புதன், 31 ஆகஸ்ட், 2011

ஜே கே 18 - சவாலே .. சமாளி!

                              
வாழ்க்கை விந்தையானது. விசித்திரமானது. வாழ்வில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்தவுடன், பல நிகழ்வுகள் இயற்கையாக நிகழ்கின்றன. வாழ்க்கையே உங்களுக்கு உதவுகிறது. ஒரு நண்பனோ, உங்களுடைய உறவினரோ, உங்களுடைய பாட்டியோ, உங்களுடைய ஆசிரியரோ அல்லது யாரோ ஒருவர் உங்களுக்கு உதவுகிறார்.
          
ஆனால் உங்களுடைய தந்தை உங்களை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார் என்ற அச்சத்தினால் நீங்கள் விரும்புவதை செய்யவே அஞ்சினால் உங்கள் வாழ்வே அர்த்தமற்றதாகி விடும். நீங்களே காணாமற் போய் விடுவீர்கள். அச்சத்தினால் ஏதோ ஒரு வற்புறுத்தலுக்கு ஒருவர் கீழ்ப்படிந்தால் அவருக்கு வாழ்க்கை உதவுவதில்லை. இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன் என்று கூறி தெளிவுடன் நீங்கள் விரும்புவதைச் செய்தால் அற்புதமான, ஆச்சர்யமான நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நடப்பதை நீங்கள் காண்பீர்கள்.
                            
நீங்கள் விரும்புவதைச் செய்வதால் நீங்கள் பட்டினியில் வாடலாம். உங்கள் வாழ்வை நடத்துவதற்கே நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் மற்றவர்களைப் போல் வெறும் நகலாக இல்லாமல் ஒரு சிறந்த மனிதராகத் திகழ்வீர்கள். இவ்வாறு வாழ்வதே அற்புதமாகும். நம்மில் பலர் தனித்து நிற்பதற்கே அஞ்சுகிறோம்.ஆனால், அவ்வாறு தனித்து நின்றால் ஏதோ ஒன்று, யாரோ ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்பதை நீங்களே காண்பீர்கள்.
                    
(This matter of culture - by J. Krishnamurthi) 
                                  

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சென்னைப் பேருந்து, மகிழ்வுந்து, தானியங்கி!


             
தடம் புதிது, கட்டணம் பெரிது! 
தமிழக முதல்வர் சில புதிய பஸ்களையும் புதிய வழித்தடங்களையும் தொடங்கி வைத்தார் என்கிறது செய்தி.
           
முன்பெல்லாம் இந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்குச் செல்ல இவ்வளவுதான் கட்டணம் என்று நிச்சயம் இருக்கும். ஏனென்றால் ஒரே மாதிரி பஸ்கள்தான் இருந்தன. ஆனால் இப்போதோ ஆங்கில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைத்து எந்த பஸ்ஸில் என்ன கட்டணம் என்று நடத்துனர் கேட்கும் வரை சஸ்பென்சாகவே இருக்கும்!  

சொந்த வாகனம்-சொக்கும் மோகனம்!     

சென்னையில் எங்காவது வெளியில் சென்று வர வேண்டுமானால் சொந்த வாகனம் இருந்தால் உத்தமம். அதிலுமே கூட சென்னையின் சாலை நெரிசல் வர வர வெறுப்படைய வைக்கிறது. இரண்டு பேர்களுக்கு மேல் இருந்தால் நாலு சக்கரம் சரி. இரண்டு பேர்கள் என்றால் இரு சக்கரம் பெஸ்ட். சாலை நெரிசலைக் கட்டுப்படுத்த மக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொது வாகனங்களில் செல்வது நல்லது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஏதோ ஒரு செய்தியில் எரிபொருள் சிக்கனத்துக்காக மக்கள் வாரத்தில் ஒரு நாள் சொந்த வாகனங்களைத் தொடாமல் இருக்கப் பழக வேண்டும் என்று படித்த ஞாபகம் வருகிறது.             
                
ஆனால் அரசாங்க வாகனங்களை உபயோகப் படுத்தும் முறையிலா நிலைமை இருக்கிறது?     
                 
சில நாட்களுக்கு முன் குரோம்பேட்டை செல்ல ஏ.ஸி. பஸ் ஒன்றில் ஏறினேன். கூட்டமில்லாமல் இருக்கும் என்று நம்பித்தான் ஏறினேன். ஒரு கால் வைக்க மட்டுமே இடம் இருந்தது. பொதுவாகச் சென்னையில் காலை எட்டு மணி முதல் பத்தரை மணி வரையும் மாலை நாலு மணி முதல் ஏழு மணி வரையும் எந்த பஸ், டிரெயினையும்நம்பிப் போக முடியாது. பிதுங்கும் ஜனக்கூட்டம்! எல்லா வாகனங்களிலும் மூச்சுத் திணறும். எத்தனை பஸ் விட்டாலும் சமாளிக்க முடியாத இந்தக் கூட்டத்தைச் சமாளிக்க அரசாங்கம் என்னதான் செய்யுமோ...?    

ஷேர், ஷேர் 
இந்த நிலையில் சென்னையில் வலம் வரும் ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலான மக்களுக்கு வரப்ரசாதம்தான். என்னதான் கட்டணக் கொள்ளை அடிக்கட்டும், பஸ் ஸ்டாப்புகளில் இடைஞ்சலாய் நின்று மக்களை ஏற்றிக் கொள்ளட்டும், பஸ் கூட்டத்துக்கு இது பரவாயில்லை என்றே தோன்றும்.
                      
மேலும் சாதாரண ஆட்டோக்கள் கேட்கும் தொகையைப் பார்க்கும்போது ஷேர் ஆட்டோவையே மக்கள் தேர்வு செய்கிறார்கள்.       
என்ன ஷேர்? 
முதலில் சாதாரண வகை ஆட்டோவை பெரிதாக்கியதைப் போல வந்த ஷேர் ஆட்டோக்கள். இதை 'ஆபே ஆட்டோக்கள்' என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். இதில் ஒரு சிரமம் என்னவென்றால் பின்னால் திணிக்கப் படுபவர்கள் முதல் பின் வரிசை இருக்கையிலும், அடுத்த வரிசை அவர்கள் காலடியிலும் ( ! ) அமர வைக்கப் பட்டு இடிக்க இடிக்க வந்து இறங்க சிரமப்படுவது. டிரைவரின் இரு பக்கத்திலும் கூடப் பயணிகள் அமரவைக்கப் படுவார்கள். அதிக பட்சக் கட்டணம் பத்து ரூபாய். நாலு பேர் உட்காரக் கூடிய ஆட்டோவில் பத்து பேர் உட்கார வைக்கப் படுவார்கள். இடைவழிகளில் இறங்குபவர்கள், ஏறுபவர்களால் ஓட்டுனருக்கு லாபம். விரும்பும் இடத்தில் நிறுத்தி இறங்கிக் கொள்வது பஸ்ஸில் இல்லாத வசதி!                      
                                   
டப்பா ஷேர்!
அடுத்து வந்தவை டப்பா மாடலில் இருக்கும் இந்த வகை ஷேர் ஆட்டோக்கள். "இதுதாங்க உண்மையான ஷேர் ஆட்டோ" என்றார் ஆட்டோ நண்பர் ஒருவர்.

மாஜிக் ஷேர்
இந்த மாடலில் உட்காருவது சற்றே வசதியாகவும், மரியாதையாகவும் இருந்ததால் மக்கள் இதை முதல் பட்சமாக மதிக்கத் தொடங்கிய நேரத்தில் வந்தது புதிய வகை டாட்டா மேஜிக்.

 

முதலில் க்ரீம் வெண்மை நிறத்தில் மட்டுமே வந்த டாட்டா மேஜிக் இப்போது புதிய வண்ணங்களில் சென்னையை வலம் வருகின்றன. அமர வசதி, பார்க்கவும் கவுரமாகவும் கூட இருக்கிறது! இதில் உள்ள கஷ்டம் உள்ளே ஏற படிகள் உயரத்தில் உள்ளதுதான்.

சாதாரணமாகவே ஷேர் ஆட்டோக்கள் வருமானத்தை அள்ளித் தருகின்றன. எப்போதாவது வரும் சவாரி என்பதை விட்டு தொடர்ந்து ஒரு ட்ரிப்புக்கு போக நூற்றைம்பது , வர நூற்றைம்பது என்று வசூல் பார்க்கிறார்கள். சாதாரண ஆட்டோ ஒரு வழிக்குத்தான் கட்டணம் வாங்க முடியும். அதுவும் இந்த தூரங்களுக்கு நூற்றிருபது முதல் நூற்றைம்பது வரை வாங்குவார்கள். திரும்ப புறப்பட்ட இடத்துக்கு வந்தாலும் சரி, அப்புறம் அடுத்த கஸ்டமர் என்று மறுபடி சவாரி அமைந்தால் உண்டு. இல்லையென்றால் காத்திருப்புதான். இது அப்படியில்லையே... பீக் அவர்ஸ் என்று சொல்லப் படும் நேரங்களில் மட்டுமல்லாமல் ஓரளவு எல்லா நேரங்களிலும் இவர்கள் வண்டி நிறைந்து விடுவது வழக்கம்.

ஆர் டி ஓ செக்கிங் இருக்கும்போது மட்டும் இவர்களுக்குள் ஒற்றுமை வந்து விடும். எதிரில் வரும் சக ஓட்டுனர் எல்லோரையும் எச்சரித்து விடுவார்கள்! அளவுக்கு அதிகமாக ஆட்களை வைத்து ஓட்டினாலும், லைசென்ஸ், எஃப் ஸி போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அபராதம் விதிக்கப் படும்.    

அந்த ஏரியா போக்குவரத்துப் போலீசுக்கு தினமும் (அல்லது மாதத்துக்கு நூறு அல்லது இருநூறு ரூபாயாம்) மாமூல், மற்றும் அவ்வப்போது கேஸ்கள்.
                    
உண்மையில் இந்த டாட்டா மேஜிக் வண்டிகள் பாரம் ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப் பட்டவை. முதலில் எந்த புண்ணியவானோ அதில் கூடு கட்டி ஷேர் ஆட்டோவாக்க, பயந்து பயந்து ஆரம்பித்தவர்கள், இன்று சகஜமாகி விட்டார்கள். 
                     
"கொள்ளையடிக்கிறாங்க சார்" :
"அட, போதும்பா... ஆள் சேர்ந்த வரை போதும் ஸ்டார்ட் பண்ணுப்பா"
"அநியாயம் பண்றாங்க..."  
                  
இத்தனை வசனங்களையும் மீறி ஷேர் ஆட்டோக்கள் இல்லையென்றால் சென்னை மக்கள் திணறித்தான் போவார்கள். செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் பஸ் வருமானத்தை பாதிக்கிறது என்று சொல்லி இதைத் தடை செய்யக் கேட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட தூரத்திற்கு மூன்று பேர் ஆட்டோவில் செல்ல நூற்றைம்பது ரூபாய் தர வேண்டுமென்ற நிலையில் ஓரளவு அதே சௌகர்யங்களோடு முப்பது ரூபாயில் போக முடிவது வசதிதான்.
                            
அரசாங்கம் பஸ் வசதி தேவைப் பட்ட அளவு செய்து தரப் போவதும் இல்லை, செய்து தந்தாலும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. மெட்ரோ ரயில் தயாராகும்போது டிராஃபிக் இன்னும் மும்மடங்கு ஆகி பழைய நிலையிலேதான் இருக்கப் போகிறது. மக்கள் என்னதான் செய்வார்கள்...
                                 
வாழ்க ஷேர் ஆட்டோக்கள்.
                            

சனி, 27 ஆகஸ்ட், 2011

ஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் ...

                                         
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்,
              
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 
                         
நீங்கள் பெற்ற பாயிண்டுகள், ஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் என்றால் - உங்கள் நண்பர்களால் நீங்கள் எப்படிப் பார்க்கப் படுகின்றீர்கள் என்பதை இங்கே பார்ப்போம். 

  


உங்கள் நண்பர்களை அடிக்கடி மெய் சிலிர்க்க வைத்துவிடுவீர்கள். எங்கே இருந்துதான் உங்களுக்கு இவ்வளவு சக்தியும் உந்துதலும் வருமோ என்று உங்களை அதிசயமாகப் பார்த்து வியந்து போவார்கள், 
உங்கள் நண்பர்கள்! 

   

பறக்கும் குதிரைதான் நீங்க! தலைமைப் பண்பு உங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது.    


          
எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று ஒரு முடிவு எடுத்து, தடாலடியாக வேலை செய்து முடிப்பீர்கள். அப்படி எடுக்கும் சில முடிவுகள் சில நேரங்களில் சரியான முடிவாக இல்லாமலும் போகும். ஆனாலும் மனம் தளர மாட்டீர்கள்! 

துணிச்சலும், விடா முயற்சியும் உங்களுக்குப் பல வெற்றிகளைத் தேடி கொடுக்கும். நீங்கள் எதையும் ஒரு முறையாவது முயற்சி செய்து பார்த்து விடுகின்ற அதிசய மனிதர். ரிஸ்க் எடுப்பது என்பது, உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல! 

உங்களுடைய செயலாற்றும் உத்வேகம் மின் காந்த அலைகளாகப் பரவி, உங்கள்
நண்பர்களை - இரும்புத் துகள்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் காந்தம் போன்று - உங்கள் பக்கம் ஈர்க்கின்றது. 
                    
என்ன மாதவன், சாய் - சந்தோஷம்தானே? 

(அறுபத்து ஒன்று பாயிண்டுகளுக்கு மேலாகப் பெற்றவர்கள் யாராவது இருந்தால், எங்களுக்கு சொல்லவும் / எழுதவும். )

                                                 

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

உள் பெட்டியிலிருந்து... 8-2011


எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பு....

நட்பு என்பது
ஸ்டேப்ளர் பின் மாதிரி. 
இணைப்பது எளிது.
பிரிப்பதுதான்
கடினம்.


பிரித்து எடுத்தாலும்
அது
தன் தடத்தை விட்டே செல்கிறது...
----------------------------------------------------

அட, ஏற்கெனவே சொன்னதுதான்...

நண்பனே
என் அக்கறை
இதயத்தில் இருக்கும்.
வார்த்தைகளில் அல்ல.
என் கோபம் வார்த்தைகளில் இருக்கும்
இதயத்தில் அல்ல!

------------------------------------------------

அப்பாவி இதயத்தின் அல்ப ஆசை.......

ஒவ்வொரு உறவும்
ஜான்சன் பேபி ஷாம்பூ
விளம்பரம் போல
'இனி கண்ணீரில்லை'
என்ற உறுதி மொழியுடனே
வந்தால்
எவ்வளவு இனிமையாயிருக்கும்?
--------------------------------------------

கடவுள் அமைத்து வைத்த மேடை!

ஆறு வயதுச் சிறுவனொருவன் அழகிய மூன்று வயதுச் சிறுமியின் புகைப் படம் ஒன்றைத் தெருவில் கண்டெடுத்து அவளைச் சந்திக்கத் துடித்துத் தோற்றான்.
   
வருடங்கள் சென்றன.

திருமணமானது. ஒருநாள் அவனிடம் இருந்த புகைப் படத்தைப் பார்த்த மனைவி கேட்டாள்.  
"எங்கிருந்து கிடைத்தது இது?"     
"ஏன்?"    
"எனக்குச் சுமார் மூன்று வயதிருக்கும்போது நான் தொலைத்த என் போட்டோ.."    

என்ன தோன்றுகிறது...திருமணங்கள் சொர்க்......... ம்..ஹூம்...
                     
சனி பிடிக்கணும்னு விதி இருந்தால் பிடிச்சே தீரும்!
---------------------------------------------------------------------------------

கீழ கீழ எழுதினா கவிதையாயிடுமா...?
      
நீங்கள் பார்க்கும்
அல்லது
கேட்கும்
எல்லாவற்றையும்
அப்படியே
நம்பி விடாதீர்கள்.
எல்லாக் கதைகளுக்கும்
எப்போதுமே
மூன்று பக்கங்கள் உண்டு.
உங்கள் பார்வை...
அவர்கள் பார்வை..
மற்றும் உண்மை நிலவரம்.!  
                  

புதன், 24 ஆகஸ்ட், 2011

காதல் கடிதம், லகான், சோனியா, மணிக்கொடி எழுத்தாளர்கள், -வெட்டி அரட்டை.


      
அன்புள்ள மன்னவனே ... ஆசையில் ஓர் கடிதம் !                    
கடிதம் வந்த காலங்களெல்லாம் காணாமல் போய் விட்ட இந்நாளில் ஒருவருக்கு கடிதம் வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து! அபபடி ஒரு கடிதம் வந்த செய்தியை சில நாட்களுக்குமுன் தினமணியில் படித்தேன்.அதுவும் எப்படி? ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டகடிதம்...
                           
உடனே நம்ம ஊர்லதான் இப்படியெல்லாம் நடக்கும், அதனால் எந்த ஊர் என்று கேட்க வேண்டாம். இது கலிஃபோர்னியாவில் நடந்த சம்பவம். தற்சமயம் எழுபத்தி நாலு வயதாகும் அந்த கிழவருக்கு எங்கெங்கோ சுற்றி விட்டு அலைந்து திரிந்து வந்துள்ள கடிதம். பிரித்துப் பார்த்த போது அவருடைய அப்போதைய காதலி எழுதியிருந்த கடிதம். பல்கலைக் கழகத்தில் படித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் நினைவிலாட கொசுவர்த்தியுடன் கிழவர் பாட்டுப் பாடாத குறை. அந்தக் காதலிதான் இவர் முதல் மனைவி. நான்கு குழந்தைகள் பெற்றுக் கொண்டபின் விவாகரத்து வாங்கி இரண்டாவது மனைவி கல்யாணம் பண்ணி அவள் மூலமாக அவருக்கு பதினைந்து குழந்தைகளாம்!
                                             
ம்..ஹூம்...எல்லா ஊர்லயும் போஸ்டல் டிபார்ட்மென்ட் இப்படிதானா? எல்லா ஊரிலும் காதல் இவ்வளவுதானா? (காதல் மனைவிக்கு நான்கு குழந்தைகள், 'கல்யாண' மனைவிக்கு பதினைந்து குழந்தைகள்...!)
=====================================

                              
விவாகரத்து ஆகி பிரிந்து விட்டாலும் லகான் தயாரிப்பு நாளோ, வெற்றி நாளோ, ஏதோ ஒன்று கொண்டாடும்போது ஆமிர்கான், அந்தப் படத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்த தன் முதல் மனைவியை விழாவுக்கு அழைத்து மரியாதை செய்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். யாதோன் கி பாராத் படத்தில் மூன்றாவது குழந்தையாக நடித்தது ஆமிர்கான்தான் தெரியுமோ...? (ராணுவ ரகசியத்தைச் சொல்லி விட்டீர்களாக்கும் என்று நொடிக்க வேண்டாம்!)   
=====================================
                                      
ராணுவ ரகசியங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக லீக் ஆகும்போது ஸ்விஸ்ஸ் வங்கிக் கணக்கு விவரங்கள் தப்பித் தவறிக் கூட வெளியில் வராதவாறு கவனமாக, மிக கவனமாக பார்த்துக் கொள்கிறது சோனியாவின் அரசு என்கிறது ஒரு பத்திரிக்கைச் செய்தி.
========================================
                                                   
ஒரு அழுக்கான ஆஸ்பத்திரி. அல்லது கொஞ்சம் சுத்தமான ஆஸ்பத்திரி. சுமார் பதினைந்து பேர் உள்ள ஜெனெரல் வார்ட் அது. கேண்டீனில் போய் ஃபிளாஸ்கில் காஃபி வாங்கி வரும் ராகுல் அந்த ஏழாம் எண் பெட் அருகே போய் படுத்திருக்கும் சோனியா சாப்பிட்ட டிஃபன் கேரியரை ஒதுக்கி அருகில் உள்ள ஸ்டூலில் அமர்கிறார். அருகில் உள்ள படுக்கையில் ஒரு கிழவி, 'இருமு இருமு' என்று இருமுவதை பொழுது போகாமல் வேடிக்கை பார்க்கிறார் ராகுல்.

இப்படி ஒரு காட்சி மனக் கண்ணில் ஓடியது "சோனியா ஜெனெரல் வார்டுக்கு மாற்றப் பட்டார்' என்ற செயதியைப் படித்ததும்!

அவருக்கு என்ன வியாதி?

தெரியாது.

என்ன ஆபரேஷன்?

தெரியாது. மன்மோகன் சிங்குக்கும் அவர் அரசாங்கத்துக்கும் ஒன்று மட்டும் தெரியும். அன்னை சோனியாவுக்கு உடம்பு சரியில்லை.
=========================================
                                                  
கல்கியில் சமீபத்தில் தஞ்சை மாவட்ட சிறப்பிதழ் போட்டார்கள். (31-7-2011). அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டச் சிறப்பிதழாக போடுவதுதான். இந்த இதழ் பக்கங்கள் எல்லாவற்றிலும் பலப்பல அரிய தகவல்கள். அதில் மிக முக்கியச் செய்தி ஒன்று, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா., புதுமைப் பித்தன், கரிச்சான் குஞ்சு ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்களோடு இருந்த இன்னொரு மணிக்கொடி எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயன் பற்றி. இன்று நம்மிடையே இருக்கும் மணிக்கொடி எழுத்தாளர் இவர் ஒருவர்தானாம் . வயது தொண்ணூற்றைந்து ப்ளஸ்ஸில் இருக்கும் இவர் தஞ்சையில் இருக்கிறார். இவரிடம் 'ரெண்டு வார்த்தை' வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பேசாத போது முழுவதும் ராம ஜபம் செய்கிறாராம். இவர் கதை ஒன்றும் படித்ததில்லை. (சமஸ்க்ருத நெடி என் கதைகளில் அதிகம் இருக்கும் என்கிறார் அவர்) "ஆத்ரேயன் நல்லாத்தான் எழுதறார்... ஆனால் தமிழ்ல எழுதுங்களேன்... இன்னும் நல்லா இருக்கும்" என்று வாழைப்பழ ஊசியாய் கமெண்ட் அடிப்பாராம் பு.பி.

ஜீவி சார்... இவர் கதை எதாவது இருந்தால் பிரசுரியுங்களேன்... அல்லது பி டி எஃபில் கிடைக்குமா?

கல்கியின் தஞ்சைச் சிறப்பிதழ் பழைய தஞ்சைக் கால நினைவுகளை கிளறி விட்டது.
=============================================
                                    
இதற்கும் அடுத்த இதழ் கல்கியில் சிறுகதைப் போட்டி முடிவு அறிவித்து விட்டார்கள். வண்ணதாசனும், கே பாரதியும் நடுவர்கள். பேராசிரியை பாரதி அவர்களை எனக்குத் தெரியும் என்பது எனக்குப் பெருமை! (அவருக்கும் என்னைத் தெரியுமாக்கும்!) முதல் பரிசு அசோகமித்திரனுக்கு.

பழம்பெரும் எழுத்தாளர். நன்றாக எழுதுவார். என்னுடைய கருத்து என்னவென்றால் அசோகமித்திரன் பெயர் வாங்கி விட்ட எழுத்தாளர். அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைப்பது போல் இல்லையா என்று தோன்றியது ஒரு புறம், மறு புறம் பிரசுரிக்கப்பட்டுள்ள அவர் கதையில் பெரிய சம்பவம் அல்லது நிகழ்வு என்று ஒன்றுமில்லாமல் இருக்கிறது. வண்ணதாசன் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்."யதார்த்தமும், ஒரு விட்டேற்றியான மனோபாவமும் கதையில் வறுமையை பிரச்சாரமாகச் சொல்லாமல் கலாபூர்வமாகச் சொல்கிறார்"
=============================================
                                  
"ஆடி மாசம் கல்யாணம் செய்யலாமா?"
                                    
ஜாதகம் பார்ப்பது முதல் சத்திரம் பார்ப்பது வரை எல்லாம் ஆடி மாதத்தில் செய்யலாம். கல்யாணம் மட்டும் கூடாது!
             
"விசா கிடைக்க எந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்"
                        
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயரைப் போய் பார்த்து வரணும்... அர்ச்சனை செய்யணும்.. ராமபிரான் கடல்தாண்டிச் செல்ல உதவியவர் இந்த ஹனுமான்தான்..."
                                
இதெல்லாம் கல்கியில் வரும் ஜோசியப் பகுதியில் வரும் கேள்விகள், மற்றும்  பதில்கள்! 
                           
"விதியை மதியால் வெல்ல முடியுமா?"
                                
இந்தக் கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?
====================================
                                                      

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஜே கே 17 'கற்றல்'

                                                     
கற்றல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 'கற்றல்' என்பதின் ஆழ்ந்த பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உண்மையாகக் கற்கும்போது, நீங்கள் கற்பதற்கு ஒரு தனிப்பட்ட ஆசானையோ, ஆசிரியரையோ நாடாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள்.
இவ்வாறு நீங்கள் இருக்கும்போது அனைத்தும் ஒவ்வொரு பொருளும் உங்களுக்குக் கற்பிக்கிறது, போதிக்கிறது. உலர்ந்த, உயிரற்ற இலையும், வானில் பறந்து செல்லும் பறவையும், நறுமணமும், மனிதனின் கண்ணீரும், செல்வந்தரும், ஏழை எளியோரும், கண்ணீர் சிந்தும் மனிதர்களும், ஒரு பெண்ணின் புன்சிரிப்பும், ஒரு மனிதனின் ஆணவமும் ஏதோ ஒன்றை உங்களுக்குக் கற்பிக்கிறது, போதிக்கிறது. ஆகவே, நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டே இருப்பதால், வழிகாட்டுபவர், தத்துவ போதகர், குரு என்று எவரும் உங்களுக்கு இல்லை. வாழ்க்கையே உங்களுடைய ஆசான். ஆகவே, நீங்கள் எப்பொழுதும் கற்கும் நிலையில் இருப்பதால் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள்.   
                                    
('திஸ் மேட்டர் ஆஃப் கல்ச்சர்' என்ற நூலில்.)
============================================
                                          
"என்னுடைய போதனைகளை நீங்கள் பரப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் உங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல், உங்களால் என்னுடைய போதனையை பரப்ப முடியாது. நீங்கள் என்னுடைய சில புத்தகங்களை வாங்கி விநியோகம் செய்யலாம். ஆனால் உங்களைப் புரிந்து கொள்வதே இதைக் காட்டிலும் முக்கியமாகும். உங்களை நீங்கள் புரிந்து கொண்டால், இவ்வுலகில் நீங்கள் ஒற்றுமையையும், புரிதலையும் பரவச் செய்வீர்கள். மனித குலத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வருவீர்கள். ஆனால் மற்றவருடைய போதனையை நீங்கள் பரப்பினால், இவ்வுலகில் மிகுந்த தீங்கையே ஏற்படுத்தும் வெறும் பிரசாரகராகவே நீங்கள் இருப்பீர்கள். பிரசாரம் உண்மை அன்று"
                   
(6- 2- 55 அன்று ராஜ்காட்டில் ஆற்றிய சொற்பொழிவில். )
=======================================================   
                                     

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 3




                              இருள் பிரியாத காலை நேரத்தில் குறைந்த ஜனங்களுடன் சாலையில் நடக்கும் உற்சாகம். இருளும் ஒளியும் மாறி மாறி வரும். மரங்களின் உபயம் பாதி, விளக்குக் கம்பங்களின் உபயம் மீதி!    
      
இன்றைய சிந்தனைக்கு வித்திட்டது நடக்கும்போது ஒரு விளக்குக் கம்பத்திலிருந்து சற்றே தளளி, ஆனால் வெளிச்சத்தில் தெரியக்கூடிய இடத்தில் கிடந்த, ஒரு செல்போன். செல்போன்தானா அல்லது வெறும் கவரா என்று செக் செய்யக் கூட தோன்றாமல் நடந்ததற்குக் காரணம் உண்டு.
  
முன்னர் ஒரு முறை, கீழே கிடந்த 'செல்'லை எடுத்து உரியவரிடம் சேர்ப்பிக்க எடுத்த முயற்சிகளில் கிடைத்த சில அனுபவங்கள்....! இதை யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும். தொலைத்தவனுக்கு விதி... எடுப்பவன் விதி அதைத் திருப்பிக் கொடுப்பானோ, அவனே வைத்துக் கொள்வானோ...

கஷ்டப்படாமல் வந்த பணம் நிலைக்காதாம். சொல்வார்கள். கஷ்டப் பட்டு சேர்த்த பணம் நம் கையை விட்டும் போகாதாம்... அதாவது அனாவசியமாகத் தொலையாதாம்.           
                 
ஒரு முறை ஓர் ஐநூறு ரூபாய் நோட்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் பையிலிருந்து கொத்தாகக் கீழே விழுந்திருப்பது வீடு சென்றபின்தான் தெரிந்தது. திரும்ப ஓடி, வழியில், கடைசியில் சென்ற கடை, சந்தித்த நபர்கள் என்றெல்லாம் அலசி, ஒன்றரை மணி நேரம் கழித்து சோர்வுடன் திரும்பிய போது, வழியில் பக்கத்து முட்புதரிலிருந்து லேசான காற்றில் முதலில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இடத்தைக் காட்ட, அப்புறம் தொடர்ந்து மற்ற நோட்டுகளும் கிடைத்தது ஒரு அனுபவம். ஆனால் பாருங்கள், எண்ணூறு ரூபாய்தான் கிடைத்தது! இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கும்பலே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது.     
                
ஊட்டி ரேஸ் கோர்ஸ் அருகே தொலைத்த தங்க காதுக் கம்மல் பற்றி மாமா சொன்னார். ரேஷன் கடை போய் வந்த போது பாடு பட்டு வாங்கிய கம்மல்களில் ஒன்று மிஸ்ஸிங். நாள் முழுக்க மூட் அவுட். மறுநாள் ஆபீசில் இதைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட போது அலுவலகக் காவலாளி பையிலிருந்து அதை எடுத்து 'இதா பாருங்க' என்று நீட்டியது அந்த சமயத்தில் எப்படி நெகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். முதல் நாள் மாலை அதே ரோடில் நடந்து கொண்டிருந்த அந்தக் காவலாளி கையில் கிடைத்ததாம் அது!
               
கிடைக்காதது கிடைக்காது, கிடைப்பது கிடைக்கும் என்று ஒரு குழப்ப வசனம் ரஜினி சொல்வாரே, அது போல....
             
மாமா சொன்ன இன்னொரு சம்பவம். நண்பர்களுடன் ஆபீஸ் செல்லும் வழியில் கொத்தாக ஒரு பதினைந்து லாட்டரிச் சீட்டுகள் கிடந்தனவாம். வரிசையான நம்பர்கள் கொண்டது... விற்பனையாளரிடமிருந்தோ, அல்லது யாரோ 'லாட்டரி அடிமை' வாங்கிச் செல்லும்போதோ தவற விட்டிருக்க வேண்டும். ஆபீசில் இடைவேளையில் பேசிக் கொண்டே சிகரெட் பிடிக்க குளிர் அடுப்பிலிருந்து நெருப்பு பற்ற வைக்க இதில் ஒவ்வொன்றாக சுருட்டி சுருட்டி பற்றவைத்துப் பயன் படுத்தியிருக்கிறார்கள். கடைசி இரண்டு சீட்டுகள் பாக்கி இருக்கும்போது திடீரென கவனித்து நிறுத்தி, எதற்கும் பார்ப்போம் என்று ரிசல்ட் பார்த்தால் கடைசியாக எரிக்கப் பட்ட இரண்டு நம்பர்களுக்கு ஆறுதல் பரிசு விழுந்திருந்ததாம்! விதி...

என் பையன் ஹோட்டலில் வைத்து விட்டு வந்த அவனுடைய செல்போன் ஒன்றரை மணி நேரத்திற்குப்பிறகு போன போதும் கூட திரும்பக் கிடைத்தது. செல்லை தவற விட்ட இன்னொரு தவணையில் திரும்பப் போய் வழியிலிருந்து எடுத்து வந்தான்!

இதிலிருந்து கிடைக்கும் நீதி என்ன? ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே என் தாழ்மையான அனுபவ அபிப்ராயம்!

ஏனென்றால், பிறிதொரு நாள் நண்பர்களுக்கிடையே இருக்கும்போது தவற விட்ட செல்போன், தெரிந்த கடையில் மறதியாய் வைத்து விட்டு வந்து விட்ட வாங்கிய மளிகைப் பொட்டலம், பஸ்ஸில் தவற விட்ட பர்ஸ், சரவணா ஸ்டோர்ஸில் மாடியில் மறந்த குடை இன்னும்.. இன்னும் என்று நிறைய பொருட்கள் திரும்பி வரவில்லை! கிடைத்ததை விட கிடைக்காதது அதிகம்தான். அந்த பாதிப்பினாலேயே யாராவது தவற விட்ட பொருள் கைக்குக் கிடைத்தால் அவர்களிடம் சேர்ப்பிக்க முயற்சி செய்வது வாடிக்கை.
   
என் நண்பர் எல்லாவற்றையும் கடைசி நிமிடத்தில் பரபரப்பாகச் செய்தே பழகியவர். ரிசர்வ் செய்த ரெயில் வண்டிகளுக்கு ஒரு முறை கூட அவர் முன்னதாகச் சென்றது கிடையாது. கிளம்பும் நேரம்தான் பரபரப்பாகப் படியிறங்கிக் கொண்டிருப்பார்! அபபடி சென்னையில் மின்வண்டியைப் பிடிக்கும் ஒரு சமயத்தில் ட்ரெயின் வேகம் பிடிக்கத் தொடங்கி விட, ஓடி வந்து எட்டி ஏறிய, அரைகுறைத் தொங்கலில் இருந்த நண்பர் தன் கடைசி கணங்கள் வந்து விட்டதாக உணர்ந்த சில கணங்களை நினைவு கூர்ந்தார். ஸ்டேஷனில் நின்ற பற்பல நபர்களின் கூச்சல், பதட்டத்தை அதிகப் படுத்த, கையை விட்டால் ட்ரெயின் சக்கரம்தான் என்ற நிலையில், ட்ரெயின் பெட்டியில் நின்ற இரண்டு மூன்று கல்லூரி மாணவிகள் அவரை நொடியில் உள்ளே இழுத்துக் காப்பாற்றியதைச் சொன்னார். தொங்கலில் அவர் செல்போன் பிளாட்பாரத்தில் விழுவதை அறிந்தும் அதைக் காப்பாற்ற முடியாத நிலை! கை கொடுத்துக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொன்ன அவர், (கூச்சத்துடந்தான்!) அடுத்த ஸ்டேஷன் வரும் வரை தலைகுனிந்து, வெளியே பார்த்து என்று இருந்து விட்டு அடுத்த் ஸ்டேஷனில் இறங்கி பெட்டி மாறினாராம். 
                       
அப்புறம் அவர் கடைசி நேர பரபரப்புப் பயணங்கள் செய்வதில்லை. மறுநாள் முன்னாலேயே தன்னுடைய ஸ்டேஷன் சென்று விட்ட அவரிடம் அவர் செல்போன் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டது! முதல்நாள் வீரசாகசத்தைப் பார்த்த சீசன் டிக்கெட், வழக்கப் பயணியின் கருணை!
                
நடந்து செல்லும் வழியில் ஒரு ரூபாய் நாணயங்கள், இரண்டு ரூபாய் நாணயம், ஏன் ஐந்து ரூபாய் நாணயம் கூட கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். லட்சியம் செய்வதில்லை. இதே ஐம்பது, நூறு ரூபாய்களோ, ஐநூறு ரூபாய் நோட்டோ கிடந்தால் அலட்சியமாக நடப்போமா என்று எண்ணி....        
            
இன்றைய நடையை நிறைவு செய்கிறேன்!    
                                     

புதன், 17 ஆகஸ்ட், 2011

இசை ஞானம்

                                          
இசை ஞானம் பிறவியிலேயே வரும் என்று அடிக்கடி என்னுடைய அன்னை தந்தை கூறுவதைக் கேட்டதுண்டு. அது எவ்வளவு தூரம் சரியானது என்று யோசித்ததும் உண்டு. 

சமீபத்தில் பெங்களூரில், உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். காலையில் விழிப்பு வந்ததும் 'படுக்கையை விட்டு எழுந்திருப்போமா - வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பாக எழுந்து வீட்டுக்குள் உலா வந்தால் - பார்ப்பவர்கள் ஏதேனும் சந்தேகப் படுவார்களோ?'  என்றெல்லாம் யோசனையோடு படுத்திருந்த போது.....

ஹேமநாத பாகவதருக்குக் கேட்டது போன்று (வாய்ப் பாட்டு அல்லாத) வாத்திய ஒலி கேட்டது. அதுவும் நாதஸ்வர இசை! அந்த வீட்டில் உள்ள உறவினருக்கு சங்கீத ஞானம் ஏதோ கொஞ்சம் உண்டு என்றாலும் - இந்த அளவுக்கு எல்லாம் வாசிக்க நிச்சயம் தெரியாது. அதையும் தவிர, அவர் வீட்டில் சில புல்லாங்குழல்கள் மட்டும் எப்பொழுதோ பார்த்திருக்கின்றேன். அதையும் அவர் வாசிக்கும் பொழுது அடுப்பூதும் சத்தம் அதிகமாகக் கேட்கும். 

நான் கேட்ட நாதஸ்வர இசை ஒலி வடிவில் இங்கே கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள். 


யார் இதை வாசித்தவர் என்று மாடியிலிருந்து இறங்கி வந்து பார்த்தால் - வீதியில் இந்தக் கலைஞர் வாசித்தபடி நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டுப் பாருங்கள். கற்பனா ஸ்வரங்கள் பிரமாதமாக உள்ளன அல்லவா? 

   
அவருடைய வாசிப்பு நன்றாக இருந்தது என்று கூறி, அவரைப் பாராட்டி, அவருக்குப் பணமும் கொடுத்து, ஒரு படமும் எடுத்து வைத்துக் கொண்டேன். 
                    
தொடர்ந்து அவர், ஹிந்தோளம், மோகன கல்யாணி, பிலஹரி, பீம்ப்ளாஸ் என்று பல ராகங்கள் பிரமாதமாக இசைத்தபடி வீதியில் சென்றார். 
                
சக ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு, பிச்சைக்காரர்கள் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. இந்த வகை தெருக் கலைஞர்களை, பிச்சைக்காரர் என்று சொல்ல மனம் வரவில்லை.