புதன், 29 அக்டோபர், 2014

ரெஹானா ஜப்பாரி



தன்னைக் கற்பழிக்க வந்தவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அந்தக் கயவன் மரணமடைந்து விட,  அதனால் இந்த இளம் பெண்ணுக்கு பாதாளத்தில் தனிமைச்சிறை, மரண தண்டனை. அந்தக் கயவன்  ஒரு  ய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி என்பதும் ஒரு காரணம்.  நம் நாட்டில் அல்ல, ஈரானில்.
வினோத சட்டங்கள்.

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)

'தி இந்து' வில் அந்த ஒலி வடிவின் தமிழ் வடிவை திரு சாரி என்பவர் தந்திருக்கிறார். மனதை உருக்கும் அந்தப் பதிவை இந்துவுக்கு நன்றி சொல்லி இங்கு அப்படியே தருகிறேன்.

                                                            

 
மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.
 
 
  அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்?  இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. 

இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? 


இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். 

என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும். 

                                                     

சாவும் கடைசி அல்ல
 
ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய். 

நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன். 

பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரை யெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. 

                                              

நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர்விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக் கையில் நான் அழவேயில்லை அம்மா. 

வசை கிடைத்தது
 
கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. 

                                                  

பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. 

ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள். 

போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக் கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். 

தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை. 

இறுதி விருப்பம்
 
உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.


இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. 

எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை. 

அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். 

அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது. 

கடவுளிடம் பதில்
 
இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – 

உன் பிரிய ரெஹானா. 

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)
 
- தமிழில்: சாரி

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 09 மோகனா!

   
முந்தைய பகுதி சுட்டி : இங்கே! 
                  
சனிக்கிழமை அந்த மொபைல் கடைக்குள் நுழைந்த கல்யாணியும் அப்புவும்சுற்றுமுற்றும் பார்த்தனர். ஊஹூம்! அந்தப் பெண்ணை எங்கும் காணோம்!
   
           
"டேய் அப்பு - சரியா பார்த்தியா? இந்தக் கடைதானா? அந்தப் பெண் இங்கு

வேலை பார்ப்பவள் என்று எதை வைத்துச் சொல்கிறாய்?"
               
"அம்மா! அன்றைக்கு நானும் என் பிரெண்ட்ஸ் நாலு பேரும், கடைத்தெரு முனையிலிருந்து, அவளைப் பின்தொடர்ந்து வந்தோம். ஒரு மொபைலை எடுத்துஅதில் எஸ் எம் எஸ் அல்லது ஏதோ வந்த கால் யாருடையது என்பது போலப்பார்த்தாள். பிறகு தன்னுடைய வாட்சில் மணி பார்த்தாள். அப்புறம் ஒரு தடவைஎங்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்து, ஸ்மைல் செய்தாள்! பிறகு நடந்துவந்து, இந்தக் கடைக்குள் சென்றாள்."
              
"மொபைல் வாங்க வந்தவள் கூட இந்தக் கடைக்கு வந்திருக்கலாமே!"
            
"நானும் ஆரம்பத்தில் அவள் இந்தக் கடையில் மொபைல் வாங்க வந்தவள்என்றுதான் நினைத்தேன். நானும் நண்பர்களும் கடைக்கு வெளியே, எதிர்க்கடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெயிட் செய்தோம். அந்தப் பெண் வெளியே வரவில்லை.அதனால்தான் அவள் இங்கு வேலை பார்க்கிறாள் என்ற முடிவுக்கு வந்தோம்...."
               
இந்த நேரத்தில் ஒரு கவுண்டரில் இருந்த ஒரு சேல்ஸ் மேன், "உங்களுக்கு என்னவேண்டும்?" என்று கேட்டார்.
            
அப்பு, " லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் என்னவெல்லாம் இருக்கு?" என்றுகேட்டான்.
    
     

" எங்கள் கடையில் லேட்டஸ்ட் ஆக வருகின்ற எல்லா மாடல்களும் கடை ஓனர்அறையில் இருக்கும். ஓனர் ஒவ்வொரு மாடலையும் ஓரிரண்டு நாட்கள்வைத்திருந்து, அந்த மொபைலின் பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை அறிந்துவைத்துக்கொண்டு, அப்புறம் எங்களிடம் சொல்லி, அவற்றை விற்பனைக்கு வைப்பார்."
            
"புதுமையான ஓனரா இருக்காரே !" என்று வியந்தான் அப்பு.
             
"நாங்க அவரைப் பார்க்கலாமா?" என்று வினவினாள் கல்யாணி.
               
"ஓ! தாராளமா" என்று கூறி கடையின் ஈசான்ய மூலையில் இருந்த அறையைக்காட்டினார், அந்த சேல்ஸ்மேன்.
             
==================
                 
உள்ளே நுழைந்த அப்புவையும், கல்யாணியையும் வரவேற்றது, ஓர் இனிமையான குரல்.
                 
"வாங்கம்மா! வாங்க மிஸ்டர் அப்பு! என் பெயர் மோகனா "
            
வரவேற்றது, அப்பு தேடி வந்த அதே பெண்!
             
"அட! என் பெயர் எப்படித்  தெரியும்?" என்று கேட்டான் அப்பு. 
             
"உங்க பெயர் மட்டும் இல்லை, ஊரு, அம்மா யாரு, அவங்க உங்க கல்யாணத்துக்குப்போட்ட கண்டிஷன், எல்லாமே தெரியும்."
            
"எப்படி?"
              
"சென்ற வாரம் இந்தக் கடை வீதியில், நான் கடைக்கு வந்திருந்த லேட்டஸ்ட்மொபைலை செக் செய்ய, வெளியில் எடுத்து, selfie எடுக்க முயற்சி செய்தேன்.அப்போ என் முகத்துக்குப் பின்னாடி, நீங்களும் உங்கள் நண்பர்களும் நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது. அந்த நேரத்தில் உங்க மொபைலுக்கு ஒருகால் வந்தது. ஞாபகம் இருக்கா?"
              
அப்பு யோசித்துப் பார்த்து, "ஆமாம்! அம்மாதான் அப்போ கால் பண்ணினா! அது ஏன் அவ்வளவு ஞாபகம் இருக்கு?" என்று கேட்டான்.
         
"அதுவா! என்னுடைய நம்பர், 9**** **230, உங்க மொபைலிலிருந்து இந்த நம்பருக்குக் கால் கொடுங்க பார்க்கலாம்!"
               
உடனே கால் செய்தான் அப்பு.

மோகனாவின் மொபைலில் இருந்து, இந்த டியூன் இசைத்தது! 



திடுக்கிட்டு, தன மொபைலை ஒரு கணம் நோக்கினான். 
  
  

"அட! என்னுடைய மொபைலில் இருக்கின்ற அதே ஹலோ டியூன்! உங்களுக்கும் இந்த பாட்டுப் பிடிக்குமா?" 
     
"ஆமாம்! இந்த டியூன் அன்று உங்க மொபைலில் வந்ததுமே உங்களைப் பற்றிய முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என் கடை சேல்ஸ் மேன் ஒருவரை, உங்கள் கோஷ்டி எதிர்க் கடையில் இருக்கும் பொழுதும், பிறகு அங்கிருந்து கிளம்பும்பொழுதும், உங்கள் எல்லோரையும் பின் தொடர, விவரங்கள் சேமிக்க அனுப்பி வைத்தேன். நீங்களும் உங்க நண்பர்களும் எதிர்க்கடையில் இருந்தபொழுதும், தஞ்சை பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும்பொழுதும்  பேசியவைகளை அவர் தன்னுடைய மொபைல் போன் வாய்ஸ் ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டு வந்தார். அப்போதான் உங்க பெயர் அப்பு என்பதும் அம்மா பெயர் கல்யாணி என்பதும், நீங்க எல்லோரும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்துகொண்டேன். 'எங்க அம்மா ஒரு ஏழைப் பெண்ணைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்னு சொல்றா, இந்தப் பெண்ணைப் பார்த்தால், அவ்வளவா வசதி இல்லாத குடும்பம் போலத்தான் தோன்றுகிறது. எனக்கு இவளைப் பிடித்திருக்கின்றது. அடுத்த வாரம் ஒருநாள் அம்மாவை அழைத்து வந்து அன் அபிசியலா பெண் பார்க்கப் போகின்றேன்' என்று நீங்கள் சொன்னதையும்,  கேட்டேன். அம்மா - நான் ஏழைப்பெண் இல்லை. ஆனால் எனக்கு அப்புவைப் பிடித்திருக்கின்றது. எங்க கல்யாணத்திற்கு உங்க சம்மதம் கிடைக்குமா?" 
                
இவ்வளவு நேரம் நடப்பவை எல்லாவற்றையும் திகைப்போடு பார்த்துக்கொண்டு இருந்த கல்யாணி, "அப்புவுக்குப் பிடிச்சிருந்தா அது போதும்; ஆமாம் - நீ மட்டும் சொன்னால் போதுமா? உன் அப்பா அம்மா என்ன சொல்வார்கள்? " 
             
"அது நல்ல கேள்வி. உண்மைதான். என் அப்பா அம்மா இருவருமே நான் ஒரு ஏழைப்பையனைத்தான் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அம்மா அப்பா இல்லாத அனாதைப் பையனாக இருக்க வேண்டுமாம்! கும்பகோணத்துல நீங்க இருக்கின்ற விலாசம் கொடுங்க. அடுத்த வாரம் அப்பா அம்மா இருவரும் உங்க வீட்டுக்கு வந்து, உங்களைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நீங்க அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரியும், உங்க அம்மா உங்க வீட்டு சமையல்காரி போலவும் சும்மா ஆக்ட் கொடுங்க. அப்பாவுக்கு நிச்சயம் உங்களைப் பிடிக்கும். அவர் சம்மதம் கிடைத்த பின்பு, எல்லா உண்மைகளையும் சொல்லிவிடலாம்!" 
           
'ஆக்ட் கொடுப்பதா! அதுதானே உண்மை!' என்று நினைத்துக் கொண்டார்கள், அப்புவும், கல்யாணியும். 
     
(தொடரும்) 
         

திங்கள், 27 அக்டோபர், 2014

'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்



                                          

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நடைப் பயிற்சியில் அதிகாலை வீட்டுக்கு வரும் மாமாவை ஒரு வாரமாய் ஆளையே காணோம்.

மழை மட்டும் காரணமல்ல என்று பின்னர் தெரிந்தது. "வந்தா தீபாவளி பட்சணம் கொடுத்துடுவியே"

விடுவோமா என்ன?  எவ்வளவு நாள் கழித்து வந்தாலும் அவருக்காக எடுத்து வைத்திருந்த மாலாடு, ரவா லாடு, மற்றும் பாதாம் - முந்திரி கேக் அவரிடம் வழங்கப்பட்டது. 


  

நாடா (ரிப்பன்), தேன்குழல் போன்றவை தீர்ந்து விட்டதால் தரவில்லை! ("நல்லவேளை" என்றார்)

தெரியாமல் ஒன்றிரண்டு பேர்கள் இந்த ஸ்வீட் பெயர் என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று (ஏதாவது பேச வேண்டுமே) கேட்கப் போக, என் பாஸ் சொன்ன குறிப்பு கீழே தந்துள்ளேன்.


பாதாம் இறுக்கமாக ( ! ) ஒரு பெரிய கைப்பிடி எடுத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து இறக்கிய தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரி ஒரு தளர்வான ( ! ) கைப்பிடி எடுத்து அரைலிட்டர் பச்சைப்பாலில் (கலரைச் சொல்லவில்லை. காய்ச்சாத பால் என்று அர்த்தம்) ஊற வைக்கவும்.  இரண்டும் இரண்டு மணிநேரம் ஊறியதும் முதலில் பாதாமை எடுத்து அதன் சிவப்புத் தோலை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.  தண்ணீரைக் கொட்டி விடவும். முந்திரியையும் பாலைவிட்டுத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பாலைக் கொட்ட வேண்டாம்!
                                                     

தனித்தனியாக இரண்டையும் மிக்ஸியிலிட்டு இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி கலக்குமுன் இரண்டையும் ஒன்று சேர்த்து அளவு பார்த்துக் கொள்ளவும்.

ஏனென்றால் அந்த அளவை வைத்துத்தான், அதற்கு இரண்டேகால் பங்கு சர்க்கரையும், முக்கால் பங்கு நெய்யும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

            


எல்லாவற்றையும் (அரைத்த விழுது, பால், சர்க்கரை, நெய்) ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி, சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

                                              


வாணலியை அடுப்பில் வைத்து (அடுப்பைப் பற்ற வைக்கவும் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?) ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்தக் கலவையை அதிலிட்டுப் புரட்டவும்.

கையில் ஒட்டாத பதம் வந்ததும் (ஒரு சிறு உருண்டை எடுத்து சிறிய தட்டில் 'சொத்' தென்று எறிந்தால் அது அப்படியே ஒட்டாமல், பரவாமல்  நிற்க வேண்டுமாம்) தாம்பாளத்தில் இட்டு வில்லைகள் போட்டு விடவும்.



                                               

அவ்வளவுதாங்க... முடிஞ்சுது சமாச்சாரம்.

                                       


வீட்டுக்கு யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு முதலில் கொடுத்துப் பார்த்து அவர்கள் முக பாவங்களைப் பார்த்து நீங்களும் சாப்பிடலாமா, அல்லது விருந்தினர்களுக்கு மட்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!