செவ்வாய், 31 மார்ச், 2015

நினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி


நாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்.  90 வயது.  பருத்த உடம்பு.  ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும்.  கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.





அப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை.  பொழுது போக வேண்டுமே...  மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.  




என் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார்.  " வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா? சரசரன்னு புடைவைச் சத்தம்.  கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...!"



அதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம்.  திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும்.  பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவதில்லை.


பாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. "கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ?"


'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற...  அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்..  இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு'  என்று நினைத்துக் கொண்டே,  "ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே.."


"நேத்து கூட நான் பாத்தேன்.  கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது..  வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.  யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்"


பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.


"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா..  ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன்.  பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு...  நெருப்பா கொட்டுது, அணையுது...  கொட்டுது, அணையுது...   குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்...  ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்."


நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.


"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...?"





"பின்ன...? ஒனக்கும் பாக்கணுமா?"


அம்மா பேச்சை மாற்றினார்.  இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர்.  பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார்.  எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.


இப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும்.  இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர!






பாஹே  -





படங்கள்  :  இணையம்! 

திங்கள், 30 மார்ச், 2015

'திங்க'க்கிழமை : தொஸ்ஸு



சுடச்சுட விருந்து சாப்பிடப்போகும் அனுபவமே தனிதான்.  குழம்பு என்ன, கூட்டு என்ன, பொரியல் என்ன...  புதிதாய்ச் சமைத்து உடனுக்குடன் சாப்பிடுவது... ஆஹா...

சில சமயங்களில் வீடுகளில் நேற்றைய குழம்பு மிஞ்சி விடும்.  அவற்றை என்ன செய்வது?
தஞ்சையில் நான் படித்த பள்ளியில் ஆறுமுகம் என்று ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார்.  டிராயிங் வகுப்பில் வந்து போர்டில் ஏதாவது ஒரு படத்தை வரைந்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து நிறைய கதை சொல்வார், கதை அடிப்பார்.  சில சமயங்களில் வேறு ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் லீவென்றால் இவரை அனுப்புவார்கள்.  இவர் வந்து கதை சொல்வார்.
இவர் சொன்ன ஒரு சமையல் குறிப்புதான் 'தொஸ்ஸு'.  இது அவரே வைத்த பெயர் என்று நினைக்கிறேன்.
முதல்நாள் செய்து மீந்து போகும் குழம்பு, ரசம், பொரியலை எல்லாம் ஒன்றாகப் போட்டு (பொரியலை எப்போதும் சேர்க்க மாட்டார்கள் - சில சமயங்களில் சேர்ப்பார்கள்) புதிதாகக் கொதிக்க வைப்பதுதான் தொஸ்ஸு!

எங்கள் வீட்டில் அதுபோல ஆனால் வேறு மாதிரிச் செய்வது இந்த தொஸ்ஸு எனும்  பழங்குழம்பு! கார அல்வா!

முதல்நாள் மீந்துபோகும் சாம்பாரை,  - கவனிக்கவும் சாம்பாரைத்தான் - அதுவும் குறிப்பாக முருங்கைக்காய், அல்லது கத்தரிக்காய்ச் சாம்பாராக இருந்தால் இன்னும் சுவை.
 

                                                       Image result for sambar images
 
ஆனால் நாங்கள் சாம்பாரையும் ரசத்தையும் ஒன்றாக்குவதில்லை. சாம்பார் மட்டும்தான் எடுத்துக் கொள்வோம்.  காரக்குழம்பு எனும் வெந்தயக் குழம்பாயின் அதற்கு இந்த ட்ரீட்மெண்ட்டே தேவையில்லை. கொஞ்சம் சூடு பண்ணி அப்படியே சாப்பிடலாம்!  பருப்புக்குழம்புக்குத்தான் இது ஒத்து வரும்!
 
                                                                Image result for brinjal sambar 

ஏழெட்டு சின்ன வெங்காயங்களை நறுக்கிக் கொண்டு, அந்தப் பழங்குழம்பில் போட்டுக் கொள்வோம்.  (நாங்கள் முருங்கை, அல்லது கத்தரிக்காய் அல்லது முருங்கை, கத்தரிச் சாம்பார் என்றால் அந்தக் காய்கள் மட்டும்தான் போடுவோம். நோ வெங்காயம், நோ தக்காளி!) அந்தப் பழங்குழம்பைக் கொதிக்க வைப்போம்.  அடுப்பை ' சிம்'மில் வைத்து கிண்டிக் கொண்டே இருப்போம்.  அவ்வப்போது கொஞ்சமாய் நல்லெண்ணெய் ஊற்றிக் கொதிக்க வைப்போம்.  குழம்பிலிருக்கும் நீர்ச் சத்தெல்லாம் சுண்டி அல்வா பதத்துக்கு வரும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சுற்றி ஊற்றி இறக்கி வைத்து விடுவோம். 
 

                                                                              Image result for பழங் குழம்பு
 
எங்கள் டிராயிங் மாஸ்டர் சொன்ன தொஸ்ஸுவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.  தலைப்பு வைக்க ஒரு பெயர்க் கவர்ச்சிக்காக அதை உபயோகித்துக் கொண்டேன்.  அவ்வளவுதான்!

வீட்டில் இந்தக் குழம்புக்கு இருக்கும் வரவேற்பு இருக்கிறதே... அடடா....  அது தனிச் சுவை போங்க!  சில சமயங்களில் "அம்மா...  இன்னிக்கி பழங்குழம்பு வையேன்" என்றே கேட்குமளவு பிரசித்தம்.  எங்கள் வீட்டில் இந்தக் கார அல்வாவுக்கு வைத்திருக்கும் பெயர் சக்தி மசாலாக் குழம்பு!


படங்கள் :   "இணையம்தாங்க!"

சனி, 28 மார்ச், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) பத்து நேர்மையான, துணிச்சலான அதிகாரிகள் பற்றி இங்கே.
 


 
2) காயமுற்ற நிலையிலும் வழி நடத்தும் ஒரு கடமை வீரனின் வீடியோ.
 


 
3) இளம் வயதிலேயே கணவரை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தவித்த இவருக்குக் கைகொடுத்தது தமிழக அரசின் மகளிர் திட்டம். அதிகம் படிக்கவில்லை, குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மூலையில் உட்கார்ந்து அழவில்லை. வாழ்ந்து காட்டுவேன் என்று தன்னம்பிக்கையோடு துணிச்சலுடன் போராடினார். பொருட்களை உற்பத்தி செய்வதைவிட அவற்றை விற்பனை செய்வதுதான் சவால் நிறைந்தது. தேவகி அந்தச் சவாலைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார். பட்டம் படிக்காமல், பயிற்சி பெறாமல் சந்தைப்படுத்தும் உத்தியில் கலக்குகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தேவகி.
 


 
4) பெண்கள் நடத்தும் தொழில் என்றால் அப்பளம், வடகம், ஊறுகாய் என்று உணவுப் பொருள் தயாரிப்புத் தொழிலாகத்தான் இருக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் திருச்சியைச் சேர்ந்த ராஜமகேஸ்வரி, ராஜேஸ்வரி, சாந்தி, வாசுகி, ஜீசஸ்மேரி உள்ளிட்ட 25 பெண்கள் அந்த நினைப்பைப் பொய்யாக்குகிறார்கள்.
 


 
5) சந்தோஷின் சந்தோஷம் எதனால் தெரியுமா?
 


6) காரிருள் போல இருந்த ஆஸ்பத்திரியை மாற்றிய காந்திமதிநாதனைப் பார் அதி பெரிய மனிதர்.


புதன், 25 மார்ச், 2015

நிலவில் கடல், பெரிய மீன், ரத்த அருவி, டிட் பிட்ஸ் - படித்ததில் ரசித்தது



தினசரி செய்திகள் படிக்கும்போது அன்றைய முக்கிய நிகழ்வுகளின் மீது நம் கவனம் இருக்குமே தவிர, சில சுவாரஸ்ய செய்திகளை சிலபேர் கவனிக்காமல் விட்டு விடுவோம்.  அந்தச் சில பேருக்காக இந்தப் பகிர்வு.
 
ஏற்கெனவே படித்திருந்தால் விட்டு விடுங்கள்.  லிங்க் தந்திருப்பது ஆதாரத்துக்குத்தான்.  அங்கும் அதே வரிகள்தான் இருக்கும்!
 

1) செவ்வாயிலும் நிலாவிலும் நீரைத் தேடிக் கொண்டிருந்தோம்.  இப்போது இப்படி ஒரு கண்டுபிடிப்பு. 




சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கோளாக விளங்குவது வியாழன் கிரகம் ஆகும். இந்த வியாழன் கிரகத்திற்கு மொத்தம் 67 நிலாக்கள் உள்ளன. இதில் மிக பெரிய நிலாவாக கருதப்படுவது கேனிமேட் நிலா ஆகும். நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, வியாழன் கிரகத்தை சுற்றும் கேனிமேட் நிலவில் பெருங்கடல் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளது. இந்த பெருங்கடல் பனிக்கட்டி மேற்பரப்பிற்கு அடியில் உள்ளதாகவும், இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4850#sthash.9y0hsNXs.dpuf
 
 
2) சின்ன மீனைப் பிடிக்காமலேயே பெரிய மீன்!



தாய்லாந்தில் உள்ள மே கிளாங் ஆற்றில் ஸ்டிங்ரே என்ற வினோத மீன் ஒன்று பிடிப்பட்டது. இந்த மீன் சுமார் 14 அடி நீளமும், 363 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இந்த மீனை மீனவர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி பிடித்துள்ளனர். இந்த மீன் உலகின் மிகப் பெரிய மீனாக கருதப்படுகிறது. இந்நாள் வரை 300 கிலோ எடையுள்ள இராட்சத கெளுத்தி மீன் ஒன்றே உலகின் மிக பெரிய மீன் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4849#sthash.QMTJ2rGA.dpuf

 
 
3)  ரத்த அருவி!



பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாக விளங்குவது அன்டார்க்டிக்கா . இங்கு எண்ணற்ற பனி பாறைகள் உள்ளன . இவைகளில் ஒன்றான டெயிலர் பனி பாறையில் ஓர் அதிசயம் நிறைந்துள்ளது. இந்த டெயிலர் பனி பாறையில் உள்ள ஓர் நீர் விழ்ச்சியில் ரத்த நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது . இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் சிலர் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் முடிவில் தற்போது அந்த ரத்த நீர் விழ்ச்சியின் மர்மம் அம்பலமாயிற்று. சுமார் 2 மில்லியன் காலமாக பனிகட்டிக்குள் அகப்பட்டு கொண்டிருந்த இரும்பு சத்து மிகுத்திருந்த கடல் நீரே இவ்வாறு சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டுவதற்கு காரணம். - See more at: http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=4851&page=1#DKN
 
 
4) வேலையைச் செய்ததற்கு அபராதம்! இங்கு உள்ளூரில் இப்படி சாத்தியமாகுமா?!!!



வாஷிங்டன்: அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக துப்புரவு தொழிலாளர் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வினோத சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நடந்துள்ளது. கெவின் மெக்கில் என்பவர் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இங்கு காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரைதான் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கெவின் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே சென்று குப்பைகளை அகற்றியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை கெடுப்பதாக அவர் மீது புகார் செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதுபற்றி நீதிபதி கூறும்போது ‘‘பலமுறை அபதாரம் விதித்தும் இந்த செயல்கள் குறையவில்லை. எனவேதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இந்த சிறை தண்டனையை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனுபவிக்க கெவின் மெக்கிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார நாட்களில் வேலை செய்து மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 24 மார்ச், 2015

அலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.




சாதாரணமாக ஆடிட் அனுபவங்களே ஆயாசத்தையும் வெறுப்பையும் தரும்!  ஆனால் இந்தச் சம்பவம் நடந்த வருடம் ஆடிட் கஷ்டமில்லாமல் முடிந்தது மட்டுமில்லாமல்,  நானும் என் நண்பர் தனாவும் என்ன சொன்னாலும் அதை அவர்கள் கேட்டது கண்டு மற்றவர்களுக்கு ஆச்சர்யம். ஏன், எங்களுக்கே நம்ப முடியவில்லை.
 
என்ன நடந்தது என்றால்...

ஆடிட் வரப்போகிறார்கள் என்னும்போது  ஆடிட் குழுவின் தலைமை அதிகாரி அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு தொலைபேசினார்.  மலை வாசஸ்தலம் என்பதால் இங்கு வருவதற்கு எப்பொழுதுமே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.  

"அஃபீஷியலா வந்தாலும் இந்த இடத்தைப் பார்க்கணும்னு வீட்டுல பிரியப்படறாங்க.  அதனால் அவங்களையும் அழைச்சிக்கிட்டு வர்றேன்.  எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தனியா எங்காவது ஒரு ரூம் புக் பண்ணிடுங்க.  மிச்ச பேரு அஸ் யூஷுவல் ஆபீசிலேயே தங்கிப்பாங்க"

"சரி ஸார்"

நல்ல இடத்தில் அவர்களுக்கு அவர் சொன்ன மாதிரியே காட்டேஜ் புக் பண்ணித் தந்தோம்.  அவருக்கும் மகிழ்ச்சி.  எனினும் ரொம்ப ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை.  சற்றே கடுகடு முகத்துடன் மிடுக்காக ஏற்றுக் கொண்டார்.

இரண்டாவது நாள் காலை அவரை அழைத்துவர ஜீப்புடன் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றோம்.  டிரைவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு,  அவர் அறைக்குச் சென்றோம். 

எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அவர் குளிக்கச் சென்றார்.  அவர் மனைவி உள்ளே இருந்தார்..

டெலிபோன் மணி அடித்தது.  அவர் குளித்துக் கொண்டிருந்ததால் அவர் மனைவி வந்து எடுப்பார் என்று எதிர்பார்த்தோம்.  அவர் அசையவில்லை. ஃபோன் விட்டு விட்டு மறுபடி அடித்தது.  உள்ளிருந்து அவர் ஃபோனை எடுக்கச் சொல்லி எங்களுக்குக் குரல் கொடுத்தார்.
 
 

தனா ஃபோனை எடுத்தார்.

"---------------"
 
"ஆமாம்."

"-------------------"
 
"குளிக்கிறாருங்க.."

"----------------------"
 
"அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடி பண்றீங்களா"

"-----------------------"
 
"நான் அவர் ஆடிட் பண்ண வந்திருக்கற ஆபீஸ் சூபரின்டெண்ட்ங்க.."
 
"----------------------------------------------------------------""
 
"இல்லைங்க..  அவங்கள்லாம் ஆபீஸ்ல தங்கி இருக்காங்க   ஸாரும் அவர் மிசஸும் மட்டும் இங்க தங்கி இருக்காங்க"

"----------------------------------------"
 
"ஆமாங்க...  உள்ள இருக்காங்க. கூப்பிடவா?"

"---------------------------------"
 
"சரிங்க.... நீங்க ஃபோன் பண்ணினீங்கன்னு ஸார்ட்ட சொல்லணும்.  அதானே?  சொல்றேங்க...நீங்க யாருன்னு சொல்லட்டும்?"

"----------------"
 

தனா ஃபோனை வைக்கும்போதே அவர் தலையைத் துவட்டியபடியே துண்டுடன் வந்தவர், "என்ன இவ்வளவு நீளமாப் பேசிகிட்டே இருந்தீங்க?  ரூம் செர்வீஸ் இல்லையா?" என்றார்.

"இல்லை ஸார்"  என்றார் தனா.

"அப்புறம் யாரு?" என்று சந்தேகமாகத் திரும்பி நின்று கேட்டார் அவர்.

தனா புன்முறுவலுடன் என்னை ஒருமுறை பார்த்தார். அப்புறம் உள்ளே ஒருமுறை பார்த்து விட்டு மெதுவான குரலில் சொன்னார்.  "உங்கள் மனைவி ஸார்!  மதுரைலேருந்து!"

"---------------------------------"
 
 
 
அந்த ஆடிட் சுலபமாக, அதிகக் கஷ்டமில்லாமல் ஏன் முடிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

திங்கள், 23 மார்ச், 2015

'திங்க'க்கிழமை : வடைக் குழம்பு


இந்த ஞாயிறு என் நாளாகியது.  உடல் நிலை சரியில்லாத மனைவி இன்றைய பொழுதை புளிக்காய்ச்சல் பிசைந்து ஓட்டி விடலாமா என்று கேட்க,  அதில் எனக்கும் என் செல்வங்களுக்கும் சம்மதமில்லாமல் போக, சங்கீதாவிலிருந்து குழம்பு, பொரியல் வாங்கிக் கொள்ளலாமா என்ற பேச்சைக் கடந்து, என்னைக் களம் இறக்கி விட்டார்கள்.  "சிம்பிளா நீங்க ஏதாவது செய்யுங்களேன்"

செய்துட்டாப் போச்சு.  என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.  


உருளைக்கிழங்கு, தக்காளி வெங்காயம் தவிர வேறு ஏதும் வீட்டில் இல்லை.  கரி,கொத். கூட இல்லை. மணி 11.50. சாப்பிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
 

டட்..டடாய்ங்க்.. 

சனிக்கிழமை செய்த பருப்பு வடையில் பாக்கி 12 ஃப்ரிஜ்ஜில் இருந்தன.

அவ்வப்போது பருப்புருண்டைக் குழம்பு செய்வோம்.  இதில் மசாலா சேர்க்கும் வழக்கம் இல்லை.   எனவே என், மற்றும் மகன்களின் சுவைக்காக, கடைகளில் மசால் வடை வாங்கிக் குழம்பு செய்வேன்.  ஒரே வேளையில் ஓடி விடும்.  வீட்டிலேயே மசால் வடையும் செய்யலாம்தான்.  1) பொறுமையும் நேரமும் இல்லாத தருணங்கள்,  2) அது மசால்வடையின் வாசனைகளைச் சரி விகிதத்தில் தாங்கி நிற்பதில்லை! (சில) கடைகளில் ம.வ அபாரமாகச் செய்கிறார்கள்.
 
'இப்போது இந்த பருப்பு வடையில் மசாலா வாசனை இல்லையே...' மகனின் கவலையைத் தீர்த்தேன்!
 

பத்து சின்ன வெங்காயம் தோல் உரித்துத் தரச் சொல்லி, இரு முனைகளையும் அகற்றி விட்டு,  நான்கு பல் பூண்டை உரித்து அதனுடன் சேர்த்து (இதுவே போதும் , என்றாலும்) அரைத் தக்காளியைச் சேர்த்து (இஞ்சி சேர்க்கலாம், என் மகனுக்குப் பிடிக்காது) மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு, 

புளி கரைத்து, உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கரைத்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி, தாளித்துக் கொண்டு கொதிக்க ஆரம்பிக்கும்போது இந்தக் கலவையையும் ஊற்றி கொதிக்க விட்டு,


இறக்கிக் கீழே வைத்து (கறிவேப்பிலைதான் இல்லையே) வடைகளைத் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் சேர்த்து, மூடி,





இடையிலேயே குக்கரில் வைத்து எடுத்த உருளைக் கிழங்கை உரித்து, வெங்காயம் வதக்கி, உரித்த உ.கி சேர்த்து, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கையிலேயே,




இன்னொரு அடுப்பில் புளித் தண்ணீருடன் தக்காளியைச் சேர்த்துப் பிசைந்து, மாடித் தோட்டச் செடியில் இருந்த ஒற்றைப் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு, உப்பு, சாம்பார்ப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பெருக்கி, பெருங்காயத் தூள், மிளகு சீரகப்பொடி சேர்த்து இறக்கித் தாளிக்கவும், மணி 12.20  அகவும் சரியாக இருந்தது!


நடுவிலேயே குழம்பிலும், உ.கி பொரியலிலும் வெங்காயம், பூண்டு சேர்க்குமுன் தனியாக எடுத்துக் கொஞ்சம் பாஸுக்காக வைத்து விட்டேன்!


சமையல் ரெடி!







பி.கு : புகைப்படம் எடுத்துக் கொண்டால் 'திங்க'க்கிழமைக்கு ஆகுமே என்று தாமதமாகவே தோன்றியதால் இரண்டு படங்கள் மட்டும்!

சனி, 21 மார்ச், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.



1) நிர்பயமாகப் போராடத் துணிந்த டெல்லி பெண்.  "உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.  யாரும் உதவ மாட்டார்கள்" என்கிறார்.
 

 
2) பாராட்டப்படவேண்டிய அதிகாரிகள்.  தமிழகத்தில், பத்து டவுன்பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதில், அதிகப்படியான உற்பத்தி மற்றும் விற்பனையில், ப.வேலூர் முதலிடத்தில் உள்ளது. மாதம் தோறும், இயற்கை மற்றும் மண்புழு உரம், 1.50 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு விற்பனையாகிறது.
 


 
3)  சம்பளம்  வாங்கும் வேலையாய் இருந்தாலும் அர்ப்பணிப்புணர்வுடன் செய்ய வேண்டும்.  திருமதி சுசீலா போல.
 

 
4) காவ்யா, வித்யா.  கண்ணூர்ப் பெண்கள். புதுவைப் பல்கலைக்கழக மாணவிகள்.  ரேகிங் செய்ய முயன்ற சீனியர் மாணவனை எதிர்த்துப் புகார் கொடுத்தால், 'என்னால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டாய்' என்று செய்தி பரப்புவேன் என்ற  அவனைப்பற்றிக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து,  அங்கு பலன் எதுவும் இல்லாமல் போக, நீதிமன்றத்தை நாடி, அங்கும் நீதிபதி கல்லூரி நிர்வாகத்தின் பக்கம் நின்று இந்த மாணவிகளை மன்னிப்புக் கடிதம் எழுதித் தரச் சொல்லி வற்புறுத்த, மறுபடியும் இவர்கள் நீதி மன்றத்தின் உதவியை நாட,  நீதிபதி (தனி) ராமசுப்ரமணியம் நியாயத்தை நிலை நாட்ட முயற்சித்திருக்கிறார்.  சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும்,  செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத நிலையிலும்,  'தவறு செய்யாத நிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று நிமிர்ந்து நின்ற இந்த இரு பெண்களுக்கும், நீதிபதி ராமசுப்ரமணித்துக்கும் பாராட்டுகள்.  (விகடன்)
 

 
 

 
6)  நட்பு.    இது வெளி நாட்டு பாஸிட்டிவ்!
 


 
 


8) பலரது உயிரைக் காப்பாற்றிய 9 வயது சித்தேஷ்.



 

9) பணம் கொட்டும் ரப்பர் விளைந்த, 1.45 ஏக்கர் நிலத்தை, பி.எம்ஜோஸ் மற்றும் அவரது அம்மா மரியம்மா மேத்யூ தான், எங்கள் பள்ளிக்காக இலவசமாகவே கொடுத்து உதவினர். அத்துடன், மாணவர்களுக்கு இன்னமும் உதவி செய்கின்றனர். சபாஷ் மனோகரன்.

 

 
10) பாராட்டப்பட வேண்டிய அமைப்பு.
 
 

 
 
 

 
 
 

 
13)  அமுலுக்கு வந்தால் இது ஒரு நல்ல செய்திதான்.
 
 

 
14)  சீன பாஸிட்டிவ்!  படிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி.  இந்தப் பக்கத்தில் இரண்டாவது செய்தியைப் படியுங்கள்  ரியல் ஹீரோஸ்!
 

 
15) நம்மைப் பற்றிய பிறரின் கணிப்புகள் எப்போதுமே சரியாய் இருப்பதில்லை.  நம் பலம் நமக்குத் தெரியவேண்டும். V. R. ஃபெரோஸ் போல.
 

 
16) விளையும் பயிர்.  உன் எண்ணத்துக்குப் பாராட்டுகள் பாவ்யா.
 
 

புதன், 18 மார்ச், 2015

தொலை(த்)ந்த நிம்மதி


தினம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரை மெகானிகலாக ஒரே மாதிரி வாழ்க்கை.  ஐந்து மணிக்கு அலாரமே வேண்டாம், தானே தூக்கம் விட்டுப்போய்விடும். எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி.  வயதாக, ஆக இதுமாதிரிக் கட்டாயங்கள் சேர்ந்து விடுகின்றன. அப்புறம் வீடு வந்து கொஞ்ச நேரம் ஒட்டாமல் கணினியில் ஃபேஸ்புக். 
 

                                                                  Image result for working in computer clipart images
 
டிவியில் பக்தி சேனலும், செல்லில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஓடிக்கொண்டிருக்க, அவன் மனைவி அவனுக்காக அவசரம் அவசமாக ('ர' கூட விட்டுப் போகுமளவு அவ்வளவு அவசரம்) சமைத்துக் கொண்டிருந்தாள்.  இதோ கிளம்ப வேண்டும்.  இப்போதே கிளம்பினால்தான் அலுவலக பஸ் வரும் தூரத்தை அடைய முடியும். அலுவலக பஸ் பிடித்தால் சுத்தமாக ஒரு மணிநேரம் பயணம். 
 

                                                                   Image result for reading newspaper clipart images
 
ஒரே பாதையில், ஒரே மாதிரி தினமும் அலுவலக பஸ் பிடித்து பயணம்.  அலுவலகத்தில் ஒரே மாதிரி பணிச்சுமை.  மாலை வீடு திரும்பி, காலை இவன் கிளம்பிய பிறகு வந்திருக்கும் செய்தித் தாள்களை மேய்ந்து, தொலைகாட்சி பார்த்து, இரவு உணவு உண்டு படுக்கச் சென்றால்,  மறுநாள் மறுபடி...


மகன் வெளியூரில் வேலை பார்க்கிறான்.  மகளுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது. 

சமீப காலமாக மனது முழுவதும் ஒரு அலுப்பு மண்டிக்கொண்டு வருகிறது.  சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்' பதிவில் சொல்லிய ப்ராக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. 


வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவனுக்கும் கனவுகள் இருந்தன. காதல் இருந்தது.  கனவுகள் போலவே காதலும் கட்டுப்படுத்தப்பட்டது.  கனவுக்கு சம்பந்தமில்லாமல் வேலை கிடைத்தது.  வேலையில் சேர்ந்ததும் ஆறுமாதமோ ஒரு வருடமோ கழித்து சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், அதை மனைவியின் பெயரில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது.  காதலி மனைவியாகாமல் புதிய முகம் ஒன்று மனைவியாக வந்தபோது தன் எண்ணம் நிறைவேறும் என்ற எண்ணம் அடிபட்டுப் போனது. 


அப்போதே தொடங்கி விட்டது இயந்திர வாழ்க்கை.  வெளிவரும் திசையறியாது அதன் போக்கில் போகத் தொடங்கினான். சீக்கிரம் ஒரு மாறுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு நினைவில் இருந்தது.   நாள்பட அதுவும் மறந்து, அப்படியே காலமும் ஓடிவிட்டது.


அலுப்பு ஏற்பட்ட ஒரு உச்ச நாளில் ஒருநாள் தன் வழக்கத்திலிருந்து மாறத் தீர்மானித்தான். 

இரண்டு நாட்களாக கணவன் சற்றுத் தாமதமாகக் கிளம்புவதை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.  அதுவும் இரண்டாம் நாளும் அவன் தாமதமாகக் கிளம்பிய போதுதான்,  'நேற்றும் இப்படித்தான் கிளம்பினான்' என்று நினைவு வந்தது. அது மட்டுமில்லாமல், இரவும் நேரம் கழித்துதான் வந்ததும் நினைவுக்கு வந்தது.

ரொம்பக் கவலைப்படாமல் தன் வேலைகளில் மறந்து போனாள். நினைவுபடுத்தியது அலைபேசி!  பிரச்னையும் தொடங்கியது.
 

காலை பதினோரு மணி இருக்கும். திடீரென்று அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. அது அவள் கணவனின் அலைபேசி ரிங் டோன். பரபரப்புடன் ஹாலில் தேடியவள் டிவியின் மேல் இருந்த செட் டாப் பாக்ஸின் பின்னே இருந்த அலைபேசியை எடுத்தாள். 


"மறந்து வைத்து விட்டுப் போய்விட்டாரா?"

"RPK calling..."

அதை எடுத்து உயிர் கொடுத்து காதில் வைத்தாள். இவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க' என்று கேட்டது அவன் மேலதிகாரியின் குரல்.


                                                                           Image result for cell phone near TV clipart images


"எங்க மூன்று நாளாய் ஆளைக் காணோம்... உடம்பு சரியில்லையா? ஆபீஸுக்குச் சொல்ல வேண்டாமா?"

"என்னது.. மூன்று நாட்களாய் ஆளைக் காணோமா... தினமும் அங்கதான வர்றார்?"  அதிர்ச்சியுடன் கேட்டாள்.


"அவர் மிஸஸா?  என்னம்மா ஆச்சு அவருக்கு?  ஒரு வாரமாவே சரியில்லை.  அதுலயும் மூணு நாளாய் ஆளைக் காணோம்... இப்படி இருக்க மாட்டாரே... கூப்பிடுங்க அவரை.."

"ஸார்.. ஸார்..."  எதிர்பாராமல் கேட்ட செய்தியால் திக்கியது, தடுமாறியது அடுத்து வரவேண்டிய வார்த்தைகள். 


"ஆபீசுக்குத்தான் கிளம்பி தினமும் போல வந்துகிட்டு இருக்கார்... இன்னிக்கிக் காலையும் கிளம்பி வந்தாரே....  ஏன் ஃபோனை வச்சுட்டு வந்துட்டார்?  இல்ல, போயிட்டார்?
என்ன ஆச்சு?  மூணு நாளாய் வரவில்லையா?  கடவுளே..."

சிறிய நிசப்தத்துக்குப் பின் எதிர்முனை அமைதியாகியது. 

இவளது அமைதி குலைந்து போனது.  'என்ன ஆச்சு இவருக்கு? என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லலையே..  வரட்டும்'


மதியம் மீண்டும் அதே அலைபேசி அழைத்தது. பெயர் வராமல் ஏதோ நம்பர் வந்தது. எடுத்துப் பேசினாள்.  கணவன் குரல் கேட்டது.  விட்டு விட்டு வந்தது.

"என்னங்க... என்னங்க... எங்கே இருக்கீங்க...  ஆபீஸ் போகலையா? செல்லையும் விட்டுட்டுப் போயிட்டீங்க..."


அவன் பேசுவதே கேட்கவில்லை. உடைந்து உடைந்து வந்தது. இவள் பெயரை உச்சரிக்கிறான் என்று புரிந்தது.  கட் ஆகி விட்டது.  குழப்பம் ஏறியது.  அந்த எண்ணுக்கு இவள் டயல் செய்து பார்த்தாள். போகவில்லை.

மதியத்துக்குமேல் மீண்டும் அந்தத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. 


இந்தமுறை பேசியது ஒரு காவல்துறையின் அதிகாரக் குரல். 

"இந்த நம்பர் யாருதுங்க... பேர் சொல்லுங்க.. நாங்க போலீஸ்.."

பெயர் சொன்னாள்.

"அட்ரஸ் சொல்லுங்க.."


சொன்னாள்.

"சரியாத்தான் இருக்கு..  ஏம்மா உன் புருஷனா அவன்.. கள்ள வோட்டுப் போட வந்தான்னு சொன்னாங்க...  பிடிச்சா கஞ்சா வச்சுருக்கான்.  உள்ளே பிடிச்சு வச்சுருக்கோம்..  கிளம்பி வாங்கம்மா..."  காவல் நிலையம் பெயர் சொல்லியபிறகு தொடர்பு அறுந்தது.


" கள்ள ஓட்டா... தன்னுடைய ஒட்டையே இவன் போடவில்லையே... என்ன சொல்கிறார்கள்..."  வயிற்றைப் பிசைவது போல இருந்தது. மயக்கம் வந்தது.  யாருமே இல்லையே...  என்ன செய்வது?

காலிங் பெல் அடித்தது.  கதவைத் திறந்தாள்.  மகன் நின்றிருந்தான். 
 
 

                                                                      Image result for man standing outside the door clip art images
 
"என்னம்மா ஆச்சு உனக்கு?  நீயே கதவைத் திறக்கறே?"

"எனக்கு என்ன?  ஒண்ணுமில்லையே?"  காலையிலிருந்து நடக்கும் எதுவும் சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.

"ஏன் அப்படிக்கேட்கறே?"

"நேத்து ராத்திரி அப்பா ஃபோன் செய்து வந்து அம்மாவுக்குத் துணையாயிரு'ன்னு சொல்லிட்டுக் கட் பண்ணிட்டார்.  அப்புறம் உடனே மறுபடி மறுபடி டயல் செய்தாலும் எடுக்க மாட்டேங்கறார்.  என்ன ஆச்சு அவருக்கு?  ஏன் படுத்தறீங்க?  என்ன நிலைமையில கிளம்பி வந்திருக்கேன் தெரியுமா?  என்னன்னு நினைச்சுக்கறது?"

ஸ்விட்ச் ஆன் செய்த மாதிரி அழத் தொடங்கினாள்.

லேண்ட்லைன் அடித்தது.  மகன் எடுத்தான்.  மகள்.  வெளியூரிலிருந்து பேசினாள்.  மகன் பாடிய அதே பல்லவி. மகன் குழப்பத்துடன் அம்மாவைப் பார்த்தபடியே ஏதோ பேசி விட்டு ஃபோனை வைத்தான்.

சாப்பிட்டு விட்டு, காவல் நிலையம் கிளம்பினார்கள்.

அங்கு அவர் இல்லை. -ஒரு மணி நேரத்துக்கு முன்னால் யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாய்ச் சொன்னார்கள்.

குழப்பத்துடன் வீடு வந்து மாலை வரைக் காத்திருந்தும் அவர் வரவில்லை.

மாலை 6 மணிக்குமேல் தொலைபேசி அலறியது.  பேசியது பெண்குரல்.
 


























இந்தக் கதையை எப்படியோ தொடர நினைத்து எழுதி வைத்து ஆறு மாதங்களாகின்றன.  முதலில் நான் நினைத்தபடி எழுத எனக்குப் பிடிக்கவில்லை.  வேறு எப்படித் தொடரவும் அலுப்பாக இருக்கிறது!  'கனவிலிருந்து விழித்துக் கொண்டவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாகக் கிளம்பினான்' என்கிற வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை!

வேறு என்ன செய்யலாம்?

உங்கள் யாருக்காவது ஏதாவது தோன்றினால் தொடருங்களேன்...  ஒவ்வொரு பகுதி ஒவ்வொருவர் கூடத் தொடரலாம்.  முடியவில்லையா?  விட்டு விடுங்கள்!  அவன் ஏதோ மிகப் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.  
 
 
தலைவிதி நன்றாயிருந்தால் வெளிவருவான்!




.