வெள்ளி, 20 மே, 2011

எப்படியாவது தப்பிக்கவேண்டும்!

                                  
அவன் ஒரு தீவிரவாதி. அவனுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆனால் அவை முக்கியமில்லை. வேண்டுமானால் அடையாளத்திற்காக அவன் பெயரை, 'தீ' என்று வைத்துக்கொள்வோம்! 

அவன் நாளை செய்யப்போகும் செயலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் - ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த அதிக முக்கியமில்லாத ஒரு நிகழ்வைச் சொல்லிவிடுகிறேன். 

*****


அந்த ஊர் 'ஃப்ரீ ஆட்ஸ்' (free Ads)  (இலவச விளம்பரங்கள்) பேப்பரில் அன்று காலைதான் 'கா' என்பவர் , தன்னுடைய பழைய காரை விற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தார். அதே தினத்தில் அவரை அலை பேசியிலும் தொலை பேசியிலும் ஆறு பேர் தொடர்பு கொண்டார்கள். இருவர் மட்டும் அன்றே வந்து காரை பார்வை இடுவதாய் சொல்லி, அதே போன்று வந்து காரையும், அதன் படிவங்களையும் பார்வை இட்டனர். 
                
மாலை மூன்று மணிக்கு வந்தவர், அந்தக் காரை தன்னுடைய வயதான தாய் தகப்பனுக்காக வாங்கி, அதனை அவர்கள் உபயோகத்துக்காக அனுப்பி வைக்கப் போகின்றேன் என்று கூறினார். எவ்வளவு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கார் சொந்தக்காரர் 'கா' விடம் கேட்டார் வா வ 1. 'கா' சற்று யோசித்து, 'எழுபதாயிரம் ரூபாய் ' என்றார். வா வ 1 ,  'கொஞ்சம் குறைத்துக் கொள்ளல் ஆகாதா?' என்று கேட்டார். அதற்கு 'கா' , 'அடுத்த வாரம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அதுவரை இந்தக் கார் விற்பனை ஆகவில்லை என்றால் சொல்கிறேன்' என்றார். பிறகு வாங்க வந்த முதல் நபர், தன் தொடர்பு எண் போன்ற விவரங்களைக் கொடுத்துவிட்டு, தான் ஒரு உன்னத இலட்சியத்திற்காக இந்தக் காரை வாங்குவதால், தனக்கே முன்னுரிமைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு அகன்றார். 

இரண்டாவதாக வந்தவர், மிகவும் நல்ல ஆடைகள் எடுப்பாக அணிந்து, ஓர் உதவியாளர் சகிதமாக வந்திருந்தார். அவரும் காரினுடைய உள்ளும் புறமும் மற்ற படிவங்களையும் பார்வை இட்ட பின், 'இந்தக் காரை இதுவரையிலும் எவ்வளவு பேர் வந்து பார்த்தார்கள்?' என்று கேட்டார். 'கா' சொன்னார் - காலையில் விளம்பரம் வந்ததிலிருந்து இதுவரை பதினாறு பேர் அழைத்தனர். வந்து பார்த்தவர்கள் ஆறு பேர்கள். நீங்கள் ஏழாவது ஆள்.'

'சரி இதுவரையிலும் வந்து பார்த்தவர்களில், யார் அதிகம் விலை கூறினார்கள்?'

'இதுவரையில் வந்து பார்த்தவர்களில் அதிக விலை என்பது ... எண்பதாயிரம் ரூபாய் வரை கொடுக்கத் தயார் என்று இருவர் கூறினார்கள்.' 

'சரி, எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாங்க இந்தக் காருக்கு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்கின்றோம். எங்கள் பாஸ், சினிமாக்களுக்கு சண்டைக் காட்சிகளில் அடித்து நொறுக்குவதற்காக கார், பைக், டி வி போன்ற பொருட்களை விற்பவர். அவர் ஊரில் இல்லை. அதிசய மனிதன் படப் பிடிப்பு நடக்கின்ற பக்கத்து மாவட்டம் சென்றிருக்கின்றார். அவரிடம் இந்தக் காரைக் காட்டி, 'வேண்டுமா, வேண்டாமா' என்று கேட்கவேண்டும். இந்தக் காரை அவரிடம் காட்ட எடுத்துச் செல்லலாமா?'

'கா' நிஜமாகவே திகைத்துப் போனார். வாயில் வார்த்தைகளே வரவில்லை. 'அது எப்படி நான் .. நீங்க ... உங்களை முன்னே பின்னே பார்த்தது கூட இல்லை .. இன்னும் ரொம்பப் பேருங்க காரைப் பார்க்க வருகிறோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். நீங்க எங்கே போறீங்க, எப்ப வருவீங்க என்றும் தெரியாமல் ... காரை உங்கள் முதலாளி வேண்டாம் என்று கூறிவிட்டால் ....' என்று தட்டுத் தடுமாறி பேசினார். 

வாங்குவதற்கு வந்த இருவரும், ' ஓ இதுதானா பிரச்னை. இந்தாங்க. இதுல தொண்ணூறு ஆயிரம்  ரூபாய் இருக்கு. இந்தக் காரை வாங்கிக் கொள்வது  முதலாளிக்கு சம்மதம் என்றால், காரோடு வந்து பேப்பர்களையும், வாங்கிக் கொண்டு, மீதி ஐந்தாயிரம் ரூபாய்ப் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். முதலாளிக்குப் பிடிக்கவில்லை என்றால், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இதிலிருந்து எண்பதாயிரம் ரூபாயை மட்டும் வாங்கிச் செல்கிறோம். சரியா?' 

'கா' வுக்கு இது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சரி. அவர்கள் காரை வாங்கிக்கொண்டாலும் லாபம், வாங்கிக் கொள்ளாவிட்டாலும் தனக்கு லாபம். எனவே, இந்த போக்குவரத்துக்கு ஒப்புக் கொண்டார்.  

அவர்கள் காரோடு செல்வதற்கு முன்பு அவர்கள் கொடுத்திருக்கும் நோட்டுகள் கள்ள நோட்டுகளா அல்லது நல்ல நோட்டுகளா என்று சோதித்து, அவைகள் நல்ல நோட்டுகள்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டார். அவர்களுடைய அலைபேசி எண்ணை வாங்கி, எழுதி வைத்துக் கொண்டார். 

கா அவருடைய காரைப் பார்த்தது அதுவே கடைசி. 

(அடுத்த பதிவில் முடியும்.) 

(அடுத்த பதிவில் கதை எப்படி முடியும் என்று ஊகம் செய்து சுருக்கமாகக் கருத்து கூறும் வாசகர்களுக்கு, 'எ ஷெ ஹோ' பட்டம் வழங்கப் படும்!) 
       

17 கருத்துகள்:

  1. அந்தக் காரை எடுத்து சென்றவர்கள் அந்த தீவிரவாதியின் உதவியாளர்கள். அதை எடுத்து சென்று அதில் வெடிமருந்தை நிரப்பி தாக்குதல் நடத்தி விட்டனர்.

    பதிலளிநீக்கு
  2. எல் கே - நீங்க சொன்னதில் ஒரு பாதி சரி என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  3. மூளைக்கு ரெம்ப வேலை கொடுத்திட்டீங்க. யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கடத்தலுக்கு உபயோகித்து அவரை போலீஸில் மாட்டவைத்து விட்டார்களா??

    பதிலளிநீக்கு
  5. 1) நல்ல வேளை அந்த மாதிரி ஓர் டீலிங் நானு வெச்சுக்கலை
    2) என்கிட்டே கார் இல்லவே இல்லை..

    பதிலளிநீக்கு
  6. தலை சுடுது.குழப்பமா இருக்கு !

    பதிலளிநீக்கு
  7. அடுத்த பதிவை, draft ல இருந்து பார்த்துட்டு முடிவு தெரிந்து கொண்டு இருப்பாங்க.... ஹி,ஹி,ஹி,ஹி....

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டைக் குறும்பன்20 மே, 2011 அன்று PM 7:54

    நாங்க கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், எ ஷெ ஹோ என்றால் என்ன? அதைக் கண்டு பிடிப்பதிற்குள் மண்டை காய்ந்துவிடும் போல இருக்குதே! உடனே, எ ஷெ ஹோ என்றால் என்ன என்று சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  9. எ ஷெ ஹோ -ன்னா எங்கள் ஷெர்லக் ஹோம்ஸ் தானே?!

    வெடிகுண்டு வைக்க தீவிரவாதி காரை உபயோக்கிக்க, காரின் ஓனராக மாட்டப் போவது கா!

    பதிலளிநீக்கு
  10. ஏன் எப்பவும் கொஸ்டின் கொஸ்டினா கேக்கறீங்க...அவ்வவ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  11. // அப்பாவி தங்கமணி said...
    ஏன் எப்பவும் கொஸ்டின் கொஸ்டினா கேக்கறீங்க...அவ்வவ்வ்வ்வ்....//

    DITTO

    பதிலளிநீக்கு
  12. கதை முடிஞ்ச மாதிரி தானே இருக்கு?

    பதிலளிநீக்கு
  13. தீவிரவாதி ன்னு ஆரம்பிச்சுதனால எல்லோரும் ஆள்கடத்தல், வெடிகுண்டு என யோசிக்கும் பொழுது ...செக்போஸ்ட் தாண்டி வண்டிய நிறுத்திட்டு ஆள் எஸ்கேப் ..சரியா

    பதிலளிநீக்கு
  14. // அப்பாதுரை said...
    கதை முடிஞ்ச மாதிரி தானே இருக்கு?//

    அய்! இப்படி எல்லாம் சொன்னால் பதிவாசிரியர் அடுத்த பகுதியை எழுதாமல் விட்டுவிடுவார் என்று நினைத்தீர்களா? யாரும் தப்பிக்க முடியாது!

    பதிலளிநீக்கு
  15. பத்மநாபன் சார் கொஞ்சம் மட்டும் சரி. ஆனால் நிறைய சரியான ஊகம இல்லை.

    பதிலளிநீக்கு
  16. கு கு அவர்களே எ ஷெ ஹோ விளக்கம் மிடில்கிளாஸ் மாதவி அவர்கள் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  17. குரோம்பேட்டைக் குறும்பன்22 மே, 2011 அன்று PM 12:37

    // அடுத்த பதிவில் கதை எப்படி முடியும் என்று ஊகம் செய்து சுருக்கமாகக் கருத்து கூறும் வாசகர்களுக்கு, 'எ ஷெ ஹோ' பட்டம் வழங்கப் படும்!//

    இதோ சொல்கிறேன்: 'முற்றும்' என்று முடிவடையும். சரியா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!