகங்கள் தவிர - கூடிய மட்டும் இவர் தேவைகளை அனுசரித்தோ அல்லது இவரின் எதிர்பார்ப்புகளை அனுசரித்தோ எல்லாம் நடந்தேறின. நம்ப முடியவில்லை; என்றாலும் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
           
 பையனின் கல்லூரி அனுமதி குறித்துத் தெரிந்து கொள்ள இரண்டு வெவ்வேறு ஜோதிடர்களை அணுகி ஆலோசித்த பொழுதுதான் இவருக்கு சந்தேகம் தட்டியது.
                   
தாயத்தின் சக்தி மீது அல்ல. ஜோதிடர்களின் திறமை பற்றி. ஒருவர் என்னடாவென்றால் தாம் இருக்கும் குடியிருப்பிலேயே ஒரு ஓரத்தில் இருந்து பார்த்தவர் போல அவ்வளவு விவரமாக சொல்கிறார். இன்னொருவர் கிரஹ சஞ்சாரங்களைப் பற்றி முன்னவர் போலவே பேசினாலும், தனிப்பட்ட விவரங்களில் கொஞ்சம் கூடத் தெளிவின்றி என்னென்னவோ சொல்லிக் கொண்டு போனார்.    
            
ஆகையால் முன்னவரிடமே மற்ற யோசனைகளையும் கேட்க வேண்டும் அன்று கைக்குட்டையில் முடி போட்டுக் கொண்டார்.    
        
அடுத்த இரண்டு வாரங்களில் அவருக்கு ஆச்சரியமான ஆச்சரியம் காத்திருந்தது. மின் கட்டணம் பற்றி தன் சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ள அருகிலிருந்த துணை மின்  பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றவர் மயக்கம் போட்டு விழாத குறை. இவர் பற்றியும் இவர் வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் பற்றியும் அவர்களுக்கு நிறையவே தெரிந்திருந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நம்மைப் போல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் ரகமல்ல என்றாலும், "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது " என்று திருப்திப் பட்டுக் கொண்டார்.     
                         
அனந்த ராமனின் வாழ்க்கையில் வந்த வசந்த காலம் அடுத்த சில வாரங்களில் திடீரென முடிவுக்கு வந்தது. தாயத்து வந்து சேர்ந்த சனிக் கிழமைக்கு முன்பு இருந்த நிலைக்கு மாறியதன் காரணம் அவருக்கு விளங்கவில்லை. ஒருக்கால் அந்த தாயத்தை மீண்டும் ஒரு பூஜையில் வைத்து ரீ சார்ஜ் செய்ய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.         
             
அந்த நாளும் வந்தது !    

(இன்னமும் ஆனந்த அதிர்ச்சி 01 பகுதியில் கேட்ட கேள்வி ஓபன் ஆக இருக்கின்றது. ஒருவர் மட்டும் சற்றேறக் குறைய சரியான யூகம் செய்துள்ளார்:: அவர் யார் என்று இப்போ சொல்ல மாட்டோம்! மாதவன் - உங்க யூகம் இருபத்து நான்காம் தேதிக்குள் பதிவாகுமா? )

ஆனந்த அதிர்ச்சி மூன்றாம் சுழியில் சாரி - மூன்றாம் பகுதியில் சரியான பதில் வரும் என்று நம்புவோம் - வலையாபதி ஆர் யு லிசனிங்?
               

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பேப்பர் கேள்விகள்


அ)  A4 சைஸ் - அளவுகள் என்ன? (மி.மீ X மி.மீ கணக்கில்)

ஆ)  ஒரு A4 SIZE ஜெராக்ஸ் 80 GSM தாளின் எடை எவ்வளவு கிராம்?

இ)  75 GSM தாளை விட அதிகமா அல்லது குறைவா?

ஈ)  80 GSM தாள், 75 GSM தாளை விட எவ்வளவு அதிகம் அல்லது குறைவு?

இந்த நான்கு  கேள்விகளில் எதற்கு சரியான பதில் பதிவு செய்தாலும், பாயிண்டுகள் உண்டு. (ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு பாயிண்டுகள்)

வாசகர்கள் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு, எவ்வளவு சீக்கிரமாக சரியான பதில் பதிவு செய்கின்றார்களோ அதைப் பொருத்தும்கொடுக்கப்படும் பாயிண்டுகள் மாறும்.  
                      

திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஆனந்த அதிர்ச்சி 01

               
அனந்தராமனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்!    
                        
கொஞ்ச நாட்களுக்கு முன் பொழுது போகாமல் தொலைக்காட்சியில் சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார்.  அப்பொழுது தொலைபேசியில் யாரோ அழைக்கவும் தொலைக்காட்சியை மௌனம் காக்க வைத்து விட்டு, தொலைபேசியில் பேசியவர் சொன்ன விவரங்களைக் கையில் இருந்த பேப்பரில் குறித்துக் கொண்டார். பிறகு தொலை பேசியில் தொடர்பு கொண்டவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பின நினைவு. பிறகு அதைப் பற்றி அறவே மறந்தும் போனார். சென்ற வாரம் நண்பருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு பார்சல் வந்து சேர்ந்தது. கொண்டு வந்தவர், பணம் மூவாயிரத்து நூறு வங்கிக் கொண்டு பார்சலைக் கொடுத்து விட்டுப் போனார். ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்றறிந்த அனந்தராமன்,  அதை நண்பர் முன் வெளிப்படுத்த வேண்டாம் என்று தாம் ஏதோ அந்தப் பார்சலை எதிர் பார்த்திருந்த மாதிரி ஒரு பாவனையுடன் அதைக் கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு வந்தார்.  நண்பருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். நண்பர்  கிளம்பிப் போன பின், மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார். முன்னொரு சமயம் தொலைக்காட்சியில் தங்க வேட்டை நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் முப்பத்தியாறு குறுஞ்செய்தி அனுப்பின மாதிரி முட்டாள்தனமான காரியம் எதுவும் செய்திருக்கவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டார். பின் பார்சலில் என்ன தான் இருக்கும் என்ற குறு குறுப்பில் அதைப் பிரிக்கவும் செய்தார்.    
                          
உள்ளே இருந்த பொருள்கள் பார்த்து ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மறு புறம் இது யாருடைய வேலையாக இருக்கக்கூடும் என்ற கேள்வியுடன் தொடர்ந்தவர் உள்ளே இருந்த கடிதத்தில் அவரது பெயர், தொலை பேசி எண் இவற்றைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டார். பின் ஒரு மாதிரியாகத் தாம் ஒரு பேப்பரில் குறித்த எண்ணுக்குத் தம் பெயர் விலாசம் இவற்றை குறுஞ்செய்தியாக அனுப்பியதும் நினைவுக்கு வந்தது.              
                       
உள்ளே இருந்தது ஒரு தாயத்து. சனிக்கிழமை ஒன்பது முதல் பத்தரை தவிர எந்த நேரத்திலும் ஒரு சின்ன பூஜை செய்து விட்டு பின்னர் அணிந்து கொள்ளலாம். அணிந்த சிறிது நேரத்திலேயே நல்ல செய்தி உங்களைத் தேடி வருவது கண்டு ஆனந்தமடைவீர்கள் என்ற குறிப்பு வேறு! ஒரு தட்டில் வைத்து சாமி படத்துக்கு ஒரு பூ போட்ட பின் ஒரு கல்பூர வில்லையையும் ஏற்றி ஆரத்தி காட்டினார். அதற்குப் பின் தாயத்தை எங்கே கட்டிக்கொள்ளலாம் (கழுத்தில்? கையில்? இடுப்பில்?)  என்று சற்று யோசனை செய்த பின், இடுப்பு நல்லது. நிறையப் பேருக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கலாம் என்று இடுப்பில் கட்டிக்கொண்டார்.    
           
அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கொடுத்த அதிர்ச்சிகளிலிருந்து மீண்டு, பழைய அனந்த ராமனாக மாற அவருக்கு சற்று  காலம் பிடித்தது. அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்களா - ஆனந்த அதிர்ச்சி இரண்டாம் பதிவில் சொல்கிறேனே.
 
(அப்படி என்ன நடந்திருக்கும், எதனால்  என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.  சரியான யூகம் செய்பவர்களுக்கு பாயிண்டுகள் அளிக்க பதிவாசிரியர் தயாராக உள்ளார்.)
        

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

சிறு மெழுகும் பேரிங் கழற்ற உதவும்!



மின் விசிறி நின்று போனது. 

கையால் சுற்றுவதே கடினமாக இருந்ததால், பக்கத்தில் இருக்கும் மின் கருவி பழுது பார்ப்பவரை அழைத்தோம்.       
                  
சுமார் ஒரு மணி நேரத்தில் விசிறியைக் கழற்றி பேரிங்குகளை மாற்றித் திரும்பவும் மாட்டி விட்டார். மேல் பக்கம் இருந்த 6202 பேரிங்கைக் கழட்டுவதிலும் மாற்றுவதிலும் எந்த சிக்கலும் இல்லாமல் செய்து விட்டார். ஆனால் கீழே இருந்த 6201 பேரிங்கைக் கழற்ற என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அவர் பாதி வேலை செய்து முடித்த பின் தான் இதைப் படம் அடுத்து மற்ற நேயர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்ற, அவ்வாறே செய்துள்ளேன்.

ஒரு குழியில் பொருத்தப் பட்டிருக்கின்ற ஓடி உழைத்த பழைய பேரிங்கைக் கழற்றுதல் சுலபமான வேலை அல்ல. இந்த முறையைப் பயன்படுத்தி, சுலபமாக சர்வீசிங் செய்யலாம்.

வேண்டிய உபகரணங்கள்:
* மெழுகுவர்த்தி (குறைந்தபட்சம் கட்டைவிரல் பருமன் உள்ளது ஒன்று)
* பேரிங்கின் நடுப் பகுதியில் நுழையும் அளவுக்கு ஒரு உலோக உருளை.
* ஒரு சிறிய சுத்தி(யல்).
* கொஞ்சம் பொறுமை,
   
படம் 1 - பேரிங் நடுப்பகுதியில் மெழுகு.
   
படம் 2 - பழைய பிறந்தநாள் வர்த்தி உபயோகப் படுகிறது
           
படம் 3,4,5,6  மெழுகை வைத்து அடிக்க அடிக்க பேரிங் மேலே வருகிறது



 

படம் 7,8 மெழுகை எடுத்து சுத்தம் செய்த பின் புது பேரிங் போட குழி ரெடி.
 










(வாசகர்களும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற எளிய யுக்திகளை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!)
    

வியாழன், 17 பிப்ரவரி, 2011

மாம்ப(பா)லம்

                
எல்லோர் முகத்திலும் வெறுமையான பரபரப்பு...பரபரப்பான வெறுமை...ஏதோ ஒன்று இருந்தது. பீக் அவர்ஸ் அவஸ்தை.
                             

சென்னை பரபரப்புக்கு எத்தனை பஸ், எத்தனை எலெக்ட்ரிக் டிரெயின்கள் விட்டாலும் போதவே போதாது. ஆரம்பமாகி விட்டது மறுபடி ஒரு நாள்...   
         
வியர்வை நெடி, சாராய நெடி, மல்லிகை வாசனை, வித விதமான பவுடர், சென்ட்களின் நெடி...ஒற்றைக் கையால் மேலே தொங்கிய இரும்பு கைப்பிடிகளைப் பிடித்த படி மக்கள் வெள்ளம்.

பெரும்பாலும் தெரிந்த முகங்கள்..தினமும் பரபரப்பாய் காலை ஓடுவதும் மாலை களைத்த முகத்துடன் திரும்புவதும் வழக்கம். திரும்பும்போது சில காலை பார்த்த முகங்களுடன் பல புதிய முகங்களும் இருக்கும்.

எந்த ஸ்டேஷனிலும் கூட்டமில்லாமல் இல்லை. அலை அலையாக மக்கள்...

திடீரென ட்ரெயின் நடு வழியில் நின்று விட்டது. என்ன காரணமோ...

"நின்னு போச்சு...என்ன இழவாச்சோ...லேட்டாறதே..." முதல் குரல்.

"தினமும் ரோதனை...ஒரு நாளாவது ஆஃபீசுக்கு நேரத்துக்குப் போவ முடியாது..." என் ரெயில் தோழியின் குரல்.

"ஏன்..நீ சீக்கிரம் கிளம்பறது..." இன்னொருத்தி.

"இன்னிக்கி பஸ்லயாவது போயிருக்கலாம்..."

"பஸ்லயா... அங்க பார்..." ஒருத்தி கேலியாக அருகில் தெரிந்த ரோடைக் கை காட்டினாள். அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி அடைத்து நின்றிருந்த காட்சி எந்த ஆபீஸ் போகிறவர்களையும் கலவரப் படுத்தும்! எந்த அரசியல்வாதி நகர்வலம் போறாரோ...இல்லை என்ன போராட்டமோ...

"இந்த தினப்படி அவஸ்தைக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்.." அகிலா சற்று அதிகப் படியான உணர்ச்சி காட்டினாள்.

எனக்குப் பேசக் கூடப் பொறுமை இல்லை. காலை அவருக்கும் எனக்கும் நடந்த லடாயில் மனம் நின்றிருந்தது. ."இப்படியே சண்டை போட்டீங்கன்னா ஒரு நாள் 'சட்'டென எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிடுவேன்.." என்று கத்தி விட்டு வந்திருந்தேன். என் சின்னப் பையன்தான் பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.கிளம்பும்போது மெல்ல அருகில் வந்து "அம்மா...சாயங்காலம் சீக்கிரம் வந்துடு அம்மா...நீயும் நானும் கோவில் போகலாம்னு சொல்லியிருந்தியே...போலாம்மா..." என்றான். எனக்கு அவன் கவலையும் பயமும் புரிந்தது. சிரித்துக் கொண்டே அவன் கன்னத்தைத் தட்டி விட்டு வந்திருந்தேன்.

"ஏய்....உன்னைத்தான்...என்ன கனவு? தூங்கிட்டியா..." கலாவின் குரல்.

"ச்சே..ச்சே..ஏதோ ஞாபகம்...என்ன..."

"நேத்து நைட்டு டீவில புன்னகை மன்னன் படம் போட்டானே பாத்தியான்னு கேட்டேன்..."

நடந்த சண்டையில் அதுக்கெங்கே நேரம்..."இல்லை..பார்த்த படம்தானே..அதுக்கென்ன இப்போ..?"

"சகுந்தலாவோட பக்கத்து வீட்டுப் பொண்ணு ரெண்டு நாளுக்கு முன்னாலே கொளுத்திகிட்டு செத்துப் போச்சாம்...தற்கொலை செய்யறது கோழைத்தனம்னு சொல்லி திட்டிகிட்டு இருந்தா...அதான் கேட்டேன்...அதுல எடுத்த உடனே அது மாதிரி சீன்தானே வரும்..?"

'சுருக்'கென்றது. இங்கேயும் அதே டாபிக். என்ன ஒற்றுமை. நான் ஒன்றும் சீரியஸ் ஆக தற்கொலை எண்ணத்தில் எல்லாம் இல்லை என்றாலும், காலைதான் அது மாதிரி பேசியிருந்ததால் என்னிடமிருந்து இப்படி பதில் வந்தது. "கோழைத்தனமா...அதுக்கு ரொம்ப துணிச்சல் வேண்டும்..."

"வாழ்க்கைக்கு பயந்து ஓடி பிரச்னைகளை எதிர்க்கத் தெம்பில்லாம சாகறதுக்குப் பேரு துணிச்சலா தங்கம்?" கேலியாகக் கேட்டாள் பிரேமா.

பக்கத்தில் நின்றிருந்த ஆண், பெண் அனைவரும் இப்போது இதை கவனித்ததுடன் அவ்வப்போது அவர்கள் கருத்தையும் சொல்லி வந்தனர்.எனக்கு ஏனோ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமில்லை. மனதில் இனம் தெரியாத பயம் இருந்தது. கதவுக்கு அருகில் நின்றிருந்தோம்.
    
ட்ரெயின் ஏற்கெனவே கிளம்பி ஓடிக் கொண்டிருந்தது.
    
பேச்சு ரெயில் முன் வந்து விழுபவர்கள், தூக்கில் தொங்குபவர்கள், மருந்து குடிப்பவர்கள் என்று பயங்கரமாகவே போய்க் கொண்டிருந்தது.

"என்ன சொல்லு...அது ஒரு நொடி எண்ணம்...அந்த நொடியில தீர்மானிச்சி செய்யறதுதான் தற்கொலை. எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும்...அப்போ மட்டும் அவங்களை நிறுத்திக் காப்பாத்திட்டா போதும்..அப்புறம் அந்த எண்ணம் வராது...கமல் கூட ரேவதி கிட்ட அதுதான் சொல்லுவார் படத்துல..."

"இல்லடி...நிறுத்தி திட்டம் போட்டு பல நாள் யோசிச்சி சூசைட் பண்ணிக்கிறவங்க இருக்காங்க... ஜோதி ஞாபகமில்லை உனக்கு...?

"..................................." இலேசான மௌனத் தயக்கத்துக்குப் பின் "இருக்கலாம்டி...ஆனால் அது ரொம்பக் கம்மி..."

எலெக்ட்ரிக் ட்ரெயின் சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது.

"இதையெல்லாம் வரையறை செய்ய முடியாதுங்க..." என் அருகில் நின்றவன் முதல் முறையாகப் பேசினான். இவ்வளவு நேரம் பேச்சை கவனித்துக் கொண்டே வந்திருக்கிறான் போலும். கண்ணாடி அணிந்து லேசாய் தலை கலைந்து நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் வசீகர இளைஞன்.

ரெயில் மாம்பலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

"எதுக்கு தற்கொலை முயற்சி செய்யறாங்க, என்ன கஷ்டம் இதையெல்லாம் பொறுத்தது...சில தற்கொலைக்கு காரணமே கண்டு பிடிக்க முடியாது......... இருக்காது..." என்று நிறுத்தி புன்னகைத்தவன்,

'சட்'டெனத் திரும்பி மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்த இரயிலிருந்து கீழே குதித்தான்.
     
கீழே லாரி, பஸ்கள் கிரீச்சிட்டு நிற்கும் தாறு மாறான ஓசை நொடியில் கேட்டு தேய்ந்தது.
                       



                  

புதன், 16 பிப்ரவரி, 2011

காஃபி டெக்னாலஜி




காஃபி...
                        
நமக்கு ரொம்பப் பிடித்த விஷயம். ஆனால் நாம் அதைப் பற்றி ரொம்ப சிந்திப்பதில்லை. இருந்த ஒன்று இல்லாமல் போகும்போது இருந்ததன் அடையாளமே அப்போதுதான் உணரப்பட்டு இல்லாத குறை நன்றாகத் தெரியும். ஜீவி சார் இதைப் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. அவர் பெரிய விஷயங்களுக்கு எழுதி இருந்ததை இங்கு சின்ன விஷயத்துக்கு நினைவு கூர்கிறேன்! உயிரில்லாத ஒரு விஷயத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறேன்!
            
குடித்துக் கொண்டே இருந்து விட்டு (காஃபிதாங்க..) நடுவில் இல்லாமல் போனால் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்போதுதான் அதன் அருமை தெரியும்! இரண்டு நாள் முன்பு ஜவஹரின் பதிவைப் படித்ததும் நாமும் ஒரு காபி அடிக்கலாம் என்று தோன்றியது. அது அப்படித்தான்...பக்கத்திலிருப்பவர் காபி குடித்தால் நமக்கும் குடிக்க வேண்டும் என்று தோன்றும்!!
                  
தஞ்சாவூர்க்காரனாக இருந்து விட்டு நல்ல காஃபி பற்றி சொல்லா விட்டால் எப்படி..! டிகாக்க்ஷன் காபிதான் பெஸ்ட். இன்ஸ்டன்ட் காபி வேஸ்ட்.
                       
ஆனாலும் குடிக்கும் காஃபி நல்லா இருக்க வேண்டாமா...எனக்குத் தெரிந்த சில டிப்ஸ்....
                      
முதலில் ஃபில்டர்...
                
ரொம்பப் பெரிய துளைகள் இல்லாமல் சிறிய துளைகள் உள்ள ஃபில்டர் தேவை.
                          
ஈரமில்லாமல் காய்ந்து இருக்க வேண்டும். துளைகள் அடைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
                    
நல்ல காஃபிப் பொடி - பழையதாக இல்லாமல் புதிதாய் - ஸ்பெஷல் கிரேடும், முதல் தரமும் கலந்து அரைத்ததாக இருக்கலாம். கொஞ்சம் சிக்கரி இருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம்தான். இல்லாமல் இருந்தால் காஃபியில் கனம் இருக்காது. நிறைய இருந்தால் காஃபியில் சுவை இருக்காது. (கட்டுப் படியும் ஆகாது!) அரைக் கிலோவுக்கு இருபத்தைந்து கிராம் அல்லது ஐம்பது கிராம் சிக்கரி சேர்க்கலாம்.
                         
அந்த காஃபிப் பொடியை ஃபில்டரில் போடுமுன்பு அரை ஸ்பூன் சர்க்கரையை தூவிக் கொண்டு, ஃபில்டரில் முக்கால் பாகம் வருமளவு பொடியை ஸ்பூனால் சரித்த வகையில் போட வேண்டும். ஸ்பூனால் லேசாக அதை அமுக்கி விட வேண்டும். லேசாகத்தான். பிறகு மேலேயும் லேசாக சர்க்கரை தூவ வேண்டும்.
                     
தண்ணீரைக் நன்றாகக் கொதிக்க வைத்து, கொதிக்கும் போது ஃபில்டரில் தண்ணீரை விட வேண்டும். மூடியோ, டபராவோ போட்டெல்லாம் தட்டக் கூடாது. தானாய் இறங்க வேண்டும்.

முதல் நாலு சொட்டு டிகாக்ஷன் இருக்கே, அதான் விசேஷம்,

கவர்ப் பாலில் கலக்கக் கூடாது...அப்போது கறந்த பாலில் கலக்கணும்.
          
பாலில் தண்ணீரே விடாமல் காய்ச்ச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் காய்ச்சினால் காஃபி நல்லா வரும்.
               
சூடு குறையுமுன் ஒரு டம்ளரில் ஆடை இல்லாத பாலை விட்டு டிகாக்க்ஷனை (முதல் நாலைந்து சொட்டு மட்டும் விட்டால் ரொம்ப விசேஷம்!) மெல்ல கலக்க வேண்டும். அதிகமாகவும் விட்டு கறுப்பாகக் கலக்கக் கூடாது. குறைவாய் விட்டு வெள்ளையாகவும் இருக்கக் கூடாது. அழகிய காபிக் கலரில் இருக்க வேண்டும்! இந்தக் கலவை ஒரு டெக்னிக்.
                
சர்க்கரை பெயருக்குத்தான் போட வேண்டும். நிறையப் போட்டால் அதன் பெயர் காஃபி இல்லை..பாயசம்! குடிக்கும் போது சர்க்கரை போட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கும் அளவு மட்டும் போட வேண்டும்.
                   
அதை எடுத்து ஒன்று அல்லது இரண்டு ஆற்று மட்டும் டபராவில் ஆற்றி நுரையுடன் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
                    
காபி போட்ட உடன் குடிக்க வேண்டும். ஃபிளாஸ்க்கில் வைத்தோ, சொம்பில் ஊற்றியோ (அலுவலகங்களில் சில சமயம் அபபடி வாங்கி வருவார்கள். சின்ன வயதில் என் நண்பர்கள் வீட்டில் அவர்கள் அம்மாக்கள் "குண்டான்ல காபி வச்சிருக்கேன். போய் மொண்டு குடி" என்பார்கள். எனக்குத் தண்ணீர் ஞாபகம் வரும்) கொண்டு வந்து குடித்தால் தரம் கம்மிதான்... ஃபிளாஸ்கின் 'வாசனை' வேறு சேர்ந்து கொண்டு நல்ல காஃபியின் மணம், சுவையைக் கெடுத்து விடும்.
                           
தஞ்சாவூரில் பெரும்பாலான கடைகளில் காபி நன்றாக இருக்கும். கும்பகோணத்திலும். ஜவஹர் சொல்லியிருப்பது போல கும்பகோணம் டிகிரி காஃபி ஃபேமஸ். மதுரையில் விசாலம் காபிக் கடையில் கொஞ்சம் எதிர்பார்க்கலாம். சென்னையில் சரவணபவன், விவேகானந்தா என்று சில கடைகள்...எல்லா இடத்திலும் 'சர்க்கரை கம்மியாப் போட்டுப்பா' என்று சொல்லி விட வேண்டும். நம்மைப் பாவமாக பார்ப்பார்கள். "பாவம்! சர்க்கரை வியாதி போல இருக்கு"
                          
அவர்களுக்கு என்ன தெரியும் நம் சுவை ஞானம்..! சர்க்கரை கம்மி என்று சொன்னால் தானாகவே டிகாக்ஷனை அதிகமாக விட்டு 'இஷ்ட்ராங்'காக காபி கொண்டு வைத்து விட்டு பெருமையாகப் பார்ப்பார்கள்.
                
இந்தக் கஷ்டத்துக்கு வீட்டிலேயே காபி போட்டு விடலாம்!

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

யோசனை சொல்லுங்கள்...


உலகக் கோப்பைக்கு அடுத்த அட்ராக்ஷன் தமிழ் நாட்டில் தேர்தல் வருகிறது. தனியாக, சேர்ந்து, கூட்டணி, என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு (நடுவண் அரசு!) தமிழக அரசை அதிகாரம் செய்து அதிக இடங்கள் பெறுவதற்கு வாய்ப்பு வந்திருப்பதாக பத்திரிக்கைகள் கணிக்கின்றன. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆட்சி அமைந்தால் அமைச்சரவையிலும் பங்கு கேட்கலாம், அங்கம் வகிக்கலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது.
             
'முதல்வர்கள் மாநாட்டுக்காக' டெல்லி சென்ற முதல்வர் அங்கிருந்தே ஆலோசிக்காமல், யோசிக்காமல் அவர்கள் கூட்டணியில் பா ம க இருப்பதாகச் சொன்னதையும், மருத்துவர் ஐயா அதை மறுத்து அவர்கள் செயற்குழு கூடி முடிவு செய்யும் என்றும் சொன்னதையும், (அட, எப்போதும் பிகு செய்யும் கலைஞரே தாங்கள் கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார் என்றால் நாம் கூட அதிக டிமாண்ட் செய்யலாம் என்ற கணக்கு இருந்திருக்கும்) கலைஞர் உடனே இல்லை, இல்லை என்று சமாளித்ததையும், அப்புறம் மீண்டும் மருத்துவர் கலைஞர் எண்ணம் வீண் போகாது என்று வழிக்கு வந்ததையும் பார்த்தோம்.

அம்மா என்ன சொல்கிறார், கேப்டன் யார் பக்கம் சேருவார் என்பதெல்லாம் யூகங்களாகவும், கணிப்புகளாகவும் வந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் இருக்கட்டும்..அரசியல் வேண்டாம்...(அப்போ இவ்வளவு நேரம் மாஞ்சி மாஞ்சி டைப் அடித்திருப்பது என்னவாம்..!)

எனக்குத் தோன்றுவது எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணியே கூடாது. ஆட்சியைப் பிடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எதிரெதிர் கொள்கைகளை (அபபடி ஒன்று இருக்கிறதா என்ன) உடைய கட்சிகள் இந்த கொள்கையில் ஒன்று பட்டு கூட்டணி அமைப்பதும் மக்கள் வோட்டுப் போடுவதும் போதும்.

எல்லாக் கட்சியும் தனித் தனியாகத்தான் நிற்க வேண்டும். நோ கூட்டணி. ஆட்சியைப் பிடிக்க இவர்கள் அலைவது சேவையோ நூடுல்சோ செய்ய அல்ல என்று மக்களுக்குத் தெரியும். ஒரு முறை வென்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் என்ற முறை ஒழிக்கப் பட வேண்டும். அந்த ஆட்சியை திரும்பப் பெற அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருக்காமல் பயனில்லா ஆட்சி, சுயநல ஆட்சி, என்று இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ வருடத்துக்கு ஒருமுறையோ திரும்ப அழைக்கும் வசதி ஏற்படுத்தப் பட வேண்டும். தகுதி இல்லை என்று திருப்பி அழைக்க்கப் பட்டவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் ஏற்பட வேண்டும். (இந்தக் காலத்தில் சட்டங்களை யார் மதிக்கிறார்கள் என்கிறீர்களா...அதுவும் சரிதான்) அதே சமயம் திரும்பத் திரும்ப தேர்தல் என்கிற முறையும் கட்டுப்படியாகாது. வேறு மாற்று வழிதான் யோசிக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்!

காவிரிப் பிரச்னையோ, முல்லை பெரியாறு பிரச்னையோ, கச்சத் தீவுப் பிரச்னையோ...இந்த மாதிரி பிரச்னைகள் அரசியல்வாதிகளின் சுயநலத்தில் அலைக்கழிக்கப் பட்டு கூட்டணி தர்மங்களுக்காகவும், சொந்த லாபங்களுக்காகவும் சரியாக எடுத்தாளப் படாமல் இருக்கின்றன. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

நீங்கள் இந்த மாதிரிப் பிரச்னைகளை தீர்க்கும் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? கர்நாடகமோ, கேரளமோ பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் இந்த மாதிரிப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு தீர்வு சொல்ல உங்கள் கைவசம் ஏதாவது விரிவான திட்டம் யோசனையில் வருகிறதா நண்பர்களே... அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் யோசிக்க, திட்டங்கள் போட முடியுமா? நாம் போட்டாலும் அவர்கள் செயல் படுத்தப் போவதில்லை!

மழை நாளில் அளவுக்கதிகமாகப் பெய்யும் மழை நீர் ஒவ்வொரு வருடமும் அதிக அளவு கடலுக்குப் போவதும், கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பிரச்னை வருவதும் தொடர்கதை. மழை நீர் சேகரிப்பு மக்களிடையேயே கூட பெயரளவில் செய்து சான்றிதழ் பெற்று விடுகிறார்கள். நதி நீர் இணைப்பு என்பது பேச்சளவில் மட்டும்.
               
இதற்கெல்லாம் என்ன தீர்வு..? 
   

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

குட்டிச் சுவரில் வெட்டி அரட்டை - 2

              
சன் டீவியில் வரும் 'அசத்தப் போவது யாரு' நிகழ்ச்சியில், வாய்ப்பு கிடைக்கும் போதும் ஞாபகம் வரும்போதும் மதுரை முத்துவின் பங்களிப்பைப் பார்க்கத் தவற மாட்டேன்! இன்று அவர் சொன்ன ஒரு ஜோக்: ஸாரி ஜோக்குகளில் ஒன்று..!
 
ஒரு அம்மாவும் பெண்ணும் ஏதோ காரணத்தால் திடீரென உயரமான இடத்திலிருந்து தவறி கீழே விழுகிறார்கள். வழியில் அம்மா ஒரு மரத்தைப் பிடித்துத் தொங்க, குழந்தையையும் ஒரு கையில் பிடித்துத் தொங்குகிறாள். உதவிக்கு ஆள் கூப்பிட்டு அலறுகிறாள். கீழே ஒரு ஃபுட்பால் கோல் கீப்பர் வர, 'கையை விடு, நான் பிடிச்சுக்கறேன் ' என்று தைரியம் சொல்ல, தாய் குழந்தையை விடுகிறாள். அவனும் சரியாய் குழந்தையை கீழே விழாமல் கேட்ச் பிடித்து விடுகிறான். கை தட்டியே பழகிப் போன நம்ம மக்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா...தட்டுகிறார்கள். அதைக் கேட்ட உடனேயே மைதான நினைவு வந்து விட்ட அந்த ஃபுட்பால் கோல் கீப்பர் கையில் பிடித்த குழந்தையை கீழே வைத்து காலால் ஓங்கி ஒரு....

முதலில் சிரித்தாலும் பின்னர் சற்று கொடூரமாகத் தோன்றியது. கற்பனையை ரொம்ப ஓடவிடக் கூடாது. PKS இல் கமல் 'பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக் கூடாது' என்பாரே..அது போல ஜோக் சொன்னா சிரிக்கணும்...கற்பனை செய்யக் கூடாது!

என் நண்பர் ஒருவருக்கு இதே போல (?) தொழில் சார்ந்த சங்கடம் ஒன்று நேர்ந்ததாகச் சொன்னது நினைவு வந்தது. அவர் மருத்துவத் துறையில் பணி புரிபவர். பணியில் இருக்கும் போது உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள். கர்ப்ப காலத்தில் மருத்துவமனைகளில் சோதிக்கும்போது LMP, EDD என்று குறிப்பார்கள். முதலாவது Last menstrual period, இரண்டாவது Expected Delivery Date..

மருந்து, மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றின் Expiry Date பற்றியே எழுதி பேசிப் பழகிய இவர்கள் சில சமயம் ஜோக்காகவும் சில சமயம் மறந்து போயும் Retire ஆகும் சக ஊழியர்களை உங்களுக்கு எப்போ Expiry Date என்று கேட்பதுண்டு. அது போல இவரிடமும் உன் மகளுக்கு எப்போ EDD என்று கேட்பதற்கு பதிலாக, வேகமாக எப்போ Expiry Date என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாராம்.

ரொம்பவும் சங்கடப் பட்டுப் போன இருவருமே அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆகும் வரை டென்ஷனாகவே இருந்ததைச் சொல்லியிருக்கிறார்...!

இது மாதிரி அவரவர்கள் தங்கள் வேலையில் உபயோகிக்கும் டெக்னிகல் வார்த்தைகளை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பயன் படுத்துவது குறித்து சுவாரஸ்யமாக இருந்தால் நண்பர்களும் அதைப் பகிரலாமே!!

####################################

எம் ஜி ஆர் ஆசைப் பட்டு ஆனால் நடக்காத, அப்புறம் கமலஹாசன் ஆசைப் பட்டு நடக்காத ஒரு விஷயம் நடிகர் விக்ரமுக்கு கிடைத்திருக்கிறதாம். அதாவது வந்தியத் தேவனாக நடிக்கும் வாய்ப்பு. மணிரத்னம் இயக்கமாம். இவ்வளவுதான் செய்தி. கல்கியில் பார்த்தது.  
   
ஏற்கெனவே படித்து ரசித்த ஒரு கதையை படமாக்கும்போது சில் சிக்கல்கள் உண்டு...நாம் ரசித்த கேரக்டர்களின் உருவம் நம் கற்பனையை ஒட்டி ஒரு விதமாக நம் மனதில் இருக்கும். ஏதோ ஒரு நடிகர்அந்தப் பாத்திரங்களை ஏற்கும்போது நம் மனம அவரை அந்த கேரக்டராக ஏற்பது கடினம். ரசிக்குமோ...?

அதே கல்கியில் நம் சக பதிவர்கள் ராமலக்ஷ்மி கவிதையும், உழவன் கவிதையும் வந்திருக்கிறது. நீங்கள் கூட கவிதைகள் எழுதி kalki@kalkiweekly.com க்கு அனுப்பலாம் என்கிறது கல்கி. 
   
வந்தியத் தேவனைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு செய்தியும் சொல்ல வேண்டும். மக்கள் தொலைக்காட்சியில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தொடர் எடுக்கப் போவதாகவும், அதில் நீங்களும் நடிக்கலாம் என்று சொல்லி புகைப் படத்துடன் அப்ளை, மன்னிக்கவும் விண்ணப்பிக்கச் சொல்கிறது மக்கள் டிவி.. மறுபடி மன்னிக்கவும், மக்கள் தொலைகாட்சி.

#####################################௩

சல்மான் இனிமேல் ஹிந்தித் திரையுலகை பாலிவுட் என்று சொல்லாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். Hindi Filmi என்ற வார்த்தையிலிருந்து HI-Fi என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!
(அப்போ தமிழ்த் திரையுலகை, TA-FI என்றும், கன்னடத் திரையுலகை, KA-FI என்றும் சொல்லலாமோ?)
##########################################
உலகக் கோப்பை கிரிக்கெட் பக்கத்தில் வந்து விட்டது. சச்சின் அடுத்த உலகக் கோப்பை விளையாடுவாரா என்று மக்கள் இப்போதே கவலைப் பட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆட்டமே ஆரம்பிக்கவில்லை. இந்திய டீமே அவரை நம்பி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவரே அடுத்த உலகக் கோப்பை பற்றி ஒன்றும் சொல்லாத நிலையில் தோனி "Frankly speakking, and practically speaking this will be Sachin's last world cup..." என்கிறார். இவர் யார் அதைச் சொல்வதற்கு என்று தெரியவில்லை. ஒரு அலெக்ஸ் ஸ்டுவர்ட் 44 வயது வரை விளையாடலாம் என்றால் why not Sachin? கிட்டிப்புள் ஆடுவது போல தோனி அடிக்கும் ஷாட் ஒன்றைப் போட்டு அவரை விட்டே "ஹெலிகாப்டர் ஷாட்" என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்!! நகைச்சுவை? விளம்பரங்களுக்கு கோடிகளில் ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!

எல்லா ஆங்கிலச் சேனல்களும் உலகக் கோப்பை ஒளிபரப்பு என்று தொடங்கி விட்டார்கள்! ஒரு நாள் முழுக்க ஒரே செய்திகளை ஒட்ட இவர்களுக்கும் ஏதாவது கிடைத்து விடுகிறது..! முன்னாள் அமைச்சர் கைது...எகிப்து....
                 
ரொம்ப நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு ஃப்ரீ சேனலில் CNN IBN வருகிறது!
                                      

புதன், 9 பிப்ரவரி, 2011

நாய் மனம் 2


(சென்ற பதிவின் தொடர்ச்சி)
 

மறுநாள் காலை அல்ல, அடுத்த இரண்டு மூன்று நாள் காலைகள் எதிர்பார்ப்போடுதான் விடிந்தன. ஆனால் ஏமாற்றம்தான்.
           
ப்ரௌனி வரவில்லை.
    
"வேண்டாம்னுதானே துரத்திட்டீங்க...நான் ஏன் வரணும்" மனதுக்குள் ப்ரௌனியின் உருவம் தோன்றி பேசியது போல இருந்தது.
                

நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.  
                    

"நேரத்துக்கு சாப்பாடு வைப்போம்...அதையே சரியாய்ச் சாப்பிடாது...இப்போ என்ன செய்யுதோ...யார் கொடுப்பாங்க அதுக்கு சோறு...!' சின்னவள் உணர்ச்சி வசப் பட்டாள்.
               
ஏதாவது பேப்பர் சத்தப் படுத்தினாலே குரல் கொடுக்கும் "எனக்கு எங்கே" என்பது போல...தீனி ஏதாவது சாப்பிடும்போது பாட்டி அதைச் சொல்லி மாய்ந்து போனாள்.
                           

ஆட்டோக்காரரை அப்புறம் பார்த்த போது அந்தப் பக்கம் சவாரி போனீங்களா கண்ணுல பட்டதா என்று கேட்ட போது 'சும்மா இருங்க சார்' என்று சொல்லிச் சென்றார்.
                       

திரும்பி வந்து விடும் என்று எண்ணிதான் கொண்டு விட்டோமோ என்று சந்தேகம் வந்தது. அவர்களும் கூட அந்தப் பக்கம் ஓரிரு முறை சென்று வந்த போது கண்ணில் படவில்லை.
               
"வீட்டுக்கு வரேன்னு வந்து ஏரியா மாறியிருக்கும்"
   

"வண்டியில் எங்காவது அடி பட்டிருக்குமோ"
                

வீட்டைச் சுற்றி தினமும் பார்வை அலைவதை தடுக்க முடியவில்லை.
                       

நடுவில் ஒருநாள் பெரியவன் கல்லூரியிலிருந்து வந்த போது அந்த ஏரியாவில் ப்ரௌனியைப் பார்த்ததாக பரபரப்புடன் சொன்னான்.
           

"அப்போ உயிரோடதான் இருக்கு..."
         

"அப்பாடா..."
               

அந்த வாரக் கடைசியில் புதிய எண்ணம் வந்தது. அது நம்மை விட்டுப் போய் இரண்டு மாதம் இருக்குமா? அதைச் சென்று பார்த்ததால் என்ன?            

என்ன அசட்டுத் தனம் என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை. 
      

"போகும்போதே பிரியாணி எல்லாம் வாங்கிப் போய் விடுவோம்..."
                

"மட்டன் பிரியாணின்னா அதுக்கு ரொம்ப இஷ்டம்.."
                       

"போய் குடுத்திட்டு சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் இருந்துட்டு நைஸா வந்துடலாம்..."    

"அதெப்படி? அது உன்னை விடவே விடாது...கூடவே வந்துடும்..."  
                   

"வராது...முதல்லயும் அப்படிதான் சொன்னாங்க...வரல்லையே..."    
                

"அப்போ அதுக்குத் தெரியாது...இப்போ அனுபவம்..விடவே விடாது"
                

"வராது..."  
              

"வந்தால்..."  
                 

"வராது...வந்தால்...வந்தால் என்ன செய்யலாம்...கூட்டிட்டு வந்துட வேண்டியதுதான்.."   
                    

'சட்'டென எல்லார் முகத்திலும் ஒரு புன்னகை வந்து அமர்ந்தது.   
                   

"முன்னாடி சொன்ன கஷ்டம் என்ன ஆச்சு?"    
                                    

"பார்த்துக்கலாம்.."  
                           

ஆசிஃபிலிருந்து மட்டன் பிரியாணியுடன் கிளம்பிப் போனார்கள். அந்த இடம் வந்தது. ப்ரௌனியைக் காணோம். பிரியாணியுடன் கேனத் தனமாக அமர்ந்திருந்தார்கள். வேறு சில நாய்கள் பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்து வந்து வாலாட்டின.     
                 

பைக்கிலும் காரிலும் சென்றவர்கள் லேசாகத் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்.          

"அன்னிக்கி நீ பார்த்தது ப்ரௌனிதானாடா?"    
           

"அட என்னப்பா...எனக்குத் தெரியாதா..."    
                       

அவர்கள் கண்கள் நாலாபுறமும் பார்த்தபடி இருந்தன. நேரம் செல்லச் செல்ல அலுப்பு வந்தது. முட்டாள்கள் போல உணர்ந்தனர். யோசனையில்லாமல் உணர்ச்சி வசப் பட்டு வந்து விட்டோம் என்று தோன்றியது.    

"அப்பா...அங்க பாரு.."      

சற்று தூரத்தில் ப்ரௌனி...ஆம்...ப்ரௌனியேதான்...மெல்ல வந்து கொண்டிருந்தது. எதையோ தேடிய அதன் அழகிய கண்கள் மோப்பம் பிடித்தபடி இவர்களைப் பார்க்க,      

   

உடம்பை வளைத்து, குனிந்து நிமிர்ந்து ஓடி வர ஆரம்பித்தது.  
                                   

முதலில் அவன் மேல் பாய்ந்தது. பயப்படும் அளவு காலை வளைத்து, சுற்றி சுற்றி வந்து மேலே உராய்ந்தது. அதன் குரல் சுற்றி உள்ள நாய்களைக் கலவரப் படுத்தியது. அவை இவர்களை கவனமாகப் பார்த்து விட்டு சற்று தளளி நின்றன.     
              

மனைவியை, பையன்களை என்று ஆனந்த அழுகையுடன் சுற்றி சுற்றி வந்து மேலே பாய்ந்து நக்கி அன்பை வெளிப் படுத்தியது ப்ரௌனி.  
                   

பிரியாணியைப் பிரித்து வைத்தார்கள். உடனே சாப்பிடவில்லை. அதை முகர்ந்து பார்த்து விட்டு மறுபடி இவர்களிடம் வந்தது. திரும்ப பிரியாணியை ஒரு பார்வை.   
            

"போய்ச் சாப்பிடு.."     
                    

போய்ச் சாப்பிட்டது.    
             
காத்திருந்தனர். சாப்பிட்டது. பக்கத்தில் வந்து புலிக் குட்டி போல உட்கார்ந்து மற்ற நாய்களைப் பார்த்தது.அதன் நெற்றியைத் தடவியபடி தூக்கி ஆட்டோவினுள் விட்டான்.

வழக்கம் போலவே முரண்டு பிடித்தது.   
                 
"பயன்தாங்குள்ளி...வழக்கம் போலவே பயப்படுது...லூசு..வீட்டுக்குப் போறோம்.."என்றாள் மனைவி.   
                       

புதிதாய் வந்த இரு நாய்கள் குரல் கொடுத்தன. ப்ரௌனி அவைகளைப் பார்த்து வாலாட்டியது. அவைகளிடம் ஓடி ஏதோ சொல்வது போல அருகே நின்று விட்டு மறுபடி இவர்கள் அருகே வந்தது.          
               

"என்னடி..சொல்லிக்கிட்டு வந்துட்டியா.." மனைவி கிண்டலாகக் கேட்டாள்.          
                        

வாலாட்டிய ப்ரௌனி, திரும்ப அந்த நாய்களிடம் சென்றது.  
                   

அவை மெல்ல திரும்பி நடக்கத் தொடங்கின.      
                
            
இவர்கள் விக்கித்து நின்றார்கள்.   
          
"ப்ரௌனி...ப்ரௌனி..."  
    

திரும்பிப் பார்த்த ப்ரௌனி லேசாக வாலாட்டியது. சற்றே தயங்கி நின்று விட்டு மறுபடி திரும்பி அதன் தோழர்களுடன் செல்லத் தொடங்கியது...அவற்றின் நடை மெல்லோட்டமாக மாறியது...!   
   

தூரத்தே சென்று மறைந்தது.  
                  

(முற்றும்!)

     
             

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

நாய் மனம் 1

  
ஆட்டோவில் வைத்து அழைத்துச் சென்ற போது வழக்கம் போலவே இப்போதும் ப்ரௌனி லேசான பயத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்த படி, அவ்வப்போது லேசாக நக்கியபடி வந்தது.

அவனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது.
        
'தெரிந்திருக்குமோ...? இதெல்லாம் இவைகளுக்கு உள்ளுணர்விலேயே தெரிந்து விடும் என்பார்களே...'   

இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை ப்ரௌனி ஆட்டோவில் பயணித்திருக்கிறது. இரண்டு முறை ப்ளூ க்ராசுக்கு - தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள. ஒரு முறை மாமா வீட்டுக்கு. மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அது குட்டி. ஆட்டோவில் ஏறவே ஏறாது. இறங்கி ஓடி விடும். ஏற்றி, இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆட்டோ கிளம்பி விடடால் ஜாக்கிரதை உணர்வுடன் லேசான உடல் நடுக்கத்துடன் மடியில் இருக்கும்.

அழகிய கண்கள் ப்ரௌனிக்கு. கன் திறக்காமல் இருக்கும்போது ரகு கொண்டு வந்து காண்பித்தான். காண்பித்தான் என்பதை விட ஆசை காட்டினான். சின்னவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

"அப்பா...அப்பா...வீட்டுலையே வச்சிக்கலாம்பா..."

"வேணாம்பா...பல வகைல தொந்தரவு..." முன் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு.

இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாமல் எங்கேயும் போக முடியாது. அது மட்டும் அல்லாமல் அதன் காலம் முடியும்போது மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.

பெண் கேட்பதாக இல்லை. அம்மாவின் சிபாரிசு பிடித்தாள் . அவளுக்கும் உள்ளூர ஆசை இருந்திருக்க வேண்டும்.

"ஏண்டி...அவதான் கேட்கிறாள்ன்னா....உனக்கு பழைய அனுபவம் ஞாபகமில்லையா.."

அவள் அப்பா செத்ததுக்குப் போகும் போது வீட்டில் அப்போது இருந்த செல்லத்தை என்ன செய்வது யாரிடம் விட்டுப் போவது என்று நின்றது ஒரு அனுபவம்.

ஆனாலும் மெஜாரிட்டி வென்றது. அவனுக்கு நாய்கள் எப்போதுமே இஷ்டம். முன் ஜென்மத்தில் அவன் நாயாக இருந்திருப்பானோ என்னமோ என்று நினைத்துக் கொள்வான்.

அழகிய கண்களுடன் அழகாக வளர்ந்தது. ஒரு கயிறு கட்டி பழக்கினான் பையன். நாயைக் கட்டி வளர்ப்பது சரியா என்று சில சமயம் தோன்றும். சுதந்திரமாய் திரிய வேண்டியவற்றை கட்டி வைத்து கொடுமை செய்கிறோம் என்று தோன்றும்.

நல்ல சாப்பாடு வேளா வேளைக்கு போடறோமே... என்பாள் மனைவி...என்பான் பையன்... என்பாள் பெண்!

ஏதோ சமாதானங்கள்.

குட்டி நாய் செய்யும் சேட்டைகள் கண்கொள்ளாக் காட்சி. முன் கையை தூக்கி ஆட்டி ஆட்டி அது விளையாட வரும் அழகு...

குதித்து உருண்டு புரண்டு செய்யும் அட்டகாசங்கள்....பெரிதாய் வளர்ந்தும் கூட அது மடியில் வந்து அமர்ந்து கொண்டாடும் சொந்தம்...அப்பப்பா...மனிதர்களை எப்படி அன்பினால் கட்டிப் போடுவது என்று நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன இவைகள்.

அவர்கள் இதை நாய் என்று என்றும் சொன்னதில்லை. ப்ரௌனிதான்... பெண் நாய் வேறு எனவே அவள் இவள்தான்..!

"ஏங்க நாட்டு நாய் மாதிரியிருக்கு..."

"அட...டர்னா வெரைட்டிங்க..." என்பான் ..அது ஒரு வகை என்று நினைத்து விட்டு விடுவார்கள். தெரு நாய் என்பதைத்தான் 'டர்னா' என்று சொல்லப் பழக்கியிருந்தான்..
----------------------

நினைவிலிருந்து மீண்டான்.

தெரிந்த ஆட்டோக்காரர். ப்ளூ கிராசில் விடலாம் என்ற போது நண்பர்கள் சிலர் உடம்பு சரியில்லாத நாயைத்தான் அவர்கள் எடுப்பார்கள் என்றார்கள்.

டிராஃபிக் இல்லாத இடமாகத் தேடினார்கள்.

ப்ரௌனி சுற்றுமுற்றும் இரைக்க இரைக்க பார்த்த படியே வந்தது. அவனையும் அடிக்கடி திரும்பி திரும்பிப் பார்த்தது.

"எவ்வளவு நம்பினேன் உன்னை.." என்று கேட்கிறா மாதிரி இருந்தது. 'நிச்சயம் தெரிந்திருக்கும் நான் செய்யப் போகும் துரோகம்' என்று நினைத்துக் கொண்டான். அதை பார்ப்பதைத் தவிர்த்தான். கண் கலங்கினா மாதிரி இருந்ததாகத் தோன்றியது... அது இவன் கையை வேக வேகமாக இருமுறை நக்கியது!

"நீ சமர்த்தா இருந்திருக்கணும்....பக்கத்து வீட்டு கோழியைக் கடிச்சே..பையன்களோட ஃ பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் மேல பல்லு வச்சே... ஆம்பளை நாய் சிநேகம் வேற..."

மனைவி அதனிடம் சொல்வது போல தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

முன்னர் ஒருமுறை வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக இதை நண்பர் ஒருவரிடம் விட்ட போது கண் கலங்கி அழுதவள் இவள்..."பொண் குழந்தை...! வெள்ளிக் கிழமையும் அதுவுமா எனக்குத் தெரியாம யார் கிட்டயோ கொடுத்துட்டீங்க...நான் ஏதோ சும்மா சொன்னேன்.." என்றவள்...

அந்த நண்பர் இதை வைத்துக் கொள்ள முடியாமல் மறுநாளே கொண்டுவந்து விட்ட போது நிம்மதியாகத்தான் இருந்தது.

இப்போது அந்தச் சமாதானங்கள் எல்லாம் இல்லை. விட்டு விடலாம் என்று ஒரு மனதாய்த் தீர்மானம். பையனும் பெண்ணும் அவ்வளவு கஷ்டப் பட்டா மாதிரி தெரியவில்லை.

ஒரு மாதிரி அலைந்து வண்டி நடமாட்டம் இல்லாத இடமாக நிறுத்தினார்கள்.

அவனுடைய சகோதரி ஃபோன் செய்தாள். அவளுக்கும் அவனைப் போலவே நாய்களிடமும் கூடுதலாகப் பூனைகளிடமும் கொள்ளைப் பிரியம்.

வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தவள் வேறு வழி இல்லை என்ற போது கோப சோகத்துடன் சமாதானமானாள். இப்போது பேசியவள்,

"தனி இடம் தனி இடம்னு ஆள் இல்லாத இடத்துல அவளை விட்டுட்டு வராதடா...சாப்பாட்டுக்கு என்ன செய்வாள்..." என்றாள்.

கஷ்டமாகத்தான் இருந்தது. தண்ணீரே பார்க்காத நாய்களைக் கூட திடீரென தண்ணீரில் தூக்கிப் போட்டால் அவை நீச்சலடித்து வந்து விடுவதைப் பார்த்திருக்கிறான். அவை எங்கே போனாலும் பிழைத்துக் கொண்டு விடும் என்று தேற்றிக் கொண்டான்.

முதலில் இறங்க மறுத்தாள் ப்ரௌனி. ஆட்டோவிலேயே அமர்ந்து சுற்றுப் புறம் ஆராய்ந்தாள்.

'இங்கதான் என்னை விடப் போறியா' என்பது போல அவனை ஒரு பார்வை, 'இதுதான் இனி நான் வாழ வேண்டிய இடமா' என்பது போல அந்த இடத்தை ஒரு பார்வை....

அவன் இறங்கி சற்று தூரத்தில் நின்று கொண்டான்.

மெல்ல இறங்கினாள். இங்கும் அங்கும் நடந்தாள். அவன் அருகில் வந்தாள். ஏதாவது ஆச்சர்யகரமான சமிஞையை எதிர்பார்த்தான் போலும். அவள் அவனைக் கடந்து போனதும் கொஞ்சம் ஏமாந்தான். இன்னும் கொஞ்ச தூரம் போய் அவனை திரும்பிப் பார்த்தாள். இன்னும் மெல்லோட்டமாக ஓடினாள்.

இவன் 'சட்'டெனத் திரும்பி ஆட்டோவில் ஏறினான்.

"திரும்பிப் பார்க்காம வாங்க சார்" - ஆட்டோக் காரர்.

திரும்பிப் பார்த்தபடிதான் வந்தான். ப்ரௌனி திரும்ப ஓடி வந்தது போலத் தோன்றியது.

ஆட்டோ திரும்பி வேகமெடுத்தது. திரும்பிப் பார்க்கையில் ஒரு பைக் காரன் சடன் ப்ரேக்கிட்டு ப்ரௌனியைத் தவிர்த்துப் பறந்தான்.

மறுபடி அவன் சகோதரி ஃபோன் செய்து நடந்ததைக் கேட்டு தெரிந்து கொண்டாள். ஆறுதலும் சொன்னாள். "அவை எந்த சூழலுக்கும் பழகி விடும்...இது கடவுளின் முடிவு...விடு..."  
    
"நாளைக் காலைல பாருங்க...நம்ம வூட்டு வாசல்ல நிக்கும்..: ஆட்டோக்காரர்.
              
அவனுக்கும் அது நிச்சயம் நடக்கும் என்று தோன்றியது.

ஆனால் .....  
(தொடரும்)