சனி, 27 அக்டோபர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 21/10/12 டு 28/10/12


எங்கள் B+ செய்திகள்.

விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

============================

தஞ்சையிலிருந்தபோது கணவரின் மளிகைக் கடையில் நஷ்டம் ஏற்பட, மகன்களின் படிப்புச் செலவும் படுத்த, சென்னை வந்த இன்பவள்ளியின் குடும்பம், திருச்சி வந்து அங்கு மகளிர் சுய உதவிக் குழு மூலம் ஒரு தேவையின் போது இன்பவள்ளி செய்து கொடுத்த ஊறுகாய் நன்றாக விற்பனை ஆக, அப்போது தொடங்கி ஊறுகாயும் தேன்குழல் உள்ளிட்ட பலகாரங்களும் செய்து விற்பனை செய்யத் தொடங்கினர். மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம் 25,000 ரூபாய் கடனுதவி பெற்று மெஷின்கள் வாங்கி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் உதவியுடன் மாணவர்களிடையே வியாபாரமாகத் தொடங்கிய பிசினஸ் இன்று எல்லா கடைக்காரர்களும் இவர்களது தயாரிப்பு நன்றாக விற்பனை ஆவதாகக் கூறி ஆர்டர் தரத் தொடங்கியதில் மாதம் நான்கு லட்சம் வரை இலாபம் வருகிறதாம். சொல்வது தினமலர்.  
=============================

இதேபோலவே இன்னொரு வெற்றிக் கதையும் சொல்லியிருக்கிறது தினமலர். திண்டுக்கல்லில் (தனபாலன்! உங்கள் ஊர்ச் செய்தி வாராவாரம் வந்து விடுகிறது!) இதேபோல மளிகைக் கடை வைத்து நஷ்டமடைந்த வள்ளிமயில் என்பவரின் வெற்றிக் கதை. அவர் கணவர் காந்தியவாதி என்பதால் பொருட்களைக் குறைந்த விலைக்கே விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம். இப்போது போல விதம் விதமான மிட்டாய்கள் இல்லாத அந்தக் காலத்தில் ஒருமுறை இவர்கள் கடைக்கு கடலை மிட்டாய் போடுபவர்கள் வராது போன நிலையில் கணவர் சொற்படி, இவரே அதைத் தயார் செய்து விற்பனையில் வைக்க, அதன் வெற்றியில் உற்சாகமாகி, வீட்டிலிருந்த நாத்தனார்கள் முதலியானோர் உதவியுடன் கொஞ்சம் பெரிய அளவில் தயார் செய்ய, அதைக் கணவர் ரயிலில் எடுத்துக் கொண்டு வெளியூர்கள் சென்று கடைகளில் போட்டு வருவது வாடிக்கையான நாளில், இவர்களது தயாரிப்பின் சுவையால் கவரப் பட்ட வாடிக்கைக் கடைக்காரர் ஒருவர் எள்  மிட்டாய் செய்யும் ஐடியா கொடுக்க, அதுவும் வெற்றியடைந்ததாம். அப்புறமும் சிறிய தொழிலாக இதைச் செய்ய வேண்டாம் என்று திண்டுக்கல்லில் இருந்த வீடு நிலத்தை விற்று பெரிய கம்பெனி கட்டி 50 பெண்களை வேலைக்கு வைத்து செய்யும் இவர்களது தயாரிப்பு இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறது என்று சொல்வதாகச் சொல்லும் தினமலர், இவர்கள் தயாரிப்பின் பெயரைச் சொல்லவில்லை!
================================

வயதான பெரியவர்கள் தெருவோரங்களில் கையேந்தி நிற்பதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறதா? பிள்ளைகள் பராமரிக்காத, வசிக்க வீடு இல்லாத, சாப்பாட்டுக்கு வழி இல்லாத என்று எந்த ஒரு முதியவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண 1253 என்ற எண்ணுக்கு சொன்னால் அந்தந்த ஊரின் முதியோர் இல்லங்களில் சம்பந்தப் பட்டவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்ற தகவலைச் சொல்கிறது 17/10 விகடன் 'ஒன நம்பர் ரிசீவ்ட்' பகுதி.
           

(இது விகடனில் படித்த செய்தி. எங்கள் நண்பர் ஒருவர், மூதாட்டி ஒருவர் மழையில் நனைந்து கொண்டு தெருவில் கஷ்டப்படுவதாகச் சொன்னவுடன் இந்த எண்ணைக் கொடுத்தோம். பலமுறை பலவிதங்களில் முயற்சித்தும் இந்த எண்ணுக்கு தொலைபேச முடியவில்லை என்பதும் இங்கு பதிவு செய்யப் படுகிறது)  
==============


அனந்தபுரி விரைவு வண்டியில் கடைசி ஞாயிறு அன்று சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பையை பெட்டியிலேயே விட்டு விட்டு, கொடை ரோடில் இறங்கிச் சென்று, பாதி வழியில் நினைவு வந்து ரெயில்வே போலீசுக்கு ஃபோன்  செய்ய, அதற்குள் கிளம்பி விட்ட அந்த ரெயிலை, திருநெல்வேலியில் நின்றவுடன் ஏறி, அதே பெட்டியில் வைத்த இடத்தில் பத்திரமாக இருந்த அந்தப் பையை எடுத்து, தவற விட்டவர்களின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்தது காவல் துறை.    
=====================
  
இதே போல இன்னொரு செய்தியைத் தருகிறது தினத் தந்தி. சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த 65 வயது பிரான்சிஸ் நிலம் விற்ற 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்ப் பணத்துடன் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக ரெயிலில் பொதுப் பெட்டியில் ஏறியவர் தன் பையை ரயிலில் மறதியில் தவறவிட, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மணிகண்டன் என்ற எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் தன் அருகே இருந்த அந்தப் பையை எடுத்து ரயில்வே போலீசில் கொடுக்க, அந்தப் பையில் இருந்த பான் கார்டு ரேஷன் கார்டு மூலம் பிரான்சிஸ் முகவரி அறிந்த போலீசார், அந்தப் பணத்தை பத்திரமாக பிரான்சிஸ் வசம் ஒப்படைத்தனர்.   
========================  
    
சேலம் பற்றி இன்னொரு செய்தி. கொஞ்சம் பழசு! சேலம் ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிச் சாலையில் உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டிருந்த வர்த்தகரும், சமூக ஊழியருமான ஜி. கண்ணன் என்பவரிடம் ஒரு பாட்டியும் பேத்தியும் வந்து பிச்சை கேட்டார்களாம். பாட்டிக்கு அங்கேயே உணவுப் பொட்டலம் வாங்கித் தந்த கண்ணனிடம் அந்தப் பேத்தி சிறிய குரலில் "எனக்கு சாப்பாடு வேண்டாம், படிப்பு கொடுங்க" என்று கேட்க, அதிர்ந்து போன கண்ணன் சேலம் சூரமங்கலம் துணை போலீஸ் கமிஷனர் டி. சந்திரசேகரனிடம் தகவல் தெரிவிக்க, பாட்டியின் அரவணைப்பில் வளரும் அந்த 5 வயது ஐஸ்வர்யாவின் ஆசையான, 'டாக்டராக வேண்டும்' ஆசை வெளிப்பட, நகரின் அன்பில்லம் ஒன்றில் படிக்க வைக்க வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி நெகிழ வைக்கிறது ஹிந்து.    
===================    
       

12 கருத்துகள்:

  1. விகடன் நியூசை நான் எடுத்து போடலாம்னு பார்த்தா அந்த நம்பர் வேலை செய்யலைன்னும் சொல்றீங்களே :((

    பதிலளிநீக்கு
  2. சிறிய தொழில் தான் மிகப் பெரிய லாபம்...

    1253 - கொடுமை...

    காவல் துறைக்கு ஒரு பெரிய சல்யூட்...

    ஹிந்து செய்தி நெகிழ வைத்தது...

    எங்க ஊர் செய்திக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு செய்தியும் பாசிட்டிவ் தான். சிறுமிக்கு படிக்க வசதி வைத்த செய்தி மனதை நெகிழ வைத்தது. படிக்க வசதியில்லாது இருக்கும் இது போன்றவர்களுக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. பாசிட்டிவ் செய்திகள்
    பகிர்வுக்குப்
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அனைத்து செய்திகளும் அருமை தான் என்றாலும் ஹிந்து செய்தி மனதை நெகிழ வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. எதிர்மறை செய்திகளே பூதகரமாகத் தெரியும் வேலையில் உங்கள் நேர்மறை செய்திகள் நெஞ்சுக்கு இதமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் எங்கள் ப்ளாக்

    உங்களின் வலைப்பூ பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகானது பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களால் படைக்கப்பட்ட ஆக்கங்களை படித்து பார்க்கும்போது மனதுக்கு ஒரு நகைச்சுவை விருந்தை அள்ளித்தந்தது. மிகவும் அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள். உங்களின் தளத்துக்கு நான் புதியவன். அதிலும் சேலம் பற்றிய செய்தி மிகவும் அருமை என்னை அறியாமல் நானே சிரித்து விட்டேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. நம்பிக்கை தருகிற செய்திகள்.

    மனிதரிடத்தில் நேர்மை(அனந்தபுரி, சேலம்) மகிழ்ச்சி தருகிறது.

    சுவை, தரம், நியாய விலையுடன் உழைப்பும் சேர்ந்தால் வெற்றிதான். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய் சிறிய அளவிலான கடைகளில் அங்கேயே போடப் போட்டு அன்றைக்கே அமோகமாக விற்பனையாகி விடுகின்றன.

    மின்னஞ்சல் அனுப்பிப் பார்ப்போம் விகடனுக்கு.

    பதிலளிநீக்கு
  9. வலைச்சரத்தில் வலைப்பூ அறிமுகம். பாசிட்டிவ் செய்தி.
    தொலைந்த பணம் கிடைக்கிறது என்றால் இன்னும் கலியுகம் வரவில்லையா:)ஐஷ்வர்யா நன்கு படித்து முன்னேற வாழ்த்துகள். செய்திகளில் நல்லவற்றைப் பற்றிப் படிக்க மிக சந்தோஷம்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய செய்தித்தாள்களில் பாஸிடிவ் செய்திகளை பார்பது அரிதாக இருக்கு. உங்களுடைய செய்திகளை படிக்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக இருக்கு. நல்ல விஷயம், தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. தவறவிடும் பைகள், அப்படியே திரும்பக் கிடைப்பதற்கு, தற்காலச் சூழலில் ‘பாம்’ பயமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். (எப்பவும் கோணல் புத்திதானான்னு திட்டாதீங்க) :-))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!