புதன், 19 ஆகஸ்ட், 2015

தற்கொலை செய்து கொண்ட எழுத்தாளர்



சமீபத்தில் ஒரு பழைய புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட செய்தி.  ஒரு எழுத்தாளர் தற்கொலை செய்து கொண்டாரா?  புதிய செய்தியாக இருக்கிறதே..  இதற்குமுன் இப்படி நடந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஒரு பெரிய லிஸ்ட்டே விரிகிறது!  கவிஞர்கள் தனி லிஸ்ட்!
 

 
Syliviya plath effect என்றால் என்ன தெரியுமோ?  கவிஞர்களின் தற்கொலைக்கு இதைக் காரணமாகச் சொல்கிறார்கள்.

 
ஹிட்லர் விஷயத்தில், அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாடி வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார் என்ற வதந்தி உண்டு.
 

 
நமக்குத் தெரிந்து நிறைய நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  சிலுக்கு ஸ்மிதா, விஜி, ஷோபா, திவ்யபாரதி இப்படி பெண் பிரபலங்கள்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
உலக அளவில் தற்கொலை செய்து கொண்ட நடிக நடிகையரும் அதிகம்.



 
மர்லின் மன்றோ மரணம் கூட தற்கொலைதான் என்று சொல்வார்கள்.  அவர் தன 36 ஆம் வயதில் மரணமடைந்தார்.  வருடம் 1962. 
 
இந்தியாவில் 1965 இல் முப்பத்தைந்து வயது மலையாள எழுத்தாளர் ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொண்டார்.
 
 
இன்றுவரை அவரது மரணத்தின் மர்மம் விடுவிக்கப் படவில்லை.
 
இவர் தற்கொலை செய்து கொண்டபிறகு மாத்ருபூமி ஆசிரியர் எம் டி வாசுதேவன் நாயர் உள்ளிட்ட பிரபலங்கள் இவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.
 
அவர் நாட்களில் மிகவும் கொண்டாடப் பட்ட எழுத்தாளர் இவர்.  அவரது எழுத்து நடை வாசகர்களை மிகவும் வசீகரித்திருக்கிறது.
 
அவரின் ஆரம்ப எழுத்துகளிலிருந்தே தற்கொலை கூடவே வந்திருக்கிறது.  திருமணம் செய்யாமல் வாழ்ந்த ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொள்வதற்குமுன் அவர் வேலை செய்து கொண்டிருந்த கல்லூரியில் தற்கொலை பற்றி பொதுவாகப் பேசி இருக்கிறார்.  அவர் அப்போது NSS கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்திருக்கிறார்.
 
கவிதாயினிகள் பொதுவாக இது மாதிரி சில்வியா ப்ளேத் எபெக்ட் (‘Sylvia Plath effect,’) டால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்கிறார்கள்.  இவர் நிறைய கவிதை எழுதியதில்லை என்றாலும் மன்னிப்பு, தற்கொலை போன்ற இவரின் புகழ் பெற்ற சிறுகதைகள் இவரது மனத்தை வெளிப்படுத்தியே வந்திருக்கின்றன.  வாசகர்கள், இவரின் எழுத்தை ரசித்த அளவு அவரின் மனநிலையைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் போலும்.
 
திருமணமே செய்து கொள்ளவில்லை ராஜலக்ஷ்மி.  இவரின் படைப்புகளை, "இது என் கதை, இது அவளின் கதை" என்று கூப்பாடு போட்டு, பிரச்னையாக்கி நிறுத்த அப்போது ஒரு கூட்டமே இருந்திருக்கிறது.
 
நடுவில் இரண்டு மூன்று வருடங்கள் எழுதுவதையே நிறுத்தியும் இருந்திருக்கிறார்.  இவரின் ஒரு நாவல் இதே காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப் பட்டிருக்கிறது.  பாதியிலேயே நிறுத்தப் பட்ட இவர் நாவல் 'உச்சி வெயிலும் இளம் நிலவும்'
 
அவருடைய கவிதை ஒன்று.  இது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு வருடங்கள் முன்பு மாத்ருபூமியில் எழுதியது.
 
"சாவே,
அங்கு நான் வாழ்க்கையைத்
தொடங்க விரும்புகிறேன்.
நான் என்ற இந்தக் குமிழ்
உன் காலடிகளில்
மிதிபட்டு அழியாதிருக்குமாக!
என்னில் அமைந்த
இயலாமைகள்
சந்கோஷங்கள்
சின்னச்சின்ன அபிலாஷைகள்
ஆனந்தங்கள்
மேலோங்கிய சிந்தனைகள்
வேதனைகள் -
துச்சமான வேதனைகள்
இரக்கங்கள்
சுகம் நாடும் தவிப்புகள்
எல்லாம்
அங்கு என்னுடன் இல்லாதிருக்குமாக"

இவரின் 'ஒரு வழியும் சில நிழல்களும்' வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

 

21 கருத்துகள்:

  1. கவிதாயினிகளுக்கு இந்த எஃபக்ட் இருக்குமா. அட.. ஏண்டா பிறந்தோம்னு எப்பவாவது நினைத்ததுண்டு. ஆனா தற்கொலை எல்லாம் அடுத்தவங்களுக்கு பயம் உண்டாக்கினாலும் வீரங்கதான் செய்யமுடியும்.. ஹ்ம்ம் ராஜலெக்ஷ்மி பெயர் அருமை. இவரா தற்கொலை செய்துகொண்டார். வேறேதும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதாயினி இப்படி ஒரு முடிவை எடுதாரா அல்லது எடுக்க நிர்ப்பத்திக்கப்பட்டாரா என்று அவரின் ஆவிதான் வந்து இனி எழுத வேண்டும். புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்தி எனக்கு புதிது! எப்படி இருப்பினும் தற்கொலை என்பது ஓர் கோழைத்தனமான முடிவு!

    பதிலளிநீக்கு
  4. வேதனையான விடயம் கவிதை மனம் கணக்கச் செய்தது

    பதிலளிநீக்கு
  5. படிக்கப் படிக்க அதிர்ச்சியாக இருக்கிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. சில்வியா பளித் இப்பெக்ட் பற்றி முன்பு படித்த ஞாபகம். படைப்பாளிகளில் சிலர் அகவயப்பட்ட, கற்பனை உலகில் வாழும் ஆனால் மேதமையோடு இருக்கும் தன்மையை உணரமுடிகிறது. தற்கொலையை பற்றிய எனது இந்த பதிவு நினைவுக்கு வருகிறது. http://makizhnirai.blogspot.com/2015/05/suicide-idiotic-idea.html

    பதிலளிநீக்கு
  7. கேள்விப் படாத விஷயம். ராஜலக்ஷ்மி என்ற பெயரில் மலையாள எழுத்தாளர் ஒருத்தர் இருந்ததும் தற்கொலை செய்து கொண்டதும் இன்று தான் தெரியும். :)

    பதிலளிநீக்கு
  8. துளசிதரன்: இவரைப் பற்றிக் கேட்டதுண்டு. பாலக்காடைச் சேர்ந்தவர்..செர்புளசேரிக்காரர்..ஆனால் தற்கொலை பற்றி தகவல் கிடைக்குமா என்று தேடினாலும் கிடைக்கவில்லை. கீதாவும் இந்த ப்ளாத் எஃப்க்ட் பற்றிச் சொல்ல அப்போது மீண்டும் இவரைப் பற்றிப் பேசினோம்..ஆனால் ஆதாரம் இல்லாததால் விட்டுவிட்டோம்..இவரது நாவல் ஒரு வழியும் குறைய நிழலுகளும் கேரள சாகித்திய அகாடமி விருதை வென்றது. இது டிவி சீரியலாக வந்தது. பார்த்தது இல்லை. நின்னே ஞான் சினேகிக்கிந்னு எனும் கவிதை மிகவும் போற்றப்பட்ட கவிதை. நான் எனது ஊருக்கு வார இறுதியில் செல்லும் போது செர்புளசேரி வழியாக சில சமயம் செல்வதுண்டு. அப்படிச் செல்லும் போது இவரைப் பற்றி சில சமயம் நினைவு வரும் எழுத வேண்டும் என்று நினைத்து எழுதாமல்...தாங்கள் மிகவும் விரிவாக தகவல் கொடுத்துள்ளீர்கள்.

    கீதா: ஸ்ரீராம் sylviya plath effect பற்றி சமீபத்தில் சைக்காலஜி கட்டுரை ஒன்றில் வாசிக்க நேர்ந்தது. அது சில்வியா ப்ளாத் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த கவிதாயினியும் தற்கொலை செய்துகொள்ள அவரது பெயர் தாங்கி வந்ததே இந்த டேர்ம்...சைக்காலஜியில்..அட! இதன் அடிப்படையில் தான் நம்மூரில் இறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றி எழுதலாமே என்று நினைத்து துளசியிடம் பேச இந்த ராஜலக்ஷ்மி பற்றியும் அவர் சொன்னார்....பதிவிற்கு...பிள்ளையார் சுழி கூட இன்னும் போட வில்லை...

    பதிலளிநீக்கு
  9. கற்பனை உலகுக்கும் ,நிஜ உலகுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை தாங்கிக்க முடியாமல் இந்த முடிவுக்கு போய்விடுகிறார்கள் என நினைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  10. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் ராஜலெஷ்மி பற்றியும் அவர் தற்கொலை பற்றியும் இன்று தான் தெரியும். பதிவு நெகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. அதீத சிந்தனைகளோ, ஏக்கங்களோ இவ்வாறான முடிவுக்கு இட்டுச்சென்றிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. மனபாரம் தரும் விசயம். சில்வியா பிளாத் நூலைப் படிக்க எடுத்துவந்து பாதியிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. அறியாத தகவல். சில்வியா பிளாத்தின் கவிதைகள் வாசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இப்படி பயமுறுத்துறீங்களே? நான் கூட நிறைய கதை கவிதை (?) பாதியிலயே நிறுத்தி வச்சிருக்கேன். இன்னொண்ணும் கேள்விப்பட்டு கதி கலங்குது. தற்கொலை செஞ்சுகிட்ட ஆவிங்களுக்கு இனிப்பு, முறுகல் வகை படைப்புகள் போய்ச் சேராதாம். வெறும் உப்பில்லா கூழ் மட்டுமே அந்த ஆவிகளுக்குப் போய்ச் சேருமாம். தேவையா?

    நிற்க.. தொங்கினாலும் சரிதான்.. தற்கொலை என்பது வருங்காலத்தில் ஒரு உரிமையாக மாறும் என்று எண்ணுகிறேன்.. குறிப்பாக வயதானவர்கள் உயிர்பிரி உரிமை கேட்டுப் (போராடியாவது) பெறுவார்கள் என்று நம்புகிறேன். இன்னும் நூறு வருடங்களுக்குள்ளாக தெருக்கோடி மலர் ஆஸ்பத்திரியில் காலை பத்திலிருந்து பனிரெண்டு மணி வரை வாரத்தில் நான்கு நாட்கள் உயிர்பிரி சலுகைகள் செய்து கொடுப்பார்கள். ஆதார் அடையாள அட்டை காட்டி நுழைய வேண்டியது. சுகமான மெத்தையில் படுக்க வேண்டியது. கைகளை ஒரு தடுப்பில் நுழைத்ததும் பஞ்சை வைத்து ஒத்தடம் கொடுத்தது போல் தானியங்கி இயந்திரம் போடும் உறுத்தாத ஊசி.. சடுதியில் சோம்பித் தூக்கம் வரும். எழுந்திருக்க வேண்டியதில்லை. சுபம். (உப்பில்லா கூழ் தனி சமாசாரம் :-)

    பதிலளிநீக்கு
  15. கொலை செய்பவரோ தற்கொலை செய்து கொள்கிறவரோ திட்டமிட்டுச் செய்வதில்லை என்றே தோன்றுகிறது. ஏதோ அந்த நொடியின் வேகம் அழுத்தும் சுமை காரணமாகவோ வெறுப்பாலோ இருக்கலாம் --அச்செயலைத் தூண்டுகிறது என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  16. சராசரித்தனத்தை மீறியவர்கள்
    எழுத்தாளர்கள்/கலைஞர்கள் என்பதற்கு
    எழுத்து/கலை மட்டுமல்லாது
    தற்கொலையும் இருப்பது
    மனம் கலங்கச் செய்கிறது

    பதிலளிநீக்கு
  17. மன அழுத்தாம் அதிகாமானால்.....இது யாருக்கும் நிகழலாம்

    பதிலளிநீக்கு
  18. வேதனை தான்.... இப்படிச் செய்து கொள்வதற்கும் மனோ தைரியம் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  19. இப்பொழுது தான் பார்த்தேன். விவரிப்பு அருமை. கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அந்தக் கவிதையில் உச்சம் கொள்கிறது. எழுத்து பிடிபட்டுவிட்டது பளீரிடுகிறது. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!