செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சந்திராக்காவின் லட்டுக் கம்மல்...



     இந்த வார எங்களின்
"கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறும்  பதிவர் திருமதி துளசி கோபால்.

     அவரின் தளம் துளசிதளம்.

     டீச்சர் என்று நிறைய பேர்களால் அன்புடன் அழைக்கப்படும் துளசி மேடம் பயணக் கட்டுரைகள் ஸ்பெஷலிஸ்ட்.  ஆன்மீகத் தங்களுக்குச் சென்று வந்து பயணக்கட்டுரைகள் பல வடித்துக் கொண்டிருப்பவர் - மிக அழகிய புகைப்படங்களோடு.

     பயணம் பற்றி அவர் எழுதியிருப்பதை புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளது.



===================================================================



என்னைப்பற்றி

பெருசாச் சொல்லிக்க ஒன்னுமில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இணையத்தில் எழுதிக்கிட்டு இருக்கேன்.  குப்பை கொட்டுமிடம்  துளசிதளம்.  கடந்த சில  ஆண்டுகளாக ஃபேஸ்புக்கிலும் கூட !  நண்பர் ஒருவர்   அங்கேயும் போடுங்க. வாசகர் எண்ணிக்கை கூடும் என்றதோடு....  பதிவுகளைத் தேடிப்படிக்க இப்பெல்லாம் மக்களுக்கு நேரமில்லைன்னு பத்த வச்சுட்டுப்போனார்.
பெரும்பாலும் பயணத்தொடர்தான். எப்பவாவது  இதைப்போல்  'கதை' ஒன்னு!
இந்தியாவை விட்டு வந்து ஆச்சு வருசம் 35.  இப்போதைய வாசம் நியூஸிலாந்து, தெற்குத்தீவில்.
வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லாமல் இருக்கலாமோ?  நான்கு புத்தகங்களை எழுதி, சந்தியாப் பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.
நண்பர் ஸ்ரீராம் என்னிடம் கூட கதையை கேட்ட்ட்ருக்காரே  என்ற வியப்பில் இன்னும் இருக்கிறேன் :-)
=========================================================
 சந்திராக்காவின் லட்டுக் கம்மல்...
 துளசி கோபால்

எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையை அடுத்திருந்து  கண்டதில் மனசுக்குள் இன்னும் இருக்கும்  மனுசி எங்க சந்த்ராக்கா!    கபடமில்லாத  ஒரு ஜீவன்!  கூடப்பொறந்தால்தான் அக்காவா என்ன?


சந்திராக்காவின் லட்டுக் கம்மல் 
 

மற்ற கிழமைகள் எப்படியோ......ஆனால் பொழுது விடிஞ்சதும், அன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பது மட்டும் ஜன்னல்கிட்டே போனவுடன் தெரிஞ்சுரும். வீட்டுக்கு முன்னாலே   இருக்கும் நெல்லிமரத்தடியில்  எல்லாச்சாமானும் வந்து விழுந்துருக்கும். எல்லாச் சாமானுமுன்னா....எல்லாச் சாமானும்தான்.  வெளியே இருக்கும் சார்ப்பில் ட்ரங்கு பொட்டி ஒன்னும், ஒரு கள்ளிப்பெட்டியும், அதுமேலே அடுக்கிவச்ச பாயும் தலைகாணியும்.

வீடு என்னங்க பெரிய வீடு..... நம்ம வீட்டு ஓனர் பின்னாலே இருக்கும் காலி இடத்துலே  ஒத்தைக்கல்லை வச்சு கோமணமாட்டம் நீளமா ஒரு  அமைப்பைக் கட்டி மேலே கூரை போட்டு வச்சுருக்கார்.  அதை நாலாத் தடுத்து  நாலுவூடு கட்டுனதுதான்.  பாகம்பிரிக்க நடுவுலே மண் சுவர். செங்கல் சுவருக்கும்  வெறும் களிமண் பூச்சுதான். சிமெண்ட் பூச்செல்லாம் ஒன்னும் இல்லை.

மொத வூட்டுலே ஒரு இட்டிலிக்கார ஆயா. ரெண்டாவது வூட்டிலே  டவுன் நாதெள்ளா சம்பத்து நகைக்கடையிலே வெள்ளி வேலை செய்யறவரும் அவர் குடும்பமும். புதுக்கலியாணம் கட்டுனவர். மூணாவது வூடுதான் நம்ம சந்த்ராக்காவுது. நாலாவது வூட்டிலே  மரவேலை செய்யற ஒரு வயசானவர், அவருடைய மனைவி ரொம்ப நல்லா தன்மையா இருப்பாங்க.  வரிசையா  அடுக்கு மாதிரி நிறையக் குழந்தைகள்.  குழிக்குள்ளே போனதெல்லாம் கணக்குலே இல்லே! மூத்த பொண்ணைக் கட்டிக்கொடுத்தாச்சு. அந்தப்பொண்ணு புள்ளைத்தாய்ச்சியா இருக்கும்போது அம்மாவுக்கும் கர்ப்பம். வீட்டைவிட்டு வெளியில் தலை காமிக்காம உள்ளேயே இருந்தாங்க.....பாவம்.  ஒரு நாள் இடுப்புவலின்னு ஆஸ்பத்திரிக்குபோய்.....பையன் செத்தே பிறந்தான்.  ரெண்டு காதுலேயும் குண்டலம் மாதிரி இருந்துச்சுன்னு  மக வந்து சொன்னதும் கர்ண மகாராஜாவை நினைச்சுக்கிட்டு நாங்களும் புள்ளையைப் பார்க்க ஓடுனோம்.  கிடங்குலே ரெண்டு ரூபா கொடுத்தபிறகுதான்  துணிமூட்டையைக் கொண்டுவந்து பிரிச்சுக் காட்டுனாங்க. நல்லா பழுத்த இலந்தைபோல ரெண்டு காதுலேயும் லோலாக்கு..... பாவம்......

சரி. சந்த்ராக்காவைப் பார்க்கலாம்.  கை ரொம்ப கெட்டி. புளிபோட்டு தேய்ச்சப் பித்தளைப் பாத்திரங்கள் அப்படி ஜொலிக்கும். தேய்ச்சுக் கழுவுனதைப் பாயை விரிச்சுப்போட்டுக் காயவச்சுட்டு, வீட்டைப் பரபரன்னு மெழுகி முடிக்கும். அதுக்குள்ளே நல்லாக் காய்ஞ்சுபோன பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்துப்போய் அடுக்கி  வச்சுட்டுக் குளிக்கப்போகும்.  கால்வீசை மஞ்சளைப்போட்டுத் தேய்க்குமோ....... ஏற்கெனவே  லேசான மஞ்சள் நிற உடம்பு இப்போ தகதகன்னு மின்னும். வெளியே வரும்போது புடவையைச் சுத்திக்கிட்டு ஒரு துண்டைத் தலையிலே  கட்டி இருக்கும் பாருங்க....... ரெண்டாவதா ஒரு தலை முளைச்சதைப்போல..... இதுதான் எங்களுக்கு அப்போ ஆர்வத்தைக் கிளறும்.... நம்புங்க.... நாங்க சொல்றது அந்த ரெண்டாவது தலையை....துண்டை அவுத்துத் துவட்ட ஆரம்பிச்சா...... கண் கொட்டாமப் பார்ப்போம்.

எம்மாம் நீள முடி........... ஒரு வளைவும் நெளிவும் இல்லாம நேரா ஏதோ நீர்விழ்ச்சியில் இருந்து விழும் செங்குத்துத் தாரைபோல!  சந்த்ரா அக்காவுக்கு ஒரு பர்மீஸ் கலப்பு இருக்கு.  அந்த மஞ்சள் நிறம், கீறிவிட்ட கண்கள், நீளமுடி, கோணல்மாணல் இல்லாத குட்டிக்குட்டியானப் பல் வரிசை, கொஞ்சம் உசரம் குறைவான உடல் இப்படி எல்லாம்  பார்த்தவுடன் 'சட்'னு தெரிஞ்சுரும். வாயைத் திறந்தா மட்டும் பக்கா லோக்கல் மெட்ராஸ் 'தமிள்'தான்.

சந்த்ராக்காவுக்கு ஒரு பையன். பெயர் பளனி. வயசு அப்போ ஒன்னரை, ரெண்டு இருக்கலாம். கண்ணுமட்டும் பளிச்ன்னு துருதுருன்னு இருக்கும்.  
அக்காவுக்குச் சம்பந்தமே இல்லாத  நேர்மாறான  கச்சலான உடல்வாகு. அதானே அக்காவுக்கு சம்பந்தம் எப்படி  இருக்க முடியும்? அக்கா வீட்டுக்காரர்  இவன் ஒரு மூணுமாசக் குழந்தையா இருக்கும்போது 'எங்கிருந்தோ' கொண்டுவந்து கொடுத்தாராம். சந்த்ராக்காவுக்கு ரொம்ப வருசமாக் குழந்தைங்க இல்லையேன்ற ஏக்கம் தீர்த்தவன் பளனி.  அக்காவோட சந்தோஷம், துக்கம், கோபம் எல்லாத்துக்கும் இவந்தான் ஒரு வடிகால்.  பளனியைப் பார்த்தாலே அக்காவோட மூடு எப்படின்னு கண்டுபிடிச்சறலாம். 

பகுடர் அடிச்சுத் தலைசீவி,  நல்ல துணி போட்டுப் பளிச்சுன்னு இருந்தான்னா........ குஷி கூத்தாடுது.  
ஙொய் ஙொய்ன்னு சிணுங்கிக்கிட்டு இருந்தால் அக்கா  மனவருத்தமா இருக்கு.  கத்தலும் கதறலுமா இருந்தா பளனி பழம் தின்னுருக்கார். ஒதைப்பழம். இதுலே வேடிக்கை என்னன்னா...கண்ணுமண்ணு தெரியாமக் குழந்தையை பின்னிட்டு, அக்கா தன் தலையிலேயே டம்டம்ன்னு அடிச்சுக்கிட்டு அழும். அந்தச் சின்னக் கண்ணுலே அப்படி ஒரு ஆறு எங்கே இருந்து வருதுன்னு  தோணிப்போகும் நமக்கு.

ஆனா...ஒன்னு, இந்த அழுவாச்சி கிளுவாச்சி எல்லாம் வெள்ளிக்கிழமை தவிர்த்த மத்த நாட்களில்தான். வெள்ளிக்கிழமை மணி பன்னெண்டு ஆகும்போது அம்மாவும் மகனும் குளிச்சு முடிச்சு நல்ல துணி மாத்திப் பளிச்சுன்னு இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் இட்லிக்கார ஆயாகிட்டே வாங்கும் இட்லிதான்  பகல் சாப்பாடு. அப்பவே அக்கா ப்ரஞ்சு பழக்கம் வச்சுருந்துச்சு:-)))))

சரியா ஒரு மணிக்குக் கிளம்புனாதான் டிக்கெட்டுக் கிடைக்குமாம். வெள்ளி வெள்ளிக்குப் புதுப்படம் போடுவாங்கல்லே. எந்தப்படம் என்றது பிரச்சனை இல்லை. வெள்ளிக்கிழமை பகல் ஆட்டம் பார்த்துறணும். முதல்நாள் முதல் ஷோ.  அப்பெல்லாம் இந்தக் காலைக் காட்சிகள் புழக்கத்துக்கு வரலை.
 

சந்த்ராக்கா வீட்டுக்காரர் லாரி ஓட்டுறார்.  வாரத்துலே ஒரு நாளோ ரெண்டு நாளோதான் வீட்டுலே இருப்பார்.  சினிமாவுக்குக் கிளம்பும்போது அக்காவைப் பார்த்தால்  அவரு வந்துட்டாரா இல்லையான்னு தெரிஞ்சுரும். காது மூளியாக் கிடந்தா அவர் வரலை. வியாழன் சாயந்திரம் அஞ்சுவரை காத்துக்கிட்டு இருக்கும் அக்கா, (அஞ்சடிச்சுருச்சா அடிச்சுருச்சான்னு நாலுதபா வந்து கேட்டுக்கிட்டுப் போகுமே) சட்னு நம்ம தெருவிலேயே இருக்கும் மார்வாடி கடைக்குப் பாயும்.  லட்டுக்கம்மலைக் கழட்டிக்கொடுத்து பத்து ரூபா வாங்கிக்கும். சினிமாச் செலவுக்குக் காசு வேணுமுல்லே? அஞ்சு பத்துன்னு யாருகிட்டேயும் கடனுக்குக் கை நீட்டாது. இருக்கும் ஒரே நகை மார்வாடி கடைக்குப் போறதும் வாறதுமாத்தான்.

நிறைய வெள்ளைக்கல்லை வட்டமா அடுக்கிவச்சத் தோடுதான் லட்டுக்கம்மல். இதுகூட சந்த்ராக்கா வச்ச பெயர்தான். சினிமாவுக்குப்போய் வந்ததும்  தண்ணி பிடிக்கற சாக்குலே நம்ம வீட்டு முற்றத்துக்குக் குடத்தைத் தூக்கிட்டு  (அடிப்பம்பு அங்கேதான் இருக்கு) வந்ததும் சினிமாக் கதையையும் அதுலே வந்த பாட்டுகளையும் விஸ்தாரமாச் சொல்றதைக் கேக்கவே நாங்கக் காத்துக்கிடப்போம். பாடல்வரிகள் எல்லாம்  நினைவுருக்காதுன்னாலும்  பொருள் மட்டும் நல்லாவே நினைவிருக்கும். பட்டப்'பகல்லே உன்னை பாக்க வந்தா.... நீ நைட்டுத்தான்  வருவேன்னு அவ  திருப்பிவுட்டுட்டா......பாடிகினே அழுவா.' (பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன். அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்) எந்த விதமான பையாஸும் இல்லாம மனசுலே இருந்து வரும் உண்மையான விமரிசனம் அது.

குடும்பக் கதை பார்த்துட்டு வந்துச்சுன்னா .....கதை சொல்லும்போதே கண்ணுலே குளம் கட்டிக்கும். நாயகனோ நாயகியோ கஷ்டப்பட்டா...... சந்த்ராக்காவுக்கு கண்ணீர் பொத்துக்கிட்டு ஊத்தும். அடுத்த வெள்ளி வரும்வரை சினிமாப் பேச்சு வந்தா துக்கம் தொண்டையை அடைக்கத்தான் பேச்சே.

நாங்க அந்த வீட்டைக் காலி செஞ்சுபோய் ஒரு நாலைஞ்சு வருசம் இருக்கும். சந்த்ராக்காவை வேற பேட்டை மார்கெட்டில் பார்த்தேன். அக்காவுக்கு  முடி எல்லாம் கொட்டி எப்படியோ இருந்தாங்க. அந்த வட்ட முகமும் சின்னக்கண்ணும் இன்னும் வத்திப்போய்க் கிடந்துச்சு. காதுலே மட்டும் லட்டுக்கம்மலின் மின்னல். அதை வச்சுத்தான் நானும் அடையாளம் கண்டுக்கிட்டேன்னு வையுங்க.  ஒரு வருசமா உடம்பு ரொம்ப முடியலையாம். இந்தப் பேட்டையிலே புருசனுக்குத் தூரத்துச் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்துட்டாங்க. பளனி இஸ்கோலுக்குப் போறானாம். தர்மாஸ்பத்திரியிலே தினம் ஊசி மாத்திரைன்னு போய்க்கிட்டு இருக்குது.

பளனி அப்பா என்ன செய்யறாருன்னு கேட்டேன்.  லாரிதான் ஓட்டறாராம். அவருக்கும் இப்பெல்லாம் அவ்வளவா சுகமில்லைன்னு சொன்னாங்க.

அன்னிக்கு வெள்ளிக்கிழமைன்றது சட்னு ஞாபகம் வந்துச்சு. ஏங்க்கா.... சினிமாவுக்குப் போலையான்னு கேட்டால்.....ஊஹூம் னு தலை ஆட்டி, சினிமாவுக்குப் போறதில்லை இப்பெல்லாம்னு சொன்னப்ப எனக்கு மனசுக்குச் சங்கடமாப்போச்சு.

17 கருத்துகள்:

  1. துளசிதளம் அறிவோம். நாங்கள் ரசித்துப் படிக்கும் தளங்களில் ஒன்று. இன்று அவருடைய கதையைப் படித்தோம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. லட்டுக் கம்மல் பேர் நல்லா இருக்கிறது.
    இனி அது போல் தோடு போட்டு இருப்பவர்களைப் பார்த்தால் லட்டுக் கம்மல் பேர் நினைவும் சந்திராக்காவும் நினைவுக்கு வருவார்கள்.
    சரளமான நடை கதை அருமை.

    பதிலளிநீக்கு
  3. "எத்தனை மனிதர்கள் உலகத்திலே.... அம்மா எத்தனை இதயங்கள்.." பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போது தெரிந்தவர்களின் வாழ்க்கையை மாற்ற இயலுமா?

    எப்போதும்போல் வாழ்வில் பார்த்த சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறீர்கள் துளசி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  4. சாதாரண ஏழை எளிய மக்களின் அன்றாட ஏழ்மை நிலையின் கஷ்டங்கள், அவர்களின் அசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பொழுதுபோக்குகள் என எல்லாவற்றையும் தத்ரூபமாகச் சொல்லி, ’சந்திராக்காவின் லட்டுக் கம்மல்...’ என்று தலைப்பிட்டுள்ளது சுவாரஸ்யமே.

    கதாசிரியருக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. சந்திராக்காவின் கதையை மிக அழகாக சொல்லிட்டீங்க, கதை படிச்சு முடிவில் கவலையாய்ப் போச்சு, எப்படி இருந்தவ இப்படி ஆகிட்டாவே என.

    பதிலளிநீக்கு
  6. ஹை :) நம்ம துளசி அக்கா செல்லமா இன்னிக்கு கேட்டு வாங்கி போடும் கதை பகுதியில் ..
    அக்கா இதே மாதிரி ஒரு சந்திராக்கா எங்க வீட்டுக்கிட்டயும் இருந்தாங்க ..அதே வெள்ளை கல்லு வச்ச லட்டு கம்மல் ,அதே பர்மீஸ் லுக் ..அவங்க பேரு நான்சி ..நல்ல வசதியான வீட்டு பொண்ணை ஏமாத்தி கட்டிக்கிட்டாராம் அவர் கணவர் ..
    ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமில்லையா !!பார்த்த சம்பவத்தை அழகாய் கதையாய் சொல்லியிருக்கீங்க ..
    இந்த கதையை வாசிச்சு முடிச்சதும் ஊருக்கு போன் போட்டு கேக்க தோணுது ..எங்க ஏரியாவில் வசித்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும் ..

    பதிலளிநீக்கு
  7. அந்த காலத்தில் 'காரெக்டர்' என்று கடுகு எழுதியதுபோல் இருக்கிறது லட்டுக்கம்மல்:)

    பதிலளிநீக்கு
  8. சினிமாவும் மார்வாடிக்கடையும் இல்லாத ஏழைக்கதைகள் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது. குறிப்பாக லாரி ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தனியார் பஸ் ஓட்டுனர்கள் ஆகியோரைக் கவனித்தால், அவர்களின் மனைவிமார்களின் கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம். இவர்களைப் பற்றி நானும் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  9. தளம் வித்தியாசமாகவே உள்ளது. பின்பு முழுதும் வாசிப்பேன்.
    இனிய வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  10. சந்திரா அக்காவை நாமும் அருகிருந்து கண்டது போல் ஓர் உணர்வு! பேச்சு நடையிலேயே சந்திரா அக்காவின் கதையைச் சொல்லிவிட்டீர்கள்! லட்டு கம்மல் பெயரும் வித்தியாசமாய் இருக்கின்றது, பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  11. Read this story(real) series at marathadi itself. Your way of narration made me read this once again.
    Superb!
    I am a regular reader of Thulasidhalam. -- Ezhilarasi Pazhanivel

    பதிலளிநீக்கு
  12. மிகவும் இயல்பான நடையில் அழகான ஒரு கதையை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!. சிறு கதை காவலர் ஸ்ரீராமுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் வெள்ளி சினிமாவும் மாறும் நல்லகதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. லட்டுக்கம்மல் இன்னும் மினுமினுத்துக் கொண்டுதான் இருக்கிறது!!! நல்ல காலம் மார்வாடிக் கடைக்குப் பெர்மனென்டாகப் போகவில்லை!

    யதார்த்தம் அப்படியே காட்சியாக் விரிகிறது. துளசி சகோ/அக்காவிற்கு வாழ்த்துகள்! எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி சகோ/அக்காவின் கதையை இங்குப் பகிர்ந்து, கதையும் எழுதுவார்கள் என்பதையும் அறிய வைத்தமைக்கு. அவர்களது பயணக் கட்டுரைகள் மிகவும் பிரபலமாயிற்றே. அதுவும் கூட பேச்சு நடையில் னம்முடன் பேசுவது போலவே அமைந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
  15. ஹைய்யோ!!! இன்னிக்குத்தான் பார்த்தேன்... நம்ம சந்திராக்கா!

    ஃபிப் 28 ஆ.... கதை வெளி வந்த சமயம் நான் பயணத்தில். வீடு திரும்பியபின் வழக்கம்போல் வேலையோ வேலைதான். எப்படி மறந்தேன்னு தெரியலை.

    மிகவும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!