புதன், 31 ஜூலை, 2013

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 7 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால்,...... அது பிரசுரமானால்,................ அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 

இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
====================================================================

1) ராமர்பிள்ளை மறுபடி மூலிகை பெட்ரோலுடன் வருகிறார். மூலிகை பெட்ரோல் இல்லை,மாற்று எரிசக்தி என்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மற்றும் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்கள் ஆதரவுடன் தொழிற்சாலை அமைத்து, பெரிய அளவில் தயார் செய்யப் போகிறாராம்.  ஆகஸ்ட்டில் லிட்டர் 5 ரூபாய், வரியுடன் 7  ரூபாய் என்று பெட்ரோல் விற்கப் போகிறாராம். இது நேற்று செய்தி. எந்த அளவு இது சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்கள்?

2) உறவுகளில் உயர்ந்த உறவு எது?


3) ஆரோக்கியத்தை, டயட்டை விடுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகை எது?!

செவ்வாய், 30 ஜூலை, 2013

மனவரிகள்... 7 2013




எப்போதும்
மறைமுகமாகவே
வெளிப்படுகின்றன
கோபமும் அழுகையும்


 
அடக்க நினைத்தாலும்
மறைக்க
முடிவதில்லை
சந்தோஷத்தையும் சிரிப்பையும்

...
**************************************************************
**************************************************************

கண் மூடிக்
காத்திருக்கிறேன்
கனவுகளுக்காக


 
காதலி மட்டுமல்ல,
கனவுகளும்
காத்திருந்தால்
வருவதேயில்லை

**************************************************************
***************************************************************


ஒற்றைக் குடையோடு
காத்திருக்கிறேன்..
மழைக்காகவும்,
உனக்காகவும்....

*****************************************************************
******************************************************************

Photo: நீர் ஏன்
மலையானது?
மலை ஏன்
சிலையானது?

எதைக் கண்ட அதிர்ச்சியில்
இப்படி உறைந்து
நிற்கின்றன பனிப்பாறைகள்..!



சனி, 27 ஜூலை, 2013

பாசிட்டிவ் செய்திகள் 21, ஜூலை 2013 முதல் 27, ஜூலை 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
1) சென்னை நகரில் ஆட்டோ ஓட்டிய முதல் பெண், கோவிந்தம்மாள், 50. கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். காக்கி நிறத்தில் சட்டை, கால்சட்டை, பெயர்பட்டை, நெற்றியில் குங்குமம், கிராப்பு தலை என, மிடுக்கான தோற்றத்தில் கம்பீரமாக சென்னை நகரை வலம் வருகிறார்.
                                          

ஆட்டோ ஓட்டுனரானது குறித்து அவர் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் செய்யாறு. திருமணமாகி வேளச்சேரிக்கு குடிபுகுந்தேன். என் கணவருக்கு பூ வியாபாரம்தான். சற்று வசதியான குடும்பம் என்பதால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 20 ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டுவந்தேன். ஏமாற்று கும்பலால் என் ஆட்டோக்களை விற்க வேண்டிய சூழல். குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது.

உறவினர்களின் அவச்சொல்லுக்கு ஆளாகி நின்றேன். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அப்போது, என்னிடம் ஒரே ஒரு ஆட்டோ மட்டுமே இருந்தது. அதை நானே ஓட்ட முடிவு செய்தேன். என் முதல் சவாரி விஜயநகரில் இருந்து சென்ட்ரல் சென்றதுதான். அந்த அனுபவம் மறக்க முடியாது. தொடர்ந்து போராடினேன். படிப்படியாக முன்னேறி என் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன். மகனை படிக்க வைத்தேன். தொழிலில் நேர்மை முக்கியம். அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதில்லை.

அனைத்து ஆவணங்களும் எப்போதும் இருக்கும். சாலை விதிமுறைகளை மீறுவதில்லை. சீருடை இல்லாமல் ஆட்டோ எடுக்க மாட்டேன். என், 20 ஆண்டு கால ஆட்டோ பணியில் ஒரு முறை கூட போக்குவரத்து போலீசாரிடம் முறை தவறி நடந்து அபராதம் கட்டியது கிடையாது. 

சென்னையிலேயே ஆட்டோ ஓட்டிய முதல் பெண் என்ற சந்தோஷம் இன்றும் உள்ளது. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பல பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பழகி கொடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

2) கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுற்றுலா சென்ற மதுரை திருநகர் பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்த துயரச் சம்பவம் இப் பகுதி மக்களின் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை.
                                                      

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சென்று, சக மாணவர்களைக் காப்பாற்றிய அந்த மாணவர், அலையின் சீற்றத்தில் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

 திருநகர் சி.எஸ். ராமாச்சாரியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 113 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு ஜூலை 12 ஆம் தேதி சுற்றுலா சென்றனர்.

 தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரைக்குச் சென்றபோதுதான் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு மாணவ, மாணவிகள் கடலில் கால்களை நனைத்தபடி நின்று கொண்டிருந்த வேளையில், ஒருசில மாணவர்கள் அலைகளில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் சிலரை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றபோது, அவர்களை உயரமான மாணவர்கள் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

 அதில் திருநகர் காந்திஜி தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் பரமேஸ்வரன் (17)தண்ணீரில் தத்தளித்த தன் சக நண்பர்களைக் காப்பாற்றச் சென்றுள்ளார். நீச்சல் தெரிந்த பரமேஸ்வரனின் முயற்சியில் பாலாஜிராஜன், பாலமுருகன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த விஷ்ணுதரனையும் கரை சேர்த்த பரமேஸ்வரன், மீண்டும் கடலுக்குச் சென்றபோது திரும்பவில்லை. ஆனால், விஷ்ணுதரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கரையில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் மூழ்கிய சதீஷ்குமார், தேவ் ஆனந்த் ஆகியோரது உடல்களை மீட்டனர்.

 மூன்று மாணவர்களை மீட்ட பரமேஸ்வரன், நண்பர்களுடன் இருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்தே அவர் காணவில்லை என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களும் தள்ளப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு பரமேஸ்வரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர் அவரது பெற்றோர் சரவணன் - ராஜேஸ்வரி. நீச்சல் பயிற்சி பெற்ற பரமேஸ்வரனை, கடலில் மூழ்கி இறந்த நிலையில் பார்த்த அதிர்ச்சி இன்னும் எங்களைவிட்டு நீங்கவில்லை. தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்தபோதுதான், சக மாணவர்களை கடலில் சென்று காப்பாற்றியது தெரியவந்தது என்றனர்.

 சக மாணவர்களை மீட்ட பரமேஸ்வரனின் வயிற்றில் கடல் நீர் இல்லை. பிரேதப் பரிசோதனையின்போது இது தெரியவந்திருக்கிறது. கரைக்குத் திரும்ப முயற்சி செய்தும் அவரால் முடியாமல் நீரில் மூழ்கியிருக்கிறார். நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள் என்று தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்ததாக பரமேஸ்வரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

 மற்ற மாணவர்களைப் போல கடலில் விளையாடச் சென்றபோது இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரது வீரச் செயல் தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது. பரமேஸ்வரன் மறைந்தாலும், அவரது நினைவலைகள் திருநகர் வாசிகளின் மனதில் நிழலாடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

3) செஞ்சி அருகே, தனியாக வசிக்கும், 100 வயது கடந்த தம்பதியர், தங்கள் உணவை தாங்களே சமைத்து, அனைவரையும் அசத்தி வருகின்றனர்.
               
விழுப்புரம் மாவட்டம், ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர், ரங்கசாமி. 130 வயது எனக் கூறும் இவருக்கு, 2005ல் வழங்கியுள்ள ரேஷன் கார்டின்படி, 123 வயதாகிறது. இவர், மனைவி சடைச்சியம்மாள், 108. இவருக்கு, மூன்று மகன்கள், 10 பேரன், 3 பேத்திகள், 12 கொள்ளு பேரன், 12 கொள்ளு பேத்தி, ஒரு எள்ளு பேரன், ஒரு எள்ளு பேத்தி உள்ளனர்.கணவன், மனைவி வெற்றிலை போடுவர். ரங்கசாமியின் பற்கள் கரைபடிந்துள்ள போதிலும் விழவில்லை; கைத்தடி உதவியுடன் நடக்கிறார். இருவருக்கும் பார்வை தெளிவாக உள்ளது.
                                                       

சடைச்சியம்மாள் ஒரு ஆண்டுக்கு முன் கீழே விழுந்ததில், சரியாக நடக்க முடியவில்லை. உடல் நலக்குறைவுக்காக, ஒரே ஒரு முறை மட்டும் மருத்துவமனைக்கு சென்றதாக, ரங்கசாமி கூறுகிறார்.மகன்கள் இருப்பதாலும், வயது அதிகமாக இருப்பதாலும் அரசு உதவித் தொகை கிடைக்கவில்லை. தனி வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு, உள்ளூரில் இருக்கும் பிள்ளைகள், உணவிற்கான பொருட்களை வாங்கித் தருகின்றனர்.தங்களுக்கான உணவை அவர்களே சமைக்கின்றனர். நூறாண்டு கடந்த இருவரும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்த்து, அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர்.
 

வெள்ளி, 26 ஜூலை, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130726:: நடிகை மஞ்சுளா

               
இந்தப் பாடல் காட்சியில், மஞ்சள் சட்டை அணிந்து, கண்ணாடியணிந்து துடிப்பாக ஓடியாடி நடித்திருக்கும் சிறுமி,
    
சென்ற செவ்வாய்க்கிழமை (23 - 07 - 2013) அன்று காலமான நடிகை மஞ்சுளா அவர்கள். 
                 

                    

புதன், 24 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை ( 2 )- தொடர் பதிவு

                   
ஆச்சா... எங்க விட்டேன்... ஆங்.. ஸ்டேட்மென்ட்.. இந்த வருடாந்திர ஸ்டேட்மென்ட் அப்புறம் வருடாவருடம் கம்ப்யூட்டரிலேயே போட்டு வந்ததும், மெல்ல மெல்ல கேஜி எனக்கும் தெரியாமல் கணினி சம்பந்தமாக சில விவரங்களை எனக்குள் ஏற்றியிருந்தார். 
                
வர்ட், எக்செல், டாகுமென்ட் கண்ட்ரோல் எஸ் கொடுத்து சேவ் செய்வது, எக்செல்லில் கால்குலேஷன் ஃபார்முலா என்றெல்லாம் தெரிந்தாலும் கணினியைத் தொட்டேனில்லை. தொட்டுத் தப்பாச்சுன்னா மானம் போயிடும் என்று பயம்.  உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்னு...
                      
ஆபீசில் கம்ப்யூட்டர் பற்றிப் பேசுவதில் நான்தான் பிஸ்தா. ஃபிளாப்பி, சிடி என்று பேசி... 
                  

ஆங்... சிடி... சிடி... சிடியை வைத்துத் தனிப் பதிவே எழுதலாம்! இந்த சிடிக்கு கம்ப்யூட்டர் ஆதரவு ரொம்பத் தேவை. 

                 

கிடைக்காத பழைய SPB பாடல்கள், கிஷோர் குமார் பாடல்கள் போன்ற பாடல்கள், கேசெட்டை விட்டு சிடியில் கிடைக்கத் தொடங்கிய நேரம். வீட்டிலும் சிடி ப்ளேயர் இருக்கவே, கிடைக்கும் சிடிக்களைக் காபி செய்ய அடிக்கடி கேஜி வீட்டுக்குப் படை எடுப்பேன்.  
                     
CDக்கள் காபி எடுத்து வைக்கும் கலை பழக்கமானது. அந்த வசதி எல்லாம் மிக ஆச்சர்யமாக இருந்தது. கம்ப்யூட்டரிலேயே பாடல் கேட்கும் வசதி மனதை ஈர்த்தது. 

               

இருந்தாலும் சொந்தமாகக் கம்ப்யூட்டர் வாங்கும் அதிருஷ்டம் 2004 ல்தான் வாய்த்தது. என்னைவிட கேஜிக்கு இதில் ரொம்ப சந்தோஷம். வாங்கும் நேரம் கேஜியைக் கூப்பிட்டு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். இதில் ஒன்றுமில்லை என்றாலும் அவர் என் திருப்திக்காக வேலையை விட்டு விட்டு வந்து உட்கார்ந்து சென்றார்.
                  
இப்போது என் வீட்டில் ஒரு கணினி! அதில் நான் என்ன செய்தாலும் யாரும் பார்க்கப் போவதில்லை. யாரும் சிரிக்க மாட்டார்கள். கேஜியிடம் கேட்டு கேட்டு ஆபரேட் செய்யத் தொடங்கினேன். 
                

"இதோ பாரு... அது வெடித்து விடாது... ஷாக் அடிக்காது... மவுசைக் கையில பிடித்து ஒவ்வொன்றாக ஓபன் செய்... மூடு.  ஹெல்ப் என்றிருப்பதைப் படி... ட்ரை செய்.. என்ன பிரச்னை வந்து விடப் போகுது? ஏதாவது பிரச்னைன்னா இருக்கவே இருக்கு ஃபோனு...அதுல கேளு.."
                   
அப்புறம் அவ்வப்போது பதட்டமான கால்கள் இங்கிருந்து அங்கு பறக்கும்.
              
"அய்யய்யோ... விண்டோ விண்டோ விண்டோவா எக்கச்சக்கமா ஓபன் ஆயிகிட்டே போகுது... என்ன செய்ய?"
                 
"டெஸ்க் டாப் ஸ்க்ரீன் தலை கீழா தெரியுது... என்ன செய்ய?"  
               
"தானாவே ஆஃப் ஆயிடுது... என்ன செய்ய"
                
"ஆன் செய்தால் ஆனே ஆகலை.. மானிடர் கம்முனு இருக்கு.."
                   
இதுபோன்ற ஒவ்வொரு  சந்தேகங்களுக்கும் பொறுமையாக "கடைசியில் என்ன செய்தே... எதை எதை ஓபன் செய்தே? ஏதாவது எரர் மெசேஜ் வந்ததா... ஓகே கொடுத்தியா.. ரைட் க்ளிக் பண்ணு... பிராபர்டிஸ் போ... கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் அடி... ஆல் ப்ரோக்ராம்ஸ் போ.. அசசரிஸ் போ...சிஸ்டம் ரெஸ்டோர்னு இருக்கா.." என்றெல்லாம் டெலிபோனிலேயே என் கணினியையும் என்னையும் ரிப்பேர் செய்தார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நேரே வந்தும், வேறு சில சமயங்களில் அவரது ஆஸ்தான கணினி மருத்துவரை அனுப்பியும், என்னை பட்டை தீட்டினார். இதுவரை முழுசா பளபளக்கவில்லை என்பது வேறு விஷயம்!!
                
2007 முதலே இணைய இணைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதைய இணைய பிளான்கள் அருகில் நெருங்கும்படி இல்லை. ஓரிருமுறை டயலப் கனெக்ஷனில் சென்றதோடு சரி. அந்தச் சமயங்களில் ரிடிஃப் மெயிலிலும், யாஃகூ மெயிலிலும் சில கணக்குகள் துவக்கி வெட்டியாக வைத்திருந்தேன். 
               
குடும்ப நெட் க்ரூப் ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் என்னைச் சேரச் சொன்னார். ஊ......... ஹூம். நானா? கேட்டு விடுவேனா? உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்.... நோ.. நோ.. எதுக்குக் கையை .ஓங்கறீங்க... நோ வன்முறை!

                     

அப்புறம் 2009ல் இணைய இணைப்புப் பெற்று, உள்ளே வந்து, மெயில் ஐடி பெற்று, விக்கி, கொக்கி, எல்லாவற்றையும் பக்கி மாதிரி படித்துக் கொண்டு வந்தபோது கே ஜி கௌதமன் இட்லிவடை வலைப்பக்கத்தை அறிமுகப்    படுத்தினார். அப்புறம் அவரே ஒரு ப்ளாக் தொடங்கப் போவதாகச் சொன்னார்.  என்ன பெயர் வைக்கலாம் என்று சஜஷன் எல்லாம் கேட்டார். பெயர்கள் சொன்னோம். எங்கள் ப்ளாக்கும் தொடங்கினார்! அங்கு கமெண்ட் போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். அதையும் கற்றுக் கொண்டு, "எழுதுங்க... அப்பப்போ வந்து கைதட்ட நானாச்சு" என்று உற்சாகம் கொடுத்தவனை "கை தட்டறதா... தம்பி குழுவில் நீயும் ஒருத்தன். உள்ள வா" என்றார். உங்களுக்கே தெரியும்... நான் கொஞ்சம் கூச்ச...
                       
அதையும் மீறி என்னை ,உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து கதை எழுத வைத்து, கட்டுரை எழுத வைத்து வலையுலகில் ஸ்ரீராம் என்றால் நாலு பேருக்குத் தெரியும் என்ற நிலையை உருவாக்கி, வலையுலக நட்புகளைப் பெற்றுத் தந்து, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம்  கம்ப்யூட்டரால்தான்  சாத்தியமாயிற்று! (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்!!)

             
நன்றி ஆசான்களே....

              
இனி நான் 5 பேரை  பதிவைத் தொடரச் சொல்லிக் கை காட்டணும்... இல்லையா? நான் முன்னர் இது மாதிரி அழைத்த சில பதிவர்கள் நாளது நாள் வரை தொடரவில்லை. எனினும் முயற்சியில் சற்றும் மனம்  தளராது ஒரு ஐந்து பேர்களை இழுத்து விடுகிறேன்.
                     
1)  நகைச்சுவைப் பதிவுகளில் கொடிகட்டிப் பறப்பவர்களில் ஒருவரான அநன்யா மகாதேவன். அநன்யாவின் எண்ண அலைகள் 
              
2) பயணத் தொடர்களிலும்  பதிவுகளிலும் அலுக்காமல் அசத்தும் தில்லி வெங்கட் நாகராஜ்.
               
3) மூத்த பதிவர்களில் ஒருவர், பதிவர், நகைச்சுவையாக(வும்) எழுதக் கூடிய திரு  சாமியின் மன அலைகள் உரிமையாளர் திரு பழனி கந்தசாமி அவர்கள்.
                 
4) அறிவுசார் பதிவுகள் முதல்  நகைச்சுவைப் பதிவுகள் வரை அசத்தும் டிரங்குப்பெட்டி ஸ்பெஷலிஸ்ட் ஹுஸைனம்மா அவர்கள்.
                
5) கண்ணனுக்காக பதிவுகளை விறுவிறுப்புடன் எழுதி வரும், கல்யாணமும் சம்பிரதாயங்களும் பற்றி விலாவாரியாக எழுதி வரும் இன்னொரு மூத்த பதிவர்  கீதா சாம்பசிவம் அவர்கள்.  


இதில் யாரையாவது வேறு யாராவது முன்னரே அழைத்திருந்தால் சொல்லுங்கள். கைவசம் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், மாட்டி விட! 5 பேர்களைத்தானே சொல்லச் சொன்னார் பாலகணேஷ் என்று கையை அடக்கிக் கொண்டு 5 பெயர்கள் சொல்லியிருக்கிறேன்!!
                          

செவ்வாய், 23 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - தொடர் பதிவு

            
அன்பர்களே... நண்பர்களே... முதற்கண், என்னை இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்த பால கணேஷுக்கு நன்றி. 
             
எவ்வளவு சௌகர்யம் பாருங்க... யோசிச்சு யோசிச்சு  என்ன எழுதறதுன்னு நம்ம மண்டைய நாம உடைச்சுக்க வேணாம்! சுலபம்!
                
தியேட்டரில் படம் பார்த்தபோது வீட்டிலேயே சினிமா பார்க்க டிவி வரும் என்று கண்டேனா... அது போலத்தான் கம்ப்யூட்டரும்! வீட்டில் நானும் ஒரு கம்ப்யூட்டர் வைத்துக் கொள்வேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.    
                                                               

பள்ளிப் படிப்பு முடிந்தவுடனேயே TNPSC, க்ரூப் 4 எழுதத் தொடங்கிய ஆசாமி நான்! தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டி நானும் மதுரை கோ புதூர் 'ரத்னா இன்ஸ்டிடிட்யூட்', அப்புறம் அண்ணா நகர் 'சத்யா இன்ஸ்டிட்யூட்' இரண்டிலும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலைத் தட்டச்சு தேறினேன்.
                    
சுருக்கெழுத்துதான் பூச்சி காட்டியது. ஏனோ மனம் அதில் பதியவில்லை. பல வகுப்புகள் சென்றும் தொடக்க நிலையிலேயே இருந்தேன். இன்ஸ்டிட்யூட் ஓனர் நண்பர்தான் என்பதால் கண்டிப்பு காட்டவில்லை! சிரித்துக் கொண்டே "ஸ்ரீ... நீங்க இந்த வேலைக்கு போகப் போறதில்லன்னு நல்லாத் தெரியுது" என்று நாகரீகமாகச் சொன்னார். புரிந்தது!
                 
அப்புறம் என்ன, TNPSC, SSC,BSRB, RSC என்று படையெடுத்துக் கொண்டிருந்தேன்.      

                                                    

'முடிஸ் எஸ்டேட்'டில் ஒரு இன்டர்வியூவுக்குச் சென்றேன். பொள்ளாச்சியிலிருந்து வாந்தி எடுத்துக் கொண்டே, கொண்டை ஊசி வளைவுகள் வழியாக மலை ஏறியதில் அனுபவப் பாடம், இது போன்ற மலைப் பிரதேசங்களுக்கு பஸ்ஸில் செல்லும்முன் பரோட்டா  சாப்பிடக் கூடாது! 
               
அந்த எஸ்டேட்டில் என் தட்டச்சுத் தகுதிக்கு வேலை தயாராக இருந்தாலும் நான் அதை ஏற்கத் தயாரில்லாததற்கு இரண்டு காரணங்கள். அதில் ஒன்று அந்த ஊரில் அரை மணிக்கொருதரம்தான் சாலையில் ஒரு ஆள் நடந்து போவதைப் பார்க்க முடிந்தது. இரண்டாவது காரணத்தை  இங்க சொல்லமாட்டேன்ல.....! எனவே சம்பளம் தவிர, வீடு என்ற பெயரில் பங்களா ஒன்று வாடகை இல்லாமல் தருகிறோம், ஒரு ஆள் வேலைக்குத் தருகிறோம், மாதம் 10 கிலோ அரிசி இலவசம், என்றெல்லாம் வந்த சலுகைகளை உதறி மதுரைக்கே திரும்பினேன். இதில் எனக்கு அடுத்த இடத்தில் இருந்த வேலூர்க்கார ஜேம்ஸுக்கு ஏக சந்தோஷம். ஊர் திரும்பியதும் அப்பா முகத்தில் எள் மற்றும் கொள். 5 வருடம் 'பாண்ட்' கையெழுத்திட்டு, எழுதிக் கேட்டார்கள் என்று சொன்னேன். அது ஓரளவு உண்மையும் கூட! 3 வருட பாண்ட் கேட்டார்கள்.

            
                                   

பசுவைப் பற்றி விழுந்து விழுந்து படிச்சுட்டு பரீட்சைக்குப் போனானாம் ஒருத்தன். அங்க போனா தென்னைமரம் பற்றி  கேட்டுட்டாங்களாம். நம்மாளு என்ன பண்ணினானானாம் (ச்சே... ஒரு னா எக்ஸ்ட்ரா ஆயிடுச்சு) பசுவைப் பற்றி விலாவாரியாக இது மாதிரி இது மாதிரி பசு ஒரு சாதுவான பிராணி, இது மாதிரி இது மாதிரி பசு பால் கொடுக்கும், இது மாதிரி இது மாதிரி பசுவைத் தெய்வமாக வணங்குவார்கள் என்றெல்லாம் எழுதி விட்டு கடைசி வரியில் இந்தப் பசுவை  கேள்வியில் கேட்கப்பட்டுள்ள தென்னை மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடித்தானாம்.   
                  
அது மாதிரி என்ன எழுதினாலும் எப்படியும் கடைசியில் கணினி பற்றி(யும்) கடைசியில் வந்து விடும்... ஹிஹி... 
                       
பதிவ எங்க நிறுத்தினேன்.... ஆங்...இதுபோல சிலபல சம்பவங்களுக்குப் பின் விடாது அலைந்து, தலையால் தண்ணீர் குடித்து ஒரு வேலையில் சேர்ந்தேன். எனக்கு மேலே இருந்த சீனியர் எனக்கு 'வேலை கற்றுக் கொடுக்கும்' (அப்படித்தான் அவர் சொல்லிக் கொண்டார்) போதே வருடாந்திர அறிக்கையை தயார் செய்யும் பொறுப்பை என் தலையில் கட்டினார். (கெக்கே.... தலைப்பு மேட்டருக்கு வந்துட்டேன்ல...).  இரண்டு A3 ஷீட்டை ஒட்டித் தயார் செய்யும் அந்த பேலன்ஸ் ஷீட் வேலையைப் பற்றி கேஜீயிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது 'இங்கு வா, அதைக் கம்ப்யூட்டரில் முடித்துத் தருகிறேன்' என்றார்.

                  
                         

அதுவரை லேசுபாசாய் இந்தக் கம்ப்யூட்டர் பற்றிக் கேள்வி பட்டிருந்தேன்.  ஒரு அலாவுதீனின் அற்புதக் கருவி போல மனதில் அதைப்பற்றி ஒரு பிம்பம் இருந்தது. எனவே, 'ஆஹா... சீனியர் ஒரு மாதம், ஒன்றரை மாதம் இழுக்கும் வேலையை நாம் அந்த மேஜிக் பாக்ஸை வைத்து ஒரே நாளில் முடித்து விடலாம்' என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். லோட்டஸ் என்றார், வர்ட்ஸ்டார் என்றார். அவை இந்தக் காதில் நுழைந்து அந்தக் காதில் வெளியேறியது. 'கொக்குக்கு ஒண்ணே மதி' என்று கையில் பெரிய பெரிய பேப்பர்களை வைத்துக் கொண்டு அதை எப்போது அவர் கையில் வாங்கிப் பார்ப்பார் என்று நின்றிருந்தேன்! ஸாரி, உட்கார்ந்திருந்தேன்.   
                
"நீ பாட்டுக்கப் போட்டுக்கோ" என்றார். பாக்கா என்ன நான் பாட்டுக்கப் போட்டுக்க? கணினி பற்றி நான் என்னத்தைக் கண்டேன்? கேஜீயிடம் தெரியாது என்று சொல்லவும் முடியாது. 
                     
ஏனென்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவும். லிங்க் க்ளிக்கி படிக்காமல் தப்பித்து வருபவர்களைப் பசித்த புலி தின்னட்டும். 

                                                     
               
அப்போதுதான் கம்ப்யூட்டரையே பார்க்கிறேன். என் முதல் கேள்வியே என்னைப் பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு'ம்' உதவியாயிருந்தது.    
                           
"இதுல சினிமா பார்க்க முடியுமா?" திரும்பி நிதானமாக என் முகத்தை ஒரு தரம் பார்த்தார். 
                  
அப்புறமும் அவர் எவ்வளவு சொல்லியும் 'மவுசை'க் கூடத் தொட மறுத்து, சற்றுத் தள்ளி ஜாக்கிரதையான தூரத்திலேயே நின்று பார்த்தேன். நான் தொட்டு ரிப்பேரானால் கூட கவலைப் படாதவர் கேஜி. மக்கள் சுயமுயற்சியில் கற்றுக்,கொள்வதை விரும்பி, ஆதரித்துப் பாராட்டுபவர். 
                   
குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் கொடுத்து அவை அக்கக்காகப் பிரித்து விளையாடுகின்றன என்று சொன்னால்   பாராட்டுவார். அவர்களைத் தடுக்கக்கூடாது என்பார்.    
                                                            
உங்கள் எல்லோருக்குமே தெரியும், நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்!!  அதிகம் பேச மாட்டேன்.  (சரிதானே சீனு? :-) ஆனாலும் கேஜி 'இவனை ஏண்டா அழைத்தோம்' என்று..........  நினைக்கவில்லை! அதான் கேஜி!      
   
(யாருங்க அங்கே தும்மறது!)    
             
"சரி, உட்காரு" என்று சொல்லி அவரும் கூட அமர்ந்தார். பேப்பரை அவர் பக்கம் நீட்டியபடி நான் இருக்க, 'அதைக் கையிலேயே வச்சுக்கோ... இங்க பாரு, இதை முதலில் இப்படி ஓபன் செய்யணும்... ஒண்ணொண்ணா சொல்லு! ஃபார்மேட் எப்படியிருக்கு காட்டு!' என்றார்.
          
இங்கு கேஜி பற்றிக் கொஞ்சம். 
            
எங்கள் வீட்டிலேயே முதலில் கணினி வைத்திருந்தவர் அவர். 80 களிலேயே வாங்கி விட்டார். வாங்கிக் கற்றுக் கொண்டதுதான். அவர் எந்த கணினி வகுப்புக்கும் போனதில்லை. எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை உடனே அக்குவேறு ஆணி வாகக் கழற்றி ஆராய்ந்து விடுவார். என்ன மெக்கானிசம் என்று தெரிந்து  அதைத் தானே ஒன்று சொந்தமாகத் தயாரித்து விடுவார். 60 களில், அப்போது இவர் தானே தயாரித்த ரேடியோ ஒன்றில்தான் அவரது அம்மா லண்டன் பி பி சி வரைக் கேட்பார். ரேடியோ என்றால் நீங்கள் டிரான்சிஸ்டர் மாதிரிக் கற்பனை செய்யக் கூடாது. ஒரு போர்ட் இருக்கும், அதிலிருந்து இரண்டு வொயர்கள் ஸ்பீக்கரில் இணைக்கப் பட்டிருக்கும் அவ்வளவுதான்! 
    
தீபாவளிக்கு வெடிவகைகள் வாங்க இவர் கையில் தாத்தா காசு கொடுத்தபோது என்ன நடந்தது என்பது போன்ற விவரங்களும், 80 களிலேயே தொட்டியில் தண்ணீர் நிரம்பியவுடன் தானாக நின்று, ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தவுடன் தானாக 'ஆன்' ஆகும் மோட்டார் ஒன்றை இவரே  தயாரித்ததுவும், கொசுக்களை விரட்ட அல்ட்ராசானிக் மெஷின் இவர் தயாரித்ததும் அப்புறம் தனியாக வேறொரு பதிவில் சொல்கிறேன். இது கம்ப்யூட்டர் பற்றிய தொடர் பதிவு. 

[கணேஷ்... ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என்று நொந்துகொள்வது தெரிகிறது. இதோ.. இதோ... சப்ஜெக்டுக்கு வருகிறேன்]

ஆக என்ன சொல்ல வருகிறேனென்றால், கம்ப்யூட்டர் பற்றிய அறிவும் இவருக்கு நிறைய. எனக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமல்லாமல், இது போன்ற அரசு அலுவலக வேலைகளைத் தன்னால் செய்ய முடியுமா என்று பார்க்கவும்தான் என்னை அழைத்திருந்தார்.

ஜாக்கிரதையான தூரத்தில் ஸ்டூலில் அமர்ந்து நான் டிக்டேட் செய்யச்செய்ய, அவர் டைப்பிக் கொண்டே வந்தார். ஒரு நாளில்  முடியும் என்று நினைத்தது ஒருவாரம், பத்து நாள் ஆனது. கம்ப்யூட்டர் ஒரு ஸ்ட்ரோக்கில் அத்தனை கணக்கையும் நொடிப்பொழுதில் போட்டதும், காபி பேஸ்ட் வசதியில் நிறைய விஷயங்களைச் சுலபமாக முடித்ததும் அதை அவர் வைத்திருந்த பிரிண்டரில் பிரிண்ட்  எடுத்ததும்  ஆச்சர்யங்கள்.

                                                  
ஆபீஸில் கொடுத்ததும், முடித்த ஷீட்டில் சில  தவறுகளை என் சீனியர் கண்டுபிடித்து, தான் கம்ப்யூட்டரை விடச் சிறந்தவராக்கும்' என்று நிறுவ முற்பட்டதும், அது மனிதத் தவறுகள், 'இன்புட்'டில் வந்த தவறுகள் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லியும் புரிய வைக்க முடியாமல் வேறு வழியில்லாமல் உள்ளுக்குள் பல்லைக் கடித்துக் கொண்டு "சார்...நீங்க ஒரு மேதை" என்று உ.சு.வா அசோகன் வாத்யாரைப் பார்த்துச் சொன்ன மாதிரி சொன்னதும் இந்தப் பதிவுக்கு வேண்டாம்!   
      
கணேஷ் ஆட்சேபிக்கக் கூடும்! 90 இல் அந்த அலுவலகத்தில் ஹெட் ஆபீஸுக்கு கம்ப்யூட்டரில் இந்த ஸ்டேட்மென்ட்டைக் கொடுத்த ஒரே ஆபீஸ் எங்கள் ஆபீஸ்தான்! 'பெருமை எல்லாம் .................. எனக்குத்தான்' என்று சொல்ல ஆசைதான்.ஆனால் சீனியர் அந்தப் பெருமையை தான் செய்ததாக சொல்லிக் கொண்டார் என்று அப்புறம் தெரிந்தது. சீனியர்கள் அராஜகம் ஒழிக!

           
தொடர் பதிவு என்றால் தொடரும் போடணுமோ.... 
                        
நாம ரொம்ப நியாயமான ஆசாமியாச்சே... பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது... உஸ்... அப்பாடா.... கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு அப்புறம் தொடரவா.... என்னது..? அடுத்துத் தொடரும் ஐந்து பேர்கள் யாரா....? கொஞ்சம் இருங்க சாமிகளா... நானே இன்னும் முடிக்கலை.... 
               
[தொடரும்]
                      

திங்கள், 22 ஜூலை, 2013

வாலி

      
                                                                                                            

- வாலி சிறுவயதில் நன்றாகப் படம் வரைவாராம். சில்பி ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தபோது  தான் வரைந்திருந்த ஓவியங்களைக் கொண்டுபோய் அவரிடம் காட்டினாராம். 'சொந்தமாக  முயற்சி செய்! உனக்கென ஒரு பாணி வேணும். இதுல  வடநாட்டுப் பிரபல ஓவியர் பாதிப்புத் தெரிகிறது' என்றாராம்.


 
- ஒருமுறை காமராஜும் ராஜாஜியும் ரயிலில் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனராம். இருவர் படங்களையும் வரைந்து வைத்திருந்த வாலி, உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் உதவியுடன்  கிடைத்த இடைவெளியில் இருவரையும் பார்த்து ஆட்டோகிராப் கேட்க, காமராஜ் உடனே  கொடுத்தவர், இவர் கையிலிருந்த ராஜாஜி படத்தைப் பார்த்து விட்டு 'ஓடு...ஓடு.. அவரிடமும் ஆட்டோகிராப் வாங்கு...டிரெயின் புறப்படப் போகுது' என்றாராம்.

                                                        

இவரும் ராஜாஜியிடம் சென்று அவர் படத்தை அவர் கையில் கொடுக்க, ராஜாஜி தன்னுடைய கையெழுத்து போலவே இல்லாமல் ஏதோபோல ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தாராம். ராஜாஜியின் கையெழுத்து எல்லோருக்கும் தெரியுமாதலால், நண்பர்கள் நம்ப மாட்டார்களே என்று 'ஏன் ஸார் போட்டுட்டீங்க...உங்க கையெழுத்து போலவே இல்லையே' என்றாராம் வாலி. ராஜாஜி உடனே சொன்னாராம், 'படம் கூடத்தான் என்னைப்போலவே இல்லை!'

- இன்னொரு சமயம் இவர் வீட்டில் வரைந்து வைத்திருந்த பாரதியார் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பாராட்டியவர் பாரதியாரின் மகள் தங்கம்மா பாரதி.  இதை ஒரு பெரிய பாராட்டாக எடுத்துக் கொண்டாராம் வாலி.


- திரையுலகில் வாலியைத் தவிர படம் வரைவதில் வல்லவர்கள் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் வெ. ஆ. மூர்த்தி.


- பள்ளியில் இவருடன் பயின்ற தோழர் ஒருவர், அப்போது இவரது  ஓவியத்திறமை கண்டு அப்போது ஓவியத்தில் பிரபலமான மாலி பெயர் போல ஒலிக்கவேண்டி 'வாலி' என்று பெயர் சூட்டினாராம். இவர் ஆசிரியர் ஒருவர் இவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து விட்டு, 'அதென்ன பெயர் வாலி? திரும்பு... உனக்கு வாலிருக்கிறதா என்று பார்ப்போம்' என்று கிண்டல் செய்தாராம்.


- இவர் பெயரை மற்றும் புகழை  கிண்டல் செய்த பிரபல எழுத்தாளர் ஒருவருக்கு வாலி தனக்கேயுரிய பாணியில் கொடுத்த பதிலை 
ஜெயமோகனும் வாலியும் பதிவில் ஏற்கெனவே பகிர்ந்திருந்தோம்.

- ஓவியம் வரையும் ஆசையை மூட்டை கட்டி விட்டு நாடகம் எழுதத் தொடங்கி அதில் பெரிய எல்லைகளைத் தொட்ட காலத்தில் இசையமைப்பாளர்களோடு பழகி, பாட்டுகள் எழுதியதில் தாள லயம், ஸ்ருதி லயம் எல்லாம் வசப்பட்டு விட்டதாகச் சொல்கிறார் வாலி. ராக ஞானமும் அப்போது ஏற்பட்டதுதானாம். பின்னாளில்  பாடல்கள் எழுத அது மிக உதவியாயிருந்ததாம்.


- யார் யாருக்கு எங்கெங்கே பிழைப்பு என்று எழுதியிருக்கிறது என்பதில் வாலிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆசைப்படும்போது கிடைக்காதது அப்புறம் எதிர்பாராத நேரத்தில் உச்சத்தில் உட்கார்த்தி வைத்து விடும் என்கிறார். பராசக்தியில் அனைத்துப் பாட்டையும் தானே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட கண்ணதாசனுக்கு  படத்தில் ஒரு நீதிபதி வேடம் மட்டும் கிடைத்ததை உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.
 
                                                    

- எம் ஜி ஆர்  இவரை 'ஆண்டவனே' என்றுதான் அழைப்பார். 

- வாலி திரையில் எழுதிய முதல் பாடல் ஏழை படும்பாடு படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சிரிக்கின்றாள் இவள் சிரிக்கின்றாள்' பாடல்.

- நமக்கெல்லாம் எந்தப் பாடல் யார் எழுதியது என்று குழப்பம் இருக்கும். ஆனால் எம் எஸ் வி ஒருமுறை ஒரு பேட்டியில் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...' பாடலை எழுதி விட்டு கண்ணதாசன் தன்னைப் பார்த்துக் கண்ணடித்ததாக' சொல்லியிருந்தாராம். வாலி சொல்கிறார்,'கண்ணதாசன்  எதற்காகக் கண்ணடித்தாரோ தெரியாது...ஆனால் அந்தப் பாடல் அடியேன் எழுதியது'


- தனக்கு உதவி கைதூக்கி விட்டவர்களை கடைசி வரை சொல்லிக்கொண்டேயிருப்பார். நாகேஷ், வி எஸ் கோபாலகிருஷ்ணன், எம் எஸ் வி, எம் ஜி ஆர், பி பி. ஸ்ரீநிவாஸ்... இப்படி!


- எம் எஸ் வி யுடனும் இளையராஜாவுடனும் அவருக்கு இருந்த புரிதல் கே வி மகாதேவனோடு ஏனோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.


- எல்லாமே தோல்வியாய் இருக்கிறது... இனி இங்கு நம் முயற்சி ஜெயிக்காது என்று ஊர் கிளம்பும் சமயம் பி பி  ஸ்ரீநிவாஸ் இவரைத் தேடிவந்து, அன்று அவர் பாடிய கண்ணதாசன் பாடலான 'மயக்கமா கலக்கமா' பாடலைப் பாடிக் காட்ட, அதைக் கேட்டு புது நம்பிக்கை  வரப்பெற்று கையில் எடுத்த பெட்டியைக் கீழே வைத்து விட்டாராம் வாலி.

                                                           


- கடைசி வார ஜூவியில் படித்ததிலிருந்து  சில...

- ஆஸ்பத்திரியில் படுத்திருந்தபோது அவரைப் பார்க்க வந்திருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு வாலி சொன்னாராம்,'சிவகுமார் வந்தாரு...ஏ ஆர் ரெஹ்மான் வந்தாரு... ராஜாத்தியம்மா வந்தாங்க... கலைஞர் வருவாரு... ஆனா வெளிக்கி வரமாட்டேங்குதேய்யா' என்றாராம்.


- அடுத்து பாடல் எழுத அட்வான்ஸ் வாங்கியிருந்த பணங்களை உடனே அவரவர்களுக்குத் திருப்பித் தரச் சொல்லி விட்டாராம். தன்னைப் பார்க்கவந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் 'பணம் வந்துடுச்சா' என்று கேட்டபோது அவர் தயங்க, உடனே திருப்பிக் கொடுக்கச் சொன்னாராம்.

                                                      

- மூச்சுக்கு மாஸ்க் வைத்திருந்தவர், 'நான் ஒரு ஹிந்து... ஆனாலும் மாஸ்க் இல்லாமல் இருக்க முடியவில்லை' என்றாராம்.

- அவர் பேசக் கூடாது, ஏதாவது தேவைப்பட்டால் எழுதிக் காட்டலாம் என்று அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்ட மருத்துவர் நரசிம்மன் சொல்லியிருக்க, பேப்பரை வாங்கி, "சுவாசம் மிகவும் மோசம்; நரசிம்மன் பயப்படுகிறார். அன்புசால் நரசிம்மன்,  உடலைக் காப்பாற்று! அன்புசால் வாலி' என்று எழுதிக் கொடுத்தாராம்.

சனி, 20 ஜூலை, 2013

பாசிட்டிவ் செய்திகள் - 14 ஜூலை, 2013 முதல் 20 ஜூலை, 2013 வரை

              
எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
          
1) சென்னை, மெரினா பீச்சில், இன்று (7/7/13) மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னாலும்... படிக்கும் பிள்ளைகளின் காதுகளில் மட்டும் ஏறுவதே இல்லை என்பதற்கு உதாரணமாக... கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் (நான்கு பேர் என்றும் சொல்கிறார்கள்), கடலில் இறங்கி தீவிரமாக குளித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தவர்கள், உற்சாக மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.  


                                                

                                                 

திடீரென்று காப்பாத்துங்க காப்பத்துங்க என்கிற குரல் கேட்க, அதையும் குஷியில் தமாஷாக கூச்சலிடுகின்றனர் என்றே புரிந்து கொண்டது கரையிலிருந்த கூட்டம். ஆனால், அங்கே சுக்கு காபி விற்றுக் கொண்டிருந்த சிறுவன் மட்டும் எதையோ உணர்ந்தவனாக சட்டென்று தன் கையிலிருந்த காபி கேனை கரையில் வைத்துவிட்டு, சிங்கமென சீறி தண்ணீருக்குள் பாய்ந்தான், அப்போதுதான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தது கரையிலிருந்த கூட்டம். 

                

தண்ணீரில் தத்தளித்தவர்கள் மூன்று பேருமே கிட்டத்தட்ட மயக்கமாகிவிட்ட நிலையில், ஒருவரை மட்டும் போராடி கரைக்கு இழுத்து வந்தான் அந்தச் சிறுவன். மீதமிருந்தவர்களை, கரையிலிருந்த படகைத் தள்ளிக் கொண்டு போய் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர் படகோட்டிகள் சிலர்.
               
சிறுவனால் காப்பற்றவர் உடனடியாக சுயநினைவு பெற்றுவிட, மற்ற இருவரும் சுயநினைவற்ற நிலையில், மூச்சுபேச்சற்ற நிலையில் போலீஸின் துணையோடு ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவர், உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தகவல். நான்காவதாக ஒருவர் தானே தப்பி கரையேறி வேகமாக அங்கிருந்து சென்றவிட்டதாகவும் தகவல்.
                   
தன் உயிரை துச்சமென மதித்து, ஓர் உயிரைக் காப்பாற்றிய அந்த சுக்கு காபி சிறுவனின் பெயர் எஸ்.சூர்யா. லைட்ஹவுஸ் பகுதியிலிருக்கும் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இப்படி காபி விற்பது வழக்கமாம். அவனுடைய துணிச்சலான செயலைக் கண்ட பலரும் அவனைப் பாராட்டித் தள்ளினர். அவன் கொண்டு வந்திருந்த சுக்கு காபியும் மளமளவென விற்றுத் தீர்ந்தது.
            
via மண்வாசனை [முக நூல்]
                     
2) இவர்தான் நிஜ ஹீரோ...!
                                          

கையில் கோடிப் பணம் இருந்தாலும் கூட ஒரு பத்து பைசா இருந்தால் நல்லாருக்கே என்று ஏங்குகிற மனங்கள் நிறைந்த காலம் இது. ஆனால் இப்படிப்பட்டவர்கள் மத்தியில் ஒரு மகா வித்தியாசமான மனிதர் மைசூரில் வாழ்ந்து வருகிறார். அந்த மனிதர் அப்படி என்ன செய்து விட்டார்?... தொடர்ந்து படியுங்கள்.
                  
அவரது பெயர் சார்லஸ் வில்லியம்ஸ். வயது 89. இங்கிலாந்து வசம் நமது நாடு அடிமைப்பட்டிருந்தபோது ராயல் ஏர்போர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்திய விமானப்படையில் இடம் பெற்றிருந்தார். 2ம் உலகப் போரில் பங்கேற்றவர்.
                    
விமானப்படையில் சேர்ந்த சார்லஸ், லாகூருக்கு ஆறு வார பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ஆக்ராவில் பணி கிடைத்தது. அடுத்த சிலநாட்களிலேயே அவர் பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இங்கிலாந்துப் படை, ஜப்பானியப் படையுடன் 2ம் உலகப் போரில் மோதிக் கொண்டிருந்தது.
                      
''எங்களது பிரிவு நேரடியான போரில் பங்கேற்கவில்லை. இருப்பினும் தரைப் போரில் ஈடுபட்டிருந்த எங்களது வீரர்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து வந்தோம். பல வாரங்கள் நாங்கள் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிட்டது. மிகவும் மோசமான போர் அது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர். இருப்பினும் நாங்கள் தப்பினோம் என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் சார்லஸ்.
சரி, சார்லஸின் பெரும் செயலைப் பற்றி பேசுவோமா...
                       
ஓய்வுக்குப் பின்னர் தனது பென்ஷன் கணக்கைப் பார்த்தபோது அதில் ஏதோ குழப்பம் இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். அதாவது தனது பென்ஷன் தொகை குறைவாக இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். இதையடுத்து உள்ளூர் ராணுவ நல மற்றும் குறை தீர்ப்பு வாரியத்தை அணுகி முறையிட்டார். ஆனால் அங்கு அவருக்கு பலன் கிடைக்கவில்லை. யாரும் அவரது குறையைத் தீர்க்க அக்கறை காட்டவில்லை.
                      
இதையடுத்து மைசூரில் உள்ள வீகேர் முன்னாள் ராணுவத்தினர் அறக்கட்டளையின் தலைவர் சுப்ரமணியை அணுகினார் சார்லஸ். பின்னர் வீகேர் அறக்கட்டளையில் கணக்குப் போட்டு பார்த்தபோது சார்லஸுக்கு பென்ஷன் தொகை குறைத்துக் கொடுக்கப்படவில்லை, மாறாக கூடுதலாக கொடுக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.
அதாவது நிரந்தர மருத்துவப் படியாக சார்லஸுக்கு ரூ. 300 மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அந்தப் படியைப் பெறும் தகுதி அவருக்கு இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருத்துவப் படியுடன் சேர்த்து மாதம் ரூ. 15,200 பென்ஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது.
                  
தனக்கு கூடுதலாக பணம் போடப்பட்டு வருவதை அறிந்த சார்லஸ், உடனடியாக கூடுதலாக தரப்பட்ட தொகையை 15 மாதங்களுக்கு சம தொகையாக கழித்துக் கொண்டு விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுப்பிரமணி, மங்களூரில் உள்ள ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
                     
இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், தற்போது சார்லஸுக்கு மருத்துவச் செலவுகள் நிறைய உள்ளன.அவருக்கு கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அது இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது என்றார்.
                    
ஆனால் சார்லஸ் கூறுகையில், எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் உறுதியாக.
                  
சார்லஸ் நிராகரித்துள்ள தொகை சிறிதுதான், ஆனால் அவரது மனம் மிக மிகப் பெரியது... இப்போது நாட்டில் நடந்து வரும் ஊழல்களை விட! [முக நூல்]
                   
3) அலைக்கழிக்காமல் நடவடிக்கை: புகார் கொடுக்க வந்தவரிடம் பரிவு காட்டிய எஸ்ஐக்கு பாராட்டு! ! ! ! 


                                          
   
பட்டினப்பாக்கம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ ஜானகிராமன். இவரிடம் மந்தவெளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆடிட்டர் சங்கரராமன் (60) தனது தபால் நிலைய பாஸ் புத்தகம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்து அதற்கான சான்றிதழ் பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த புகார் குற்றப்பிரிவு சம்பந்தமானது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரிவை சேர்ந்த எஸ்ஐ ஜானகிராமன் அவரை அலைக்கழிக்காமல்அவரது செல்போன் நம்பரை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார். ஆடிட்டருக்கோ சந்தேகம். 

ஆனால் அடுத்த 2 நாளில் அவருக்கு போன் வந்தது. உங்களுக்கு சான்றிதழ் ரெடியாகி விட்டது, வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் எஸ் ஐ ஜானகிராமன். சங்கரராமனுக்கு ஆச்சரியம். சான்றிதழை பெற்றுக் கொண்டு எஸ் ஐ ஜானகிராமனிடம் நன்றி தெரிவித்தார்.
                   
அத்துடன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு பாராட்டு கடிதம் எழுதி இ,மெயில் அனுப்பினார். அதில், எஸ் ஐ ஜானகிராமனின் அன்பான உபசரிப்பும், துரித நடவடிக்கையும் என்னை கவர்ந்தது. அவர் வைத்திருக்கும் முறுக்கு மீசை,  பயமுறுத்துவதற்கு பதில் நம்மை பார்த்து புன்முறு வல் பூத்ததுபோல் இருந்தது. இதுபோன்ற போலீஸ்காரரை என் 40 ஆண்டு கால பணியில் நான் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
                 
இதை படித்த கமிஷனர் ஜார்ஜ் எஸ் ஐ ஜானகிராமனை அழைத்து பாராட்டினார். ஆடிட்டரின் கடிதத்தை 500 பிரதிகள் எடுத்து சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பினார். எஸ் ஐ ஜானகிராமனை முன் மாதிரியாக கொண்டு,  அனைத்து போலீஸ்காரர்களும் செயல்படுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
                  
4) இந்த உன்னத மனிதரை உலகம் அறிய பகிருங்கள், நண்பர்களே...
If u appreciate him, Share it my dear frnds..


                                   

            
உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய200க்கும் மேற்பட்ட நபர்களை காப்பற்றிய 76 வயது அப்துல் நசீர்.....

பத்ரிநாத் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட 200க்கும் மேற்பட்ட நபர்களை 76 வயதான அப்துல் நசீர் என்ற சகோதரர் காப்பற்றி உள்ளார். இவர் அந்த கடும் வெள்ளத்திலும் தன் உயிரை பற்றியும், தனது உடல்நிலை பற்றியும் கவலை கொள்ளமல் 7-8 மணிநேரம் நீந்தி அனைவரையும் காப்பாற்றி உள்ளார்.. இதற்கு இவரது குடும்பத்தாரும் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது...

                    
5) படிப்பிற்கு பணம் தடையில்லை!

                                                                                         
வீடுகளுக்கு, நியூஸ் பேப்பர் போட்ட பணத்தில் படித்தே, எம்.பி.ஏ., வரை முன்னேறிய, மாணவன் சிவகுமார் : நான், பெங்களூரில், பனாஸ்வாடி பகுதியில், ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அப்பா, டிரக் டிரைவர்; அம்மா பூ கட்டி விற்கிறார். பெற்றோர் சம்பாதிக்கும் பணம், கடனுக்கு வட்டி கட்டவே சரியாக இருந்ததால், தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலை. அதனால், 5ம் வகுப்பிலேயே வீடுகளுக்கு பேப்பர் போட்டு, அந்த பணத்தில் படிக்க ஆரம்பித்தேன்.இருந்தும், 9ம் வகுப்பிற்கான கட்டணத்தை கட்ட முடியாமல், பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். 
                  
நான் வாங்கும் சம்பளம் வீட்டு செலவுகளுக்கே பற்றாததால், பேப்பர் போடும் வாடிக்கையாளரான, கிருஷ்ண வேத வைசா என்பவரிடம், என் ஏழ்மையை விளக்கி, அந்த ஆண்டிற்கான பள்ளிக் கட்டணத்திற்கு உதவ வேண்டினேன். ஆனால், என் கடின உழைப்பு, படிப்பின் மீதான ஆர்வத்தை பார்த்து, ஐ.ஐ.டி., வரை படிக்க உதவினார். தற்போது, பெங்களூரு, ஐ.ஐ.டி.,யில் கணினி அறிவியல் இறுதியாண்டு படிக்கிறேன். இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான, "கேட்' தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று, கோல்கட்டாவில் உள்ள, ஐ.ஐ.எம். இல் நிதி தொடர்பாக, எம்.பி.ஏ., படிக்க போகிறேன். 

இதற்கு தேவையான கட்டணத்தை, வங்கி மூலம் கடன் பெற்று படிக்க விரும்புகிறேன். ஏனெனில், வீடுகளுக்கு பேப்பர் போடும் பணியை இன்றும் தொடர்கிறேன். பேப்பர் போடும் பையனாக இருந்த நான், பேப்பர் வினியோகிக்கும் நுணுக்கங்களை கற்று, தினமும், 500 பிரதிகளை விற்கும் ஏஜன்சி உரிமையாளராக வளர்ந்துள்ளேன். இதற்குக் காரணம், சோம்பேறித்தனம் இல்லாமல், காலை, 6:00 மணிக்கு முன்னரே, வாடிக்கையாளரின் வீடுகளில் பேப்பர் போட்டு விடுவேன். 

ஒருவர் என் கல்விக்கு உதவியதால் தான், இன்று என்னால் படித்து சாதிக்க முடிந்தது. அதற்கு பிரதி பலனாக, ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, அதன் மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாத குழந்தைகளுக்கு, கல்வி கற்க உதவ வேண்டும் என்பதே, என் ஆசையாக உள்ளது.

                 

6) பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம்!  

 


விதவையாக இருந்தும், ஆசிய அளவில் பிசினசில் சாதனை படைத்த, 50 பெண்களில் ஒருவரான, ரேணுகா: நான், மும்பையில் வசிக்கும், தமிழ் பெண். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். குடும்பமா, வேலையா என்ற கேள்வி, ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்களுக்கு பல சூழ்நிலைகளில் சிக்கலும், குழப்பமும் நிறைந்ததாக இருக்கும். என் வாழ்க்கையில், இரண்டையும் சரியான விதத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது. 
      
ஏனெனில், என் குழந்தைகள் பிறந்த சில காலத்திலேயே, திடீர் விபத்தில், கணவர் இறந்து விட்டார்.குடும்ப செலவிற்காக, வேலை செய்ய வேண்டும். ஒரு அம்மாவாக, பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். இவ்விரண்டையும் சரியாக சமாளிக்க, என் இளம் வயதிலேயே பல தியாகங்கள் செய்து, பல மணி நேரம் கண்விழித்து, வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
   
"அப்பா உயிரோடு இருந்திருந்தால், எல்லாம் கிடைத்திருக்குமே' என, பிள்ளைகள் ஏங்க கூடாது என்ற எண்ணத்தில், சோர்வே இல்லாமல் தொடர்ந்து உழைத்து, பிசினசில் வளர்ச்சி அடைந்தேன். இன்ஜினியரிங் படித்திருந்தாலும், தனியார் வங்கியில் வேலை செய்தேன். என் திறமை மற்றும் உழைப்புக்கு அங்கீகாரமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வெஞ்சர் என்ற, புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்து, மேலாண் இயக்குனராக்கினர்.
                
பின், "மல்டிபிள் ஆல்டர்னேட் அசட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பித்தேன். இங்கு, நிதி நிறுவனங்களில் பணத்தை வாங்கி, லாப நோக்கில் நல்ல தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து, உரிய காலத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி தரும் சவாலான வேலையில், பல கோடிகளை நிர்வகித்து, சாதித்து காட்டினேன்.இந்தியாவின், சூப்பர் மார்க்கெட் முதல், விமான நிறுவனங்கள் வரை என, பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதால், ஆசிய அளவில் சாதனை படைத்த பெண்ணாக, "போர்ப்ஸ்' பத்திரிகை பாராட்டியது. நான் பூஜ்ஜியத்தில் துவங்கினாலும், கடினமாக உழைத்து, வாழ்க்கையின் பல மேடு பள்ளங்களை தாண்டி, ராஜ்ஜியம் வரை உயர்ந்து, ஒரு பெண்ணாக சாதித்தேன்.


    
7) மல்லிகை மகள் மாத இதழில் வந்த இந்த செய்தி என்னை பிரமிக்க வைத்ததுடன் மனதையும் மிகவும் பாதித்தது.



                                                                             


 கேரளாவைச் சேர்ந்தவர் சுனிதா. 15 வயதில் குடிசைவாழ் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பதிலும் அங்குள்ள பெண்களுக்கு எழுத்தறிவு தருவதுமாக தன் இளம் பிராயத்தை மகிழ்வோடு கழித்தவர். 

அவரின் இந்த செயல் பிடிக்காமல் அந்தக் குடிசைவாழ் ஆண்கள் சிலரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியவர். அதோடு நில்லாமல் அவர்களின் கடுமையான தாக்குதலுக்கும் இரையானதால் இப்போது கூட அவருக்கு வலது காது கேட்பதில்லை. இடது கையை வளைக்க முடியாது. இப்படி பாதிப்புக்கு ஆளான பெண்கள் பொதுவாய் மனதளவில் சித்திரவதைப்பட்டு நரக வேதனையடைவார்கள். இவர் மனதிலும் கோபம் பொங்கியெழுந்தது. ஆனால் மற்றவர்களைப்போல அல்ல. ‘ நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? துனிச்சலாக வெளியே வந்தேன். தவறு செய்தவர்கள் தான் ஓடி ஒளிந்தார்கள்!’ என்கிறார் இவர். 

இந்த சம்பவத்திற்குப்பின் மேலும் இவர் சோஷியாலஜி, சைக்காலஜி படிப்புகளைத்தொடர்ந்து முடித்து டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரின் பெற்றோர்கள் ஹைதராபாத் நகரில் கால் ஊன்றியிருந்ததனால் அங்கேயிருந்து அவரின் புரட்சி ஆரம்பித்தது! ‘ அணையாத நெருப்பு’ என்ற அர்த்தம் கொண்ட ‘ பிராஜ்வாலா’ என்ற அமைப்பை பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புனர் வாழ்விற்காக நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 8000 சிறுமிகளை மீட்டிருக்கிறார். 17 பள்ளிகளை இந்தப் பெண்களுக்காக இவர் நடத்தி வருகிறார். இவரின் கணவர் இவருக்கு உதவியாக கரம் கோர்த்திருக்கிறார்.

அவர் வேதனையுடன் சொல்வது.. ..

“உலகிலேயே மிக அதிகமாகக் கடத்தப்படுவது பொன்னோ, போதைப்பொருளோ அல்ல. பெண்கள்தான் அதிகம் கடத்தப்படுகின்றார்கள். வயிற்றிலிருக்கும் பிள்ளையை ‘ பிறந்ததும் விற்று விடுகிறேன்’ என்று உத்தரவாதம் சொல்லி அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளும் அளவு வறுமையிலிருக்கும் பெண்கள் இந்த தேசத்தில் வாழ்கிறார்கள். இரண்டு மூன்று வயதிலேயே பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைகளை நானே மீட்டிருக்கிறேன். 

இந்தத் தொழில் செய்யும் உலகம் எவ்வளவு பரந்து பட்டது என்று தெரிந்தால் திகைத்துப்போவீர்கள். பெண்கள், தரகர்கள், குண்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று இந்த நெட்நொர்க் மிகவும் பெரியது!  கண்ணுக்கு முன்னே ஏதாவது அநியாயம் ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்காதீர்க்ள் . மெளனமாக இருப்பவர்கள் அதை ஆதரிப்பவர்கள் என்று தான் அர்த்தம். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஏதாவது செய்யுங்கள்!”
      
இவரைப்பற்றியும் இவரது சேவைகளைப்பற்றியும் அறிந்து கொள்ள: http://www.prajwalaindia.com/founders.html
                    
மனோ சாமிநாதன் அவர்களின் முத்துச்சிதறல் தளத்தில் ப(பி)டித்தது.
               
8) ஏர்போர்ட்டில் கடந்த 18 வருடமாக வாகன ஓட்டியாக இருப்பவர் ஏர்போர்ட் பாலு.. தனது ஏழ்மையிலும், நேர்மையின் மூலமாக ஏர்போர்ட்டில் பிரபலமானவர்.   

இதற்கு முத்தாய்ப்பாக நேற்று விமானநிலையத்தில் தவறவிட்ட பாஸ்போர்ட், விசா மற்றும் Rs.20000 மதிப்பிலான மொபைல் ஆகியவற்றை காவல் துறையில் பொறுப்புடன் ஒப்படைத்த நேர்மையின் சிகரம் இவர்.
                                             

           
ஏர்போர்ட் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் பணி மிகவும் பாராட்டதக்கது...

                  
ஏர்போர்ட் பாலுவும், அவரது நண்பர் சகாதேவனும் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய நல்ல மனிதர்களாக உள்ளார்கள்.   

                      

வெள்ளி, 19 ஜூலை, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ :: 130719 :: கவிஞர் வாலி.

    
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே 
வையகம் ஒரு மேடையே
வேஷமே 
அங்கெல்லாம் வெறும் வேஷமே! 
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் 
நாம் கூத்தாடும் கூட்டமே
  



நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
  


கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் 
நாம் கூத்தாடும் கூட்டமே     
(எல்லோரும்)

::கவிஞர் வாலி:: (29 - 10 - 1931 ~ 18 - 07 - 2013)  


                                

                     

வியாழன், 18 ஜூலை, 2013

நான்மாடக் கூடல் வீதிகளில்!

            
மதுரை சென்று, இரயிலை விட்டு  இறங்கியதும், கூகிள் மாப் பார்த்த (கொடுத்த) தைரியத்தில், இருபது கிலோ எடை பைகளுடன், விடு விடுவென்று வீரமாக நடை போட்டேன். வழக்கம் போல திருமதி, பின் தொடர்ந்து வந்துகொண்டே 'நீங்க தப்பான பாதையில போய்கிட்டு இருக்கீங்க' என்று சொல்லியவாறு வந்துகொண்டிருந்தார். 
              

     
நான், கூகிளாண்டவரை மனதில் நிறுத்தி, ஸ்டேஷனை விட்டு வெளியே இரயில் வந்த திசைக்கு வலது பக்கம் செல்ல வேண்டும், பிறகு இரயில் வந்த திசையிலேயே செல்ல வேண்டும். அப்போ கட்டபொம்மன் சிலை கண்ணில் தெரியும். அதற்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் ரூம் புக் செய்த ஹோட்டல் என்று நெட்டுருப் போட்டு வைத்திருந்த கைடு மனதில் ஓட்டியவண்ணம் சென்று கொண்டிருந்தேன். 
              
எல்லாம் சரி. முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பார்கள். அவசரத்தில், இரயில் வந்து நின்ற திசையை தவறாக கணித்துவிட்டேன் போலிருக்கு  .... மதுரை சந்திப்பின் மறுபுறம் இறங்கி, இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து, சந்தி (சிரி)ப்பாகி, ஓரிருவரை பஸ் ஸ்டாண்ட் எந்தப் பக்கம் என்று விசாரித்து, அவர்கள் எந்த பஸ் ஸ்டாண்ட் என்று கேட்டு, கட்டபொம்மன் சிலையருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் என்று விளக்கி ......... அவர்கள் எங்களை, வந்த வழியே திருப்பியனுப்பினார்கள். 
              
அப்புறம் மதுரை சந்திப்புக்கு மீண்டும் வந்து, ஓவர் பிரிட்ஜ் ஏறி, முன்பக்கம் வந்து இறங்கி, கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தவருக்கு நன்றி கூறி, ஹோட்டல் ரூமையடைந்தோம். 
                 
பல் தேய்த்து, ஸ்நான பானாதிகள் முடித்து, கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமா என்று நான் யோசிக்கும்பொழுது, திருமதிக்கு, 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..... நண்பியே, நண்பியே, நண்பியே ஏ ஏ !!!!' என்று நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அந்த மதுரை மண்ணிலே தான் நடந்து வந்த பாதைகளைப் பார்க்கவேண்டும், அதையும் நடந்தே பார்க்கவேண்டும், தன்னுடைய பாட்டி வீட்டைக் காணவேண்டும் என்று அடங்காத ஆர்வம் ஏற்பட்டது.  
                  
"கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, அப்புறம் போகக்கூடாதா?"
               
"அதெல்லாம் முடியாது. வெயிலுக்கு முன்பாகக் கிளம்பிடலாம். அப்புறம் வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்."
               
"லாம்." 
              
கிளம்பிவிட்டோம். 
            
"இரயில்வே ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் வரை நீங்க வழி சொல்லுங்க. அப்புறம் பாட்டி வீடு வரை நான் கண்ணை மூடிக் கொண்டு நடப்பேன், நீங்க என் பின்னாடியே நடந்து வந்தா போதும்!"  
              
மதுரை இரயில் நிலைய வாசல் வரை, காலையில் வந்த வழியை நினைவில் வைத்திருந்து நான் லீட் செய்தேன். 
               
"அம்மா தாயே - இதோ இருக்கு இரயில் நிலைய வாசல். இனிமே நீ கண்ணை (முடிந்தால் வாயையும்) மூடிக் கொண்டு நட" என்றேன். 
               
கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டுதான் நடந்தார். கொஞ்ச தூரம் வேகமாக, பிறகு கொஞ்சம் மெதுவாக அதற்குப் பிறகு சுற்று முற்றும் எச்சரிக்கையாகப் பார்த்தவாறு நடந்தார். 
    
"நீங்க நன்றாகப் பார்த்தீர்களோ? நம்ம நடக்க ஆரம்பித்தது மதுரை இரயில்வே ஸ்டேஷன் முகப்பிலிருந்துதானே? அங்கே மங்கம்மா சத்திரம் இருந்ததோ?"
     
"மங்கம்மா சத்திரமா? அது சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும் பேசின் பாலம் ஸ்டேஷனுக்கும் நடுவுல இல்ல வரும்?"
  

    
"உங்களை நம்பி வந்தா இப்படித்தான். தெரிஞ்ச ஊரிலேயே என்னால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்க நண்பர் ரங்கராஜு சொன்னதைக் கேட்டு நம்ம பத்ரிநாத் கேதார்நாத் என்றெல்லாம் கிளம்பியிருந்தால் - இப்படித்தான் நட்டாற்றில் நிற்கணும்."
   
நான் ஒன்றும் சொல்லவில்லை. (சொல்வதற்கு ஏதேனும் இருக்கா?) 
    
"சரி வாங்க இன்னும் கொஞ்சம் நடந்து பார்ப்போம். ஸ்டேஷனை ஒட்டியே இடது பக்கமாகவே போனால் ஒரு இடதுபக்கம் திருப்பம் - அங்கே ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கும். இதோ ஒரு இடது பக்கத் திருப்பம். ... போஸ்ட் ஆபீஸ் எங்கே காணோம்?"  
    
"தந்தி சேவை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். அதனால போஸ்ட் ஆபீசை விற்றிருப்பார்கள்!"
      
"ஆ அதோ இருக்கு பாருங்க போஸ்ட் ஆபீஸ்! முன்பு இந்த ஏரியா முழுவதும் போஸ்ட் ஆபீஸ்தான் இருக்கும். இப்போ இவ்வளவு சின்ன அலுவலகம் ஆகிவிட்டதே!"
       
"நாந்தான் சொன்னேனே - தபால் - தந்தி அலுவலகத்தில், தபாலை மட்டும் வைத்துக் கொண்டு, தந்தி பகுதியை விற்றுவிட்டார்கள்!"
         
"சோத்துப் பட்டி ஸ்கூல் எங்கே இருக்குன்னு கடையில விசாரியுங்க...." 
     
"இதோ பாரு - எனக்கு இடது காது சரியா கேக்காது. நீ அந்தப் பக்கத்திலிருந்து என்ன பேசினாலும் எனக்கு சரியா காதுல விழாது...  ... "
               
எதிரே வந்தவரிடம், "ஐயா சோத்துப்பட்டி ஸ்கூலு எங்கே இருக்கு?" என்று ஆர்வமாகக் கேட்டேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தபடி கடந்து சென்றார். 
               
"கண்ட்ராவி ... சோத்துப் பட்டியும் இல்ல, சொக்கப்பானையும் இல்ல. சேதுபதி ஹைஸ்கூல். -- இதோ இருக்குப் பாருங்க! வேகமா வாங்க." 
       
இதோ இன்னும் கொஞ்ச தூரத்தில் பாட்டி வீடு இருக்கின்ற தெரு வந்து விடும். 
              
இரண்டு மூன்று தெருக்களை சந்தேகமாக நோட்டமிட்டபடி நடந்தோம். 
                  
மனைவி கேட்கச் சொன்னதால், மீண்டும் எதிரே வந்த ஒருவரிடம், "சார் - கிருஷ்ணதேவராயர் தொப்பை குளம் எங்கே இருக்கு?" என்று கேட்டேன். 
          
"ஐயோ - இனிமே நீங்க வாயைத் திறக்காதீங்க. நான் பார்த்துக்கறேன். கிருஷ்ணராயர் தெப்பக் குளத் தெரு எங்கே இருக்கு?" என்று அவரிடம் கேட்க, அவர் தெருவைக் கைகாட்டி விட்டு சென்றார். 
              
"இதுதாங்க அந்தத் தெரு. இந்தத் தெருக்கோடியில் இதோ ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கு பார்த்தீர்களா! நாலு மாமாங்கம் முன்னாடி நான் இங்கே வராத நாட்களே கிடையாது. அப்புறம் கோயம்புத்தூரில் இருந்த நாட்களில், இந்த ஆஞ்சநேயரை ரொம்ப மிஸ் பண்ணினேன். "
     
"அதற்கப்புறம்?"
                       
"கல்யாணம் ஆன நாளிலிருந்து, உங்க மூஞ்சியைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொண்டிருக்கின்றேன். பாட்டி வீட்டிலிருந்து திரும்பி வரும்பொழுது இங்கே வந்து ஆஞ்சநேயரை தரிசிப்போம்."  
                 
"போம்."
           
"ஆஞ்சநேயர் கோவில் தாண்டி, அதே சாரியில் நாலைந்து வீடுகள் தள்ளி இருப்பதுதான் பாட்டி வீடு. வீட்டு வாசலிலே ஒரு பைப்பு இருக்கும். தெருவுல பாத்துகிட்டே வாங்க."
            
"சார் இந்தத் தெருவுல பைப்பு எங்கே இருக்கு?" 
               
ஒரு ஆட்டோக் காரர், "இந்தத் தெருவுல பைப்பு எதுவும் கிடையாது. அது இன்னும் ரெண்டு மூணு கிலோ மீட்டர் போவனும். ஆட்டோவுல ஏறிக்குங்க, நான் கொண்டு போய் விட்டுடறேன்" என்றார். 
             
ஒரு வீட்டு வாசலில் புதிய நம்பர் / அதற்குக் கீழே பழைய நம்பர் கேட்டில் எழுதியிருந்தது. அந்தப் பழைய நம்பரை வைத்து, வீட்டை சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் திருமதி. 
         
(அந்த பைப்பை மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அகற்றிவிட்டார்களாம், மதுரை கார்ப்பரேஷன் மக்கள்ஸ். எவ்வளவு பேரீச்சம் பழங்களோ? யார் தின்றார்களோ!)