வியாழன், 31 மார்ச், 2016

ரேஷன் கடை - அனுபவம் [தொடர்ச்சி ]


"வீடு மாறினால் வரும் கஷ்டங்களில் ரேஷன் கார்ட் மாற்றும் வைபவமும் ஒன்று.  கேஸ் கனெக்ஷன் கூட எளிதாக முடிந்து விடும்.  இது கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலை இல்லையா...

மாறிய ஏரியாவுக்கு ரேஷன் கார்ட் மாற்ற ஸ்ரீ பெரும்புதூர் சென்று வரவேண்டும் என்றார்கள்.  அங்கு சென்று DSO வைச் சந்தித்து கடை  அலாட் செய்து வாங்கிக் கொண்டு, உடனடியாக நேரே அந்தக் கடைக்குச் சென்றேன்.
 
அந்தக் கடை ஊழியர் என்னை மதிக்கவே இல்லை.  நிமிர்ந்து பார்க்கவே நேரம் எடுத்துக் கொண்டார்.  அப்புறமும் விவரம் கேட்க இன்னும் நேரம் எடுத்துக் கொண்டார்.  பின்னர் பேசியபோது ' இந்தக் கடையில் உங்கள் கார்டை இணைக்க முடியாது.. பக்கத்து ஏரியாவுக்குச் செல்லுங்கள்'  என்றார்.
 
"உங்கள் DSO இந்தக் கடையைத்தான் குறித்துக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்"

"இங்கு இருக்கும் நிலைமை அவருக்கு என்ன தெரியும்?"
 
"அவரையே கேளுங்களேன்.."
 
"நான் ஏன் கேட்கணும்?  வேணும்னா நீங்களே கேட்டுக்குங்க"
 
நான் கேட்கமாட்டேன் என்று எதிர்பார்த்திருப்பார்.  நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.  ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து கிளம்பும்போதே அவரின் அலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டுதான் வந்திருந்தேன்.  அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன்.  என்னை என் பதவியுடன் (ஓய்வு பெற்ற) என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு, காலை அங்கு வந்து அவரைப் பார்த்ததையும் நினைவு படுத்தி விட்டு,
 
"நீங்கள் என்னவோ கடை எண்ணை குறித்தே கொடுத்தீர்கள்... இங்கு இருக்கும் ஊழியர் அவருக்கு என்ன தெரியும் என்று கேட்கிறாரே..  எனக்கு இந்தக் கடைதான் வீட்டுக்குப் பக்கம்.  அவர் சொல்லும் கடை தூரம்.  நான் என்ன செய்ய வேண்டும்?"  என்று பொடி வைத்தேன்!
 
"அவர்ட்ட ஃபோனைக் கொடுங்க"
 
கொடுத்தேன்.
 
சிறிது நேர மௌன, மற்றும் முகம் மாறும் உரையாடால்களுக்குப் பின்னர் அலைபேசியை என்னிடம் கொடுத்தவர், மௌனமாக நோட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்து என்னை 'அவர்களுடன் சேர்த்து'க் கொண்டார்!
 
அப்புறம் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.  பெரும்பாலும் எதுவும் எனக்கு இல்லை என்று சொல்லப் பட்டதில்லை.  சோப்பு வாங்கினால்தான் எண்ணெய் என்றெல்லாம் பேரம் பேசப்பட்டதில்லை.  நல்ல அரிசியாகத்தான் கிடைக்கும்.
 
ஒருநாள் அவர் மாறிச் சென்று விட்டார்.  வேறு ஒருவர் பொறுப்பு எடுத்துக் கொண்டாலும் மாற்றம் பெரிதாக் ஒன்றுமில்லை."
 
"அவ்வளவுதானா?"
 
"இன்னும் ஒரு சிறு திருப்பம் இருக்கிறது... அவசரப்படாமல் கேளு.."
 
"சொல்லுங்க.." 

"ஒருநாள் காலை நான் கடைக்குச் சென்றபோது ஏற்கெனவே மூன்று நான்கு பேர்கள் பொருள்கள் வாங்க வேண்டி நின்று கொண்டிருக்க,  புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்று சொன்னேனே, அந்த ஊழியர், "அதான் சொல்றேன் இல்ல...  இன்று விற்பனை கிடையாது.  செக்கிங் வந்திருக்காங்க...  நாளைக்கு வாங்க"  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
 
செக்கிங் வந்திருப்பவரை நான் ஏறிட்ட அதே சமயம் அவரும் என்னைப் பார்த்தார்.  இங்கிருந்து மாற்றலில் சென்ற ' அந்த' ப் பழைய ஊழியர்.  என்னைப் பார்த்ததுமே அவர் முகம் லேசாக மாற,  இப்போது இருப்பவரின் அருகில் சென்று அந்தப் பக்கம் பார்த்தபடி திரும்பி நின்று ஏதோ சொன்னார்.
 
உடனே இவர் என்னைப் பார்த்து, "ஸார்..  நீங்க வந்து வாங்கிட்டுப் போயிடுங்க.." என்றவர் சட்டென சுதாரித்து, நின்றிருந்த மற்றவர்களையும் பார்த்து நீங்களும் வாங்கிட்டுப் போயிடுங்க..  இனி யாரும் வந்தால் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லிவிட,
 
நாங்களும் அன்று ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொண்டே வீடு வந்தோம்.

எப்படி?" என்று முடித்தார்.


எப்படி?

புதன், 30 மார்ச், 2016

ரேஷன் கடை - அனுபவம்

 
 
வீட்டுக்கு மாமா வந்திருந்தார்.  அந்த நேரம் கேஸ் வந்திருக்க, பில் 525 ரூபாய் என்றிருக்க,  அவர் 575 ரூபாய்க் கொடுங்க" என்றார்.

இவர்கள் போடும் உருளையில் சரியான அளவில் எரிவாயு இருக்குமா என்பதே எனக்குச் சந்தேகம்.  உருளையிலிருந்து எரிவாயுவைத் திருடும் வீடியோ காட்சி ஒன்றை வாட்சாப் பகிர்விலும் பார்த்துத் தொலைத்திருந்தேன். 

ஒவ்வொரு முறை 25 நாட்கள், 28 நாட்களிலேயே தீர்ந்து கழுத்தறுக்கும்.  நாம் பெரிய அளவில் சமையல் எதுவும் கூடச் செய்திருக்க மாட்டோம்!  ஏன், வெளியூர் கூட சென்று வந்திருப்போம்.  
இதை அவர்களிடம் சொன்னால் நாம்தான் எடை பார்க்கும் கருவி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமாம்.  அவர்கள் கொண்டு வர மாட்டார்களாம்.  செய்தித்தாளில் நாம் படிக்கும் தகவல்கள் எல்லாமே இவர்களால் மறுக்கப் படும்!
 
"வாஷர் செக் செய்ங்க"  என்று கூறி பணம் எடுக்க உள்ளே சென்றேன். 

சில்லறையாய் இல்லை.  'ரிஸ்க்'தான்!  இவர்களிடம் போனால் மிச்சத்தை அடித்துதான் பிடுங்க வேண்டும்!!  600 ரூபாய் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
 
"வாஷர் சரியாய் இருக்கு" என்றார் விநியோகர்!

பில்லை வாங்கிப் பார்த்த மாமா "ஏண்டா 50 ரூபாய் அதிகம் கொடுக்கறே?"  என்று கேட்டார்.
 
"என்ன புதுசாக் கேக்கறீங்க!  எப்போதுமே அப்படித்தான் மாமா.  முன்னால் எல்லாம் 20 ரூபாய் அதிகம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் முப்பது ரூபாய் என்றார்கள்.  இப்போது ஏஜென்ஸி மாற்றி விட்டார்கள்.  அப்புறம் இவர்கள் இப்போதெல்லாம் 50 ரூபாய் அடித்துப் பிடுங்குகிறார்கள்." என்றேன்.
 
இதையெல்லாம் காதில் வாங்காமல் 'யாரையோ பற்றிப் பேசுவது போல நின்றிருந்தார் அந்தத் ' தொழிலாளி '.   600 ரூபாய் நான் அவரிடம் கொடுக்க, அவர் 20 ரூபாய் மிச்சம் தந்தார். 
 
"உங்க கணக்கு என்றாலும் 575 தானே...  எங்கே மிச்சம் 5 ரூபாய்?" என்றேன். 
 
"சில்லறை இல்லை.  நீங்கள் 5 ரூபாய் கொடுங்க"  என்றபடி பத்து ரூபாயை எடுத்தார்.  நான் அதைக் கையில் வாங்கிக் கொண்டு  "அப்புறம் அடுத்த தரம் தர்றேன்" எனவும், அவர் மனசில்லாமல் டிரைவரிடம் 5 ரூபாய் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார்.  மாமாவிடம் இரண்டு 5 ரூபாய் சில்லறை இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார்!

கொஞ்ச நேரம் தயங்கி நின்று விட்டுச் சென்றார்.  எனக்கு 5 ரூபாய்க்கு அவரை ஏங்க வைத்து விட்டதில் கொஞ்சம் பெருமையாய் இருந்தது!  ஒரு அல்ப திருப்தி!
 
"இதெல்லாம் இப்படியே விடக் கூடாதுடா..  இவர்களை எல்லாம் டீல் செய்ய வேண்டிய விதத்தில் செய்ய வேண்டும்" என்றார் மாமா. 
 
"ஒன்றும் பயனில்லை மாமா...  இவர்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று பவ்யமாய்ப் பகர்ந்தேன்.
 

"என்ன செய்ய முடியாது?"
 
"இதெல்லாம் இப்படியே பழகி விட்டது.  இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.  புகார் செய்ய இந்த நம்பருக்கு டெலிபோன் செய்யுங்கள் என்கிறார்கள்...  அங்கு போட்டால் ஃபோனே போக மாட்டேன் என்கிறது.  தப்பித் தவறிப் போனாலும் எடுப்பதில்லை.  இவர்களிடம் தகராறு செய்தால் அடுத்த மாதம் பயங்கர லேட்டாகத் தருகிறார்கள்.  கேட்டால் சப்ளையே இல்லை' என்கிறார்கள்...ஹ்ம்ம்..."  என்றேன் வெறுப்புடன்.  (வைகோ ஸார் கவனிக்க!)
 
"பேப்பரில் இப்படி அதிகம் பணம் கேட்டால் புகார் கொடுக்கச் சொல்லி டெலிபோன் நம்பர் கொடுத்திருந்தார்களே..  பார்த்தாயோ..."

"செய்தித் தாள்களில் வந்த இது மாதிரித் தகவல்களை கதவில் ஒட்டி வைத்திருந்து அவர்களிடம் காட்டினேன்.  சுவாரஸ்யமாய்ப் படித்து விட்டுக் காசை வாங்கிக் கொண்டு சென்றார் - 50 ரூபாய் எக்ஸ்ட்ராவுடன்தான்!  இதில் தீபாவளி, பொங்கல் என்று வந்து விட்டால் போதும்..  அந்தப் பண்டிகைகள்
தாண்டியிருந்தால் கூட, அந்த மாதத்தில் வரும் ஏறி வாயு உருளையின் காசைக் கொடுக்கும்போது பண்டிகை இனாமையும் சேர்த்துக் கேட்பார்கள்.  கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடிகிறதா என்ன! ..."

"நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள்?"

"பில்லில் எவ்வளவு போட்டிருக்கோ அதுதான்.  நானும் மாடி போர்ஷனில்தான் இருக்கேன்.  அதுவும் செகண்ட் ஃப்ளோர்.."
"எப்படி உங்களுக்கு மட்டும்....?  ஏதாவது புகார் கொடுத்தீர்களா?  சண்டை, கிண்டை..?"

"இதை விடு... இது நான் சண்டை போடாமல், எனக்கு வாய்த்திருப்பவனே ஒழுங்காக இருக்கிறான்.  ஆனால் நான் இப்படி டீல் செய்த விஷயம் ஒன்று இருக்கிறது.  ரேஷன் கடை அனுபவம் ஒன்றைச் சொல்றேன் கேட்கிறாயா?" என்றார்.
 
"சொல்லுங்கள்" என்றேன் சுவாரஸ்யமாய். 
 
அதற்குள் பாஸ் அவருக்குப் பிடித்த தேநீரைக் கொண்டுவந்து கையில் கொடுக்க, அதைப் பருகுவதில் சற்று நேரம் கழிந்தது.  ரேஷன் கடையில் வாங்கும் தேயிலை பற்றிப் பேசினார் பாஸ்.
 
நான் அவர் தேநீரைக் குடித்து முடிக்கக் காத்திருந்து, ரேஷன் கடை அனுபவத்தை ஞாபகப் படுத்தினேன்.

சொல்லத் தொடங்கினார்.


                                                                                                                                                        [ தொடரும் ]

செவ்வாய், 29 மார்ச், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சொர்க்கத்தில் நிச்சயம்



இந்த வார 'கேட்டு வாங்கும் கதை'  பகுதியில் எங்கள் பதிவுலகப் பயணத்தில் எங்களுக்கு முதல் முதல் நண்பர் ஆன அப்பாதுரையின் படைப்பு.

      அவரின் தளம் சற்றே முதிர்ந்த வாசகருக்கானது! மூன்றாம் சுழி
வெண்பா எழுதுவார்.  நசிகேத சரித்திரம் எழுதுவார்.  அமானுஷ்ய படைப்பொன்றை வெளியிடுவார்.  சகலகலாவல்லவர்.  தனி ஒரு தளத்தில் ஒரு சரித்திரக்கதை எழுதி ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டார் (என்று நினைக்கிறேன்) .  சமீபகாலமாக பதிவுலகம் பக்கம் அதிகம் காண முடியவில்லை அவரை!

                இந்தப் படைப்பு பற்றியுமான பொதுவான அவர் கருத்துகளுக்குப் பிறகு அவரின் படைப்பு  பின் தொடருகிறது.

=========================================================================================



பல வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழை நெருங்கிய புதிதில் எழுதிய கதை. குங்குமத்திற்கு அனுப்பிக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் பிரசுரமானது. (சிகாகோவில் குங்குமம் வார இதழ் வாங்க டெவன் தெருவுக்கு எவன் சார் போறது?) அப்போதைய குங்குமம் ஆசிரியர் (இப்போதைய இன்னும் பெரிய பொறுப்புள்ள) குமரன் அவர்கள் பிரசுர விவரங்களுடன் எனக்கு பல இமெயில்கள் அனுப்பி என் முகவரி  கேட்டிருந்தார். இமெயில்களை ஒரு மாதம் போல் கவனிக்காமல் இருந்து திடீரென்று ஒரு நாள் பார்த்தால்... பரவசம்!  என் நிலமையை எடுத்துச் சொல்லி அசடு வழிந்து தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். 
இந்தக் கதையை இங்கே பகிர்ந்துகொள்வதில் ஒரு பொருத்தம். பிரசுரமான கதை அனுப்பச் சொல்லி எனக்கு பல இமெயில்கள் அனுப்பியிருந்தார் ஸ்ரீராம். அவர் அனுப்பிய எந்த இமெயிலையும் நான் கவனிக்கவில்லை. கடைசியில் நொந்து நூலாகி ஒரு இமெயில் அனுப்பியிருந்தார் - அதைத் தற்செயலாகக் கவனித்தேன். அவசரமாக தில் இமெயில் அனுப்பி அசடு வழிந்து நிலமையை எடுத்துச் சொல்லி மீண்டும் அசடு வழிந்து... தொடர்பைத் தக்க வைத்துக் கொண்டேன்.
"Áñ½¢ø ¿Ã¸õ" என்றிருந்ததை "மண்ணில் நரகம்"    மாற்றி கதையை இங்கே வழங்க முடிந்ததற்குக் காரணமாக இருந்த 'கண்டுபிடி' தமிழ் எழுத்துரு மாற்றிக்கு நன்றி.  பொறுமையுடன் ஒரு வரி விடாமல் வாசிக்கப் போகும் அன்பர்களுக்கு நன்றி. பகிரக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி, எங்கள் பிளாக். 
கதையின் பிரசார வரியைத் தவிர மற்றதை அப்படியே குங்குமம் பத்திரிகையில் (ஆகஸ்டு 2009) வெளியிட்டிருந்தார்கள். இதோ கதை.
-------------------------------------

=============================================================================

சொர்க்கத்தில் நிச்சயம் 


அப்பாதுரை 




"மண்ணில் நரகம், திருமணம்" - யூரிபெட்ஸ், கி.மு 300

சீக்கிரமே வந்துவிட்டான் பிலிப். நண்பர்களுக்காகக் காத்திருக்க மனமில்லாமல் ஒரு 32 அவுன்ஸ் கின்னஸ் பீர் தரவழைத்தான்.  நுரை பொங்க வந்த குளிர்ந்த பீரை ஒரு கணம் கண்ணால் கொஞ்சிவிட்டு, உதடுகளை வலிக்காமல் கண்ணாடி முனையில் வைத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் மெள்ள உறிஞ்சினான்.  குளிரமுதமாய் தொண்டையை நனைத்து,  வயிற்றில் இறங்கி மனதைச் சிலுப்பிய மதுவின் முதல் விழுங்கில் லேசாய் உலகை மறந்தான். ஏமாற்றமில்லாத பீர்.  தன் திருமண வாழ்வும் அப்படி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்தான்.  
போய்ல்ஸ்டன், பெர்க்லி தெருக்கள் கூடும் முனையில் இருக்கும் ஐரிஷ் மதுக்கூடம் ஒ'ஹாரா. வெள்ளிக்கிழமை மாலையின் வழக்கமான கூட்டம்.  வியாபார சர்ச்சையிலிருந்து குடும்பச் சிக்கல் வரை ஒ'ஹாரா மதுக்கூடத்தில் பார்க்கவோ கேட்கவோ முடியாதது, எதுவும் இல்லை.  அன்றைக்கு மட்டும் யாராவது பார்த்திருந்தாலோ கேட்டிருந்தாலோ, பாதகமான திட்டம் ஒன்று உருவானது தெரிந்திருக்கும்.
உள்ளே நுழைந்த மூவரும் பிலிப்பை நெருங்கினர். "டூட், எங்களுக்காகக் காத்திருக்கக் கூடாதா?" என்றபடி பிலிப்பின் கையிலிருந்த பீர் கோப்பையைப் பிடுங்கி, ஒரு வாய் விழுங்கி விட்டுத் திருப்பிக் கொடுத்தான் ரகு.
அவர்களைப் பார்த்து அருகில் வந்து புன்னகையும் மார்பிளவும் காட்டிவிட்டு "என்ன வேண்டும்?" என்ற பார் பெண்ணிடம், "கின்னஸ்" என்றான் ரகு.  
"ஜானி வாகர் ப்ளூ" என்ற சுந்தரின் முகத்தில் சுரத்தில்லை.
"க்ளென்மொராஞ்சி, நீட்" என்றான் ஆடம்.  தலையசைத்து அவர்களிடமிருந்து விலகிச் சென்ற பெண்ணின் பின்னே பார்வையைச் செலுத்தியபடி, "சுந்தர், ஏண்டா முந்தா நாள் சாலட் மாதிரி இருக்கே?" என்றான்.
"மூட் சரியில்லடா. ரமாவோட சண்டை.   தினம் பொழுது விடிஞ்சா ஏதாவது நச்சு... இன்னிக்கு நேத்திக்கு நடக்கிற சண்டையில்லைடா, ஆறு வருஷமா இதே கதை தான்.  நிம்மதியே இல்லை. திருமண வாழ்க்கையை ரொம்ப மிகைப்படுத்தி வச்சிருக்கோம்" என்றான் சுந்தர்.
அவர்கள் கேட்ட மதுபானங்களைக் கொண்டு வந்து வைத்தவள், "பதினாறு டாலர், டியர்" என்றாள். ஆடம் தன் அமெக்ஸ் கார்டை அவளிடம் கொடுத்தான்.  வாங்கிக் கொண்டு, அவன் பெயரில் கணக்கெழுதச் சென்றாள்.
"டு சுந்தர்'ஸ் பிட்ச்" என்று தன் விஸ்கிக் கோப்பையை உயர்த்திய ஆடம், "பாடம்ஸ் அப்" என்றான்.  
நால்வரும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு காலி கோப்பையைக் கீழே வைத்தனர்.  "இன்னொரு ரவுண்ட்" என்றனர்,  பார் பெண் கொண்டு வந்ததும், மறுபடி "பாடம்ஸ் அப்" என்றான் ஆடம்.  ஒரே மூச்சில் கோப்பைகள் காலி.  "ரிபீட்" என்றனர்.  மறுபடி கொண்டு வந்தாள். மறுபடி "பாடம்ஸ் அப்", ஒரே முச்சில் காலிக் கோப்பை, "ரிபீட்".
சடங்கு போல் எல்லாம் முடிந்ததும் அமைதியாக இருந்தனர்.  மதுவின் போதை ரத்த நாளத்தில் எழும்பி, முகமெல்லாம் பரவி, மூளையை அணைத்தது.  வாய் தனக்குத் தானே முத்தம் கொடுத்துக் கொண்டது.  ரகுவும் ஆடமும் ஆளுக்கொரு  சிகரெட் பற்றவைத்துக் கொண்டனர்.  பரவிச் சென்ற சிகரெட் புகையைத் தொடர்ந்து சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தி, அருகே தடுப்புச் சுவரோரம் காலியாக இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு "அங்கே போகலாம்" என்றான் ரகு.  "அடுத்த ரவுண்டை அங்கே கொண்டு வா" என்று பார் பெண்ணிடம் சொல்லி  நகர்ந்தனர்.  லேசாகத் தடுமாறி நடந்து வந்து சொகுசு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தனர். தடுப்புச் சுவருக்கு அப்பால் கேட்டுக் கொண்டிருந்த பேச்சுக் குரல் ஓய்ந்து, அமைதியானது.  
"விஸ்கி உள்ளே போன பிறகுதான் உலகமே தெளிவா தெரியுதுடா" என்றான் ஆடம்.  
"நாள் முழுக்க நாயா உழைச்சுட்டு வீட்டுக்கு வந்தா, வீட்டு வேலைகளில் நான் பங்கெடுத்துக்கறதில்லைனு புலம்பறா" என்ற சுந்தர், பிலிப்பின் கையிலிருந்த மார்ல்பரோ ஒன்றை உருவிப் பற்ற வைத்து, பொறுமையுடன்          மூச்சிழுத்தான்.  சூடான மூச்சாகக் கொஞ்ச நேரம் உள்ளடங்கிய சிகரெட் புகை, மெள்ள வாய் வழி வெளியேறியதை  ரசித்தான்.  "கேட்டா, நான் ரொம்ப கட்டுப்படுத்துறவனா இருக்கேன்னு சொல்றா".   நாக்கு நுனியில் புகையிலைச் சுவையை அனுபவித்தபடி தொடர்ந்தான். "சரி, நான் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கறேன், நீ போய் சம்பாதிச்சுட்டு வான்னு சொன்னா, 'படிச்சு பத்து வருஷமாச்சு, இப்ப எனக்கு எவன் வேலை கொடுப்பான்'னு சாக்கு சொல்றா. இந்தியாவுல இருந்த வரைக்கும் ஒரு பிரச்னை இல்லை. இங்கே வந்த பிறகு எல்லாம் மாறிப் போச்சு.  நிம்மதியே இல்லைடா"   
சிகரெட் முனையில் கூடியிருந்த சாம்பலைத் தட்டி, இன்னொரு முறை உள்ளிழுத்துவிட்டு பிலிப்பிடம் கொடுத்தான். "குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க மாட்டேன் என்று எப்பவும் கழுத்தறுக்கிறாளே என்று, போன சனி ஞாயிறில், ரமா, நான் குழந்தைகளைப் பார்த்துக்குறேன், நீ பிலிப் மனைவியோட ஸ்கீ போய்வானு சொன்னேன். உடனே 'உனக்கு குழந்தைகளைப் பார்த்துக்கத் தெரியாது.. நானில்லாட்டா அவங்க சாப்பிட மாட்டாங்க, இதைப் பண்ணு, அதைப் பண்ணு  அப்பிடி'னு ஒரே நச்சு. எனக்கு ஆத்திரம் வந்து, ஒண்ணு நீயே குழந்தைகளைப் பாத்துக்க, இல்லை நான் பாத்துக்கறேன். ஆனா இப்படித்தான் குழந்தைகளைப் பார்த்துக்கணும்னு எனக்கு அறிவுரை தராதேனு நான் சொன்னதும், 'நீ வேலைக்குப் போய் சம்பாதிக்கத்தான் லாயக்கு, குடும்பப் பொறுப்பு கிடையாது, அப்படி இப்படி'னு தேவையில்லாத சண்டையைத்  துவக்கிட்டா.  டிப்ரசிங். இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும்டா" என்றான்.
"அரை வேக்காடு" என்றான் பிலிப், புகைத்தபடி.  "இந்திய, சீனக் குடும்பங்களில் இதை நிறையவே பார்க்கிறேன்.  சொந்த நாட்டுல இருந்த வரைக்கும் பண்பாடு பலாக்கொட்டைனு ஏதாவது ஒரு முக்காடு போட்டுக்கிட்டு, புருஷன் சொன்னது தான் வேதம்னு இருக்கிறவங்க, அமெரிக்கா வந்ததும் இங்கே ஓரளவுக்குப் பரவலா கடைப்பிடிக்கப்படுகிற ஆண்-பெண் சமத்துவக் கொள்கைகளை மேலெழுந்தவாரியாக ஏத்துக்கிட்டு கஷ்டப்படுறாங்க.  கணவனோட வாக்குவாதம் செய்வது தான் தனித்துவம், சமையலறையில் உதவி பெறுவது தான் சமத்துவம்னு நினைக்கிற நிறைய மனைவிகளைப் பார்க்கிறேன்.  தனித்துவமும் சமத்துவமும் சமையலறைக்கு அப்பாலும் போகணும் என்கிறதை நீங்க மறந்துடறீங்க.  அதனால் தான் இப்படி சண்டை.  குடும்பப் பராமரிப்பில் மட்டுமில்லாமல் இங்கே படிப்பு, வேலை, நட்பு என்று வாழ்க்கையின் தினசரி  நடைமுறையில், யு நோ,  உணர்ச்சியிலிருந்து புணர்ச்சி வரைக்கும், இன் எவ்ரிதிங், ஆண்-பெண் தனித்துவமும் சமத்துவமும் கலந்திருக்கு.  இட்ஸ் எ பெர்வேசிவ் பேகேஜ்... உதிரியா எடுத்துப் பார்த்தா உருப்படாம போயிடும்.  உங்க பெண்களும் சரி ஆண்களும் சரி, அதைப் புரிஞ்சுக்கலை..." என்றான்.
"வோ!. டைம் ஔட்" என்றான் ஆடம்.  "பிலிப், கல்சுரல் எக்ஸ்பெர்ட் கணக்கா பேசறியே, உங்க வீட்டுல மட்டும் என்ன வாழுதாம்?"
"அவன் வீட்டுல ஆறு, என் வீட்டுல அரை டசன்.. அவ்வளவுதான் வித்தியாசம்" என்றான் பிலிப்.  "ஜீனா என்னை ஏமாத்தறானு நினைக்கிறேன்.  எங்க கல்யாணம் நடந்த முதல் மூணு மாசம் சந்தோஷமா இருந்தோம்,  அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விலகிட்டோம்.  காதலிச்ச காலத்தில் இருந்த எதிர்பார்ப்பும் நெருக்கமும் கலயாணமானதும் காணாம போயிட்டுது.  எனக்குக் குடும்பம் வேண்டும். அவ என்னமோ தனியா தொழில் நடத்தி மிலியனேரானதும் தான் குழந்தை குட்டி என்கிறா.  இந்த நாலு வருஷத்துல, இருந்த சேமிப்பையெல்லாம் அவளோட உருப்படாத திட்டங்களில் போட்டு ஓட்டாண்டியானது தான் மிச்சம்.  இப்ப என்னடானா, நான் அவளுக்கு சப்போர்டிவா இல்லைனு தினம் தகராறு.  அவளுக்கு நான் எந்த விதத்திலே ஆதரவாக இல்லை?  என்னோட வேலையை மூணு முறை மாத்தியிருக்கேன் அவளுக்காக. இப்போ என் வேலையில் ஒரு நிரந்திர வளர்ச்சியே இல்லாம போயிடுச்சு.  அவ தொழில் வளரணுமேனு நான் என்னுடைய ஆசைகளையெல்லாம் ஒதுக்கி வச்சேன்.  அவளோட பிசினசில் பாதி நேரம் வேலை பார்த்தேன். எனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன்.  இதுக்கு மேலே என்ன சப்போர்ட் வேணும்னு கேட்டா, 'கடமைக்காக செய்யறே, என்னை மதிச்சு என் வெற்றியை நினைச்சு செய்யலை'னு ஏதோ சொல்றா... எனக்கு என்னமோ அவ வேறு யாரையோ சந்திக்கறானு தோணுது" என்றான் பிலிப்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரகுவைப் பார்த்து ஆடம், "ரகுமைஸ்டர், உங்க வீட்டுல என்ன? விவாகரத்தா இல்லை சமாதானமா?" என்றான்.
"இங்கேயும் காய்ந்த புல் தான். ரெண்டு வீட்டுலயும் பாத்து பாத்து வச்ச கல்யாணம், ரெண்டு பேருக்குமே வெறுப்பா இருக்குபா. பொருத்தமில்லாத திருமணம்னு சொல்றா மீரா.  பெண் பார்க்க வந்தப்பவே என்னைப் பிடிக்கலைனு சொல்ல வேண்டியது தானேனு கேட்டா, 'எங்கப்பா அம்மா மனசு நோகாம நடக்கணும்னு தான் ஒத்துக்கிட்டேன்', பண்பாடு புளுக்குனு என்னவோ சொல்றா.  என் கிட்டே என்ன குறை சொல்லு, தீர்க்கப் பார்ப்போம்னு கேட்டா, அதுக்கும் நேரிடையா பதிலில்லை. 'ஆபீஸ், வீடு, சாப்பாடு, டிவி, படுத்தவுடனே பிடிவாத செக்ஸ், பிறகு குறட்டை, சனி ஞாயிறில் கால்ப், லான்டரி, மறுபடி  ஆபீஸ்... இதை விட்டா என்ன சாதிச்சிருக்கே நீ, இந்தத் திருமணத்துலே?'னு கேட்கிறா" என்ற ரகு, நீண்ட பெருமூச்சு  விட்டான். 
"சரி, என்ன செய்யணும் சொல்லுனு கேட்டேன்.  நாம டீசன்டா மனம் விட்டுப்பேசறது கூட இல்லைனு சொல்றா.  என்ன பேசணும்னு கேட்டா, அதெல்லாம் திட்டம் போட்டா பேச முடியும், தானா வரணும்னு சொல்றா.  சினிமா போகலாம்னு  கூப்பிட்டா அந்த சினிமா எனக்குப் பிடிக்காதுங்கறா.  சரி, உனக்குப் பிடித்த சினிமா சொல்லுனு கேட்டா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், அனாவசிய செலவுனு சொல்றா.  டென்னிஸ் விளையாடறியானு கூப்பிட்டா இத்தனை வயசுக்கு மேலே அரைச்சட்டை போட்டுக்கிட்டு அது வேறேயாங்கறா.  சரி, என்ன தான் செய்யலாம் சொல்லுனா... ஏன், நாம ரெண்டு பேரும் பேசக் கூடாதானு கேக்கறா.  என்ன இழவு பேசுறது...?  பேசினா தான் சண்டை வருதே?  என் மேலே மட்டுமில்லாம தன் மேலேயும் ரொம்ப வெறுப்பா இருக்கா.   தினம் ஏண்டா வீட்டுக்குப் போகிறோம்னு இருக்கு" என்றான்.
விஸ்கியை விரும்பி அருந்திக் கொண்டிருந்த ஆடம் மற்ற மூவரும் தன்னையே கவனிப்பதைக் கவனித்து, "இருங்கடா,  விஸ்கியை அனுபவிக்கலாம்.  பெண்டாட்டி கஷ்டம் இருக்கவே இருக்கு" என்றான்.
விஸ்கியை நிதானமாக முடித்துவிட்டு, "நான் அவளை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கிட்டேன்னு, தானும் குழம்பிக்கிட்டு என்னையும் ஆறு வருஷமா நிதம் சாவடிக்கிறா அனபெல்" என்றான் ஆடம்.  "நான் அவளோட கெரியரைக் கெடுத்துட்டேன்னு என் மேலே தீராத கோபம்.  என்னுடைய வேலையை ஓட்டி நான் ஊர் ஊராய், நாடு நாடாய் சுற்றினப்போ அவ வேலையை  விடாம இங்கேயே இருந்திருக்கலாம். அவதான் என் கூட வந்தா.  பி.எச்டி படிப்பு கெட்டுப் போகுதேனு அப்ப நினைக்காமல், இப்போ ஆறு வருஷம் கழிச்சு  புலம்பித் தள்ளுறா.  சில சமயம்... அவ என்னைக் கொல்லத் திட்டம் போட்டிருக்காளோனு தோணுதுடா"
"என்னடா சொல்றே?" என்றனர் அதிர்ந்து.
"சரியா தெரியலை.  கொஞ்ச நாளா என்னோட டூத் பேஸ்ட்ல என்னமோ கலந்திருக்கானு தோணுது... ஏதோ கெமிகல்.. ஆர்செனிக்?  என்னோட உடம்பு கூட லேசா அரிக்குது..."
"ரொம்ப போட்டிருக்கான், அதான்" என்றான் பிலிப்.
"இல்லைடா, உண்மையைச் சொல்றேன்.  இன்னிக்கு இல்லை நாளை நான் இறந்துட்டா, அனேகமாக அது அனபெல் கைவேலையாத்தான் இருக்கும்" என்ற ஆடம், திடீரென்று குரலை உயர்த்தி "பெண்டாட்டி கொடுமையை ஒழிக்கணும், இல்லை பெண்டாட்டியை ஒழிக்கணும்" என்றான்.
"கத்தாதேடா" என்று சுந்தர் அவனை அமைதிப்படுத்த முனைந்தான். "தெரிஞ்சு தானே கல்யாணம் செய்துகிட்டோம்?   பிரச்னையைத் தீர்க்கப் பார்க்காம, பெண்டாட்டியை ஒழிக்கறதுல என்னடா பலன்?" என்றான்.
"திருமண வாழ்க்கை நமக்கு லாயக்கில்லைடா. நினைச்சுப் பாருங்கடா. அஞ்சு வருஷத்துக்கு மேலா  பழகறோம்...ஒருத்தராவது, ஒரு நாளாவது, சந்தோஷமா மனைவியைப் பத்திப் பேசி இருக்கமா?  இதே புலம்பல் தானேடா தினமும்?   நிம்மதியில்லாம ஹை-ஸ்ட்ரெஸ் வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கோம்.  நாப்பது வயசுக்குள்ள மாரடைப்பு வந்து சாகப்  போறோம். இதனால யாருக்கு லாபம், யோசிங்க?  நம்ம மனைவிகளுக்குத்தான்."
"அவங்களுக்கு என்னடா லாபம்?"
"நாம் ஒவ்வொருத்தரும் இரண்டு மிலியன் டாலராவது டெர்ம் பாலிசி எடுத்திருக்கோம்.  கொஞ்சம் கொஞ்சமா நம்மளைக் கொல்லத்தான் நம்ம மனைவிகள் இந்த மாதிரி நடந்துக்கிறாங்க... சந்தேகமே இல்லை, இட்ஸ் எ மேரிட் விமன் கன்ஸ்பிரசி... கூட்டா சேர்ந்து திட்டம் போட்டு செய்யறாங்கடா.  நாம அதை முறியடிக்கணும்"
"டேய்...நீ வேறேடா..தீவிரமா போறே.. பிடிக்கலைனா விலக வேண்டியது தானே.. அதை விட்டு.."
"விலகினா, பிரச்னை தீந்துடுமா?  நல்லா யோசிச்சுப் பாருங்க.  இருக்கிறதுல பாதிக்கு மேலே பிடுங்கிட்டு, அத்தோட நிக்காம இன்னும் பத்து பதினஞ்சு வருஷத்துக்கு மாசா மாசம் பணம் அழணும்.  நோய் நொடினா கவனிக்கணும்.  எதுக்காக இந்த கொடுமை? நான் சொல்றேன், லெட்ஸ் ரிவர்ஸ் இட்.  எத்தனை நாள் இந்த மாதிரி  புலம்பிக்கிட்டே இருக்கப் போறீங்க?   கிடைச்சது ஒரு பிறவி.  கொஞ்ச நாளாவது நாம நிம்மதியா இருக்க வேண்டாமா?"
"என்ன செய்யலாங்கறே?" என்றான் சுந்தர்.
"அவங்க திட்டத்தை அவங்க மேலேயே திருப்புவோம்.  நம்ம மனைவிகளைக் கொன்னுட்டோம்னா, நமக்கு அவங்க  கிட்டேயிருந்து விடுதலை மட்டுமில்லை... போனஸ் மாதிரி அவங்களுடைய இன்சூரன்ஸ் பணமும் கிடைக்கும்.  எல்லாம்  திட்டம் போட்டு வச்சிருக்கேன், ஒரு பிரச்னையும் இல்லை."
"உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு..போடா டேய்.. இதெல்லாம் நடக்கிற கதையா?" என்றான் பிலிப்.
"நடக்குற கதையா இருந்தா?  திட்டத்தைச் சொல்றேன் கேளுங்கடா, கேட்ட பிறகு முடிவு பண்ணுங்க"  
சொன்னான்.

நான்கு பெண்களும் மதியம் மூன்று மணியிலிருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.  இதுவரை ஆளுக்கு மூன்று டயட் பீர் சாப்பிட்டிருப்பார்கள்.  அவர்களை மெள்ளத் தாக்கிக் கொண்டிருந்த மதுவின் போதையில் லயித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
"என்னடி சொல்றீங்க?  சம்மதமா?"
"அனபெல், இது உனக்குத் தீவிரமா படவில்லையா?" என்றாள் ரமா.
"என்னை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கிட்டவனை சும்மா விடப் போவதில்லை" 
"படிப்பைப் பத்திப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொண்ட கணவர்கள் இந்தியாவில் தெருவுக்கு நாலு பேர் இருக்காங்க, இது அவ்வளவு பெரிய விஷயமா?" என்றாள் மீரா.
"படிப்பை விடு.  நான் அவனுக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கேன்?  அவன் சில்லறை படிப்புக்கு கிடைச்ச வேலையில் ஊர் ஊரா, நாடு நாடா சுத்தினப்போ என்னுடைய சொந்த முன்னேற்றத்தை ஒதுக்கிவிட்டு அவன் பின்னாடியே நாய் மாதிரி போனேன்.  இப்போ என் முறைனு சொன்னா, என்னவோ பிச்சைக் காசு போடற மாதிரி  பேசறான்.  இதை விடு.  என்னை ஒரு பொருட்டாவே நினைக்கவில்லை அவன், இந்த திருமணத்தாலே என்ன லாபம்னே தெரியலை"
"என் வீட்டுல மட்டும் என்ன?  இதேதான்.  எங்கப்பாவும் அம்மாவும் பார்த்துப் பார்த்து சேர்த்து வச்சாங்க.  தன்னோட பென்ஷன் பணம் எல்லாம் போட்டு,  என்னவோ அமெரிக்க மாப்பிள்ளைகிட்டே ராணி மாதிரி  இருக்கப் போறேனு சொல்லி, என்னை கல்யாணம் செய்து கொடுத்தாங்க.  கொஞ்சம் கூட பொருத்தமில்லை. இதுக்கு பதிலா நான் கல்யாணமே செய்து கொள்ளாமலிருந்திருக்கலாம்.  தினம் சண்டை. ஐ ஹேட் ஹிம்.  உன் திட்டம் சரிதானோனு தோணுது" என்றாள் மீரா.
"நான் இல்லாமல் பிலிப் கஷ்டப்படுவதைப் பார்க்கணும்.  அவன் கண் முன்னாலே நான் வெற்றிகரமா தொழிலில் முன்னேறி ஒரு மிலியனேரா வந்தபிறகு, அவன் முகத்தில் காறித் துப்பணும்னு வெறி தான்... இருந்தாலும்.." என்றாள் ஜீனா.
"அதெல்லாம் சின்ன வெற்றிகள்.  நினைச்சுப் பாருங்கடி.  அவங்க இறந்துட்டா நாம எல்லாருமே சுதந்திரப் பறவைகள்.  யாருடைய உதவியும் இல்லாம நாம நினைச்சபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.   ஆளுக்கு ரெண்டு  மிலியனாவது கிடைக்கும்.  இது ஒண்ணும் அவங்க பணமில்லையே - இன்சூரன்ஸ் பணம் தானே? அவங்க இறந்த பிறகு எப்படியும் நமக்குக் கிடைக்கத்தானே போகுது?  ஒரு பத்து பதினைந்து வருஷம் முன்பாவே இறந்தால் என்ன குறை?  இது என்ன, நாம தினம் நினைக்காத நிகழ்ச்சியா?  விபத்துல போயிட மாட்டாங்களானு அடிக்கடி நினைக்கிறோம்.  இதுவும் ஒரு விபத்துனு வச்சுக்க வேண்டியது தான்."
"சுந்தருடன் தினம் தகராறு. நிம்மதியில்லைதான்.  இருந்தாலும் அவனைக் கொலை செய்யற அளவுக்கு..." என்றாள் ரமா.
"புலம்பலை நிறுத்துவோம். அஞ்சு வருஷத்துக்கு மேலாக பழகறோம். ஒருத்தராவது, ஒரு நாளாவது, சந்தோஷமா புருஷனைப் பத்திப் பேசி இருக்கமா?  இதே புலம்பல் தான் தினமும்.  இப்படியே விட்டா, நமக்கு நெர்வஸ் ப்ரேக்டௌன் தான் வரும். அமொ¢க்கா வந்து, பைத்தியம் பிடிச்சு ஒரு ஓரமா உட்கார விருப்பமா மீரா?  இன்னும் இருக்கிற வாழ்க்கையை சண்டை போட்டுக் கழிக்கிணுமா?  இருக்கிற கொஞ்ச நாளையாவது நமக்காக உபயோகிக்க வேண்டாமா?"
"மாட்டிக்கிட்டா?" என்றாள் ஜீனா.
"ஒரு சிக்கலும் கிடையாது.  நான் சொல்றபடி நடந்தீங்கனா, ஆறு மாசத்துல நம்ம கணவர்கள் ஆஸ்பத்தி¡¢யே கதினு  கிடப்பாங்க.  எட்டு பத்து மாசத்துல ஒவ்வொருத்தனா போயிடுவாங்க.  ஒரு மாசமா இந்த திட்டத்தை சின்ன சின்ன தோதனைகள் செஞ்சு எல்லா விதத்திலேயும் ஆராய்ஞ்சு  பார்த்துட்டேன்.  பிரச்னையே இல்லை.  நான் கெமிஸ்ட்ரி பி.எச்டி என்கிறதை மறந்துடாதீங்க.  என்னோட படிப்பு எனக்கு என்னிக்காவது உதவும்னு தெரியும்.  என்ன சொல்றீங்க?"
"எனக்குப் பிடிச்சிருக்கு.  மாட்டிக்கிட்டாலும் பரவாயில்லை, திருமணமும் ஒரு விதத்தில் சிறை தானே?" என்றாள் மீரா.
"நான் தயார்"
"நானும்"
"நாளைக்கு இங்கே சந்திக்கலாம்.  என்னிக்கு என்னென்ன செய்யணும்னு டைம் டேபிள் போட்டுக்கொண்டு வருகிறேன்.  சரி, நான் போகணும்" என்று எழுந்து சோம்பல் முறித்த அனபெல், சட்டென்று உட்கார்ந்தாள்.  அவள் முகத்தில் கலவரம்.
"என்னடி?"
"ஷ்! தடுப்புச் சுவருக்கு அந்தப்புறம், நம் கணவர்கள்..! பாரி லிருந்து இறங்கி இந்தப் பக்கமா வராங்க" என்றாள் மெல்லிய குரலில்.
அவர்கள் உட்கார்ந்திருந்த அதே வரிசையில் தடுப்புச் சுவருக்கு அந்தப்புறம் நாற்காலிகள் இழுபடும் ஒலி கேட்டு ஓய்ந்தது.  சுவருக்கு அப்பாலிருந்து பேச்சுக்குரல் தெளிவாகக் கேட்டது. 
"விஸ்கி உள்ளே போன பிறகுதான் உலகமே தெளிவா தெரியுதுடா" என்றான் ஆடம். ⚙




திங்கள், 28 மார்ச், 2016

திங்கக்கிழமை160328 :: தனியாப்பொடி



     சமீபத்தில் அவசர மற்றும் அவசிய காரணமாக மதுரை செல்ல வேண்டி இருந்ததால் ஐந்து நாட்களுக்கு வீட்டில் மகன்கள், மாமியாருக்கு உணவுப் பிரச்னை இல்லாதிருக்க என் பாஸ் அடைமாவு,  தோசை மாவு,  இட்லி மாவு, மற்றும்  மிளகாய்ப்பொடி,  பருப்புப்பொடி, தனியாப்பொடி செய்து வைத்து விட்டு வந்தார்.
 

     அவைகள் எல்லாம் நாங்கள் ஊரிலிருந்து வந்த பின்னும் மிச்சம் இருந்தன என்பது வேறு கதை!
 

     இதில் இன்று தனியாப்பொடி செய்வது எப்படி என்று மட்டும் சொல்லி விடுகிறேன்.  இதைப் பற்றி அறியாதவர்கள், தெரியாதவர்கள் யாராவது ஒருவராவது வந்து  'ஐயா... இது எனக்குப் புதுசு'  என்று சொன்னால் தன்யனாவேன்.  பதிவின் பலன் எனக்கும், ஒரு ஏழை அப்பாவிப் பதிவரை (ஹிஹிஹி... நான்தான்) மகிழ்வித்த புண்ணியம் அவர்களுக்கும் கிட்டும்!
 


                               Image result for coriander seed images  Image result for coriander seed images
 
     தனியாப்பொடி என்பது யாரும் இல்லாமல் தனியாகச் செய்யும் / சாப்பிடும் பொடி என்று நினைப்பவர்களை சுஜாதாவின் பசித்த புலி தின்னட்டும்!
                                      Image result for kadalai paruppu images     Image result for ulutham paruppu images
 
      ரெண்டு ஸ்பூன் கடலைப் பருப்பு, ரெண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு (சிறு) டம்ளர் தனியா, கொஞ்சம் பெருங்காயம், தேவையான அளவு காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒவோன்றாய்ப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு மிக்ஸியில் தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து விடவும்.
 

                       Image result for dry mirchi images  Image result for perungayam images    Image result for perungayam images

     இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.  மோர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.  தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்!










படங்கள்  :  நன்றி இணையம்.